திருவண்ணாமலை லம்பாடி இன மாணவியின் நினைவாகிய மருத்துவக் கனவு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் லம்பாடி இனத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான சவுமியாவிற்கு 7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் கோவை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
திருவண்ணாமலையில் லம்பாடி இனத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மாணவி சவுமியா. மருத்துவம் படிக்கவேண்டும் என்கிற இவரது கனவு தற்போது நினைவாகியுள்ளது.
செங்கம் வட்டத்துக்கு உட்பட்ட பி.எ.தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணு. இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராதா. இந்தத் தம்பதியின் மகள் சவுமியா.
சவுமியா பொரசப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு முடித்தார். மருத்துவம் படிக்கவேண்டும் என்பதே இவரது கனவு. எனவே நீட் தேர்வுக்கு ஆயத்தமானார்.
சவுமியாவின் மருத்துவக் கனவையும் ஆர்வத்தையும் கண்ட இவரது பள்ளி தலைமை ஆசிரியர், இவர் நீட் தேர்வு எழுதத் தேவையான உதவிகளை செய்துள்ளார்.
சவுமியா கடின உழைப்புடன் படித்தார். இவரது உழைப்பிற்கு பலன் கிடைத்தது. தேர்வை நல்ல முறையில் எழுதி தேர்ச்சி பெற்று 184-வது இடத்தைப் பிடித்தார்.
இவருக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு முறையின்படி கோவை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் லம்பாடி இனத்தைச் சேர்ந்தவர்களில் மருத்துவம் படிக்க இருக்கும் முதல் மாணவி சவுமியா என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் பள்ளிகளுக்கு நிகரான தரத்துடன் தற்போது அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்குடன் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7.5% உள் இட ஒதுக்கீட்டு முறையால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவும் நினைவாகி வருவது நம்பிக்கையளிக்கிறது.
கட்டுரை: Think Change India | தகவல் மற்றும் பட உதவி: நியூஸ்7