இனி சைவப் பிரியர்களுக்கு அதிக புரோட்டின் சத்து: இந்திய சந்தையில் இந்தோனேஷிய ‘டெம்பே’ அறிமுகம்!
பெங்களூருவை தலைமையாகக் கொண்டு செயல்படும் Vegolution சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு புரோட்டீன் சத்து அதிகரிக்க உதவும் இந்தோனேஷிய உணவு வகையான ‘டெம்பே’-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
பன்னீர், நூடுல்ஸ் போன்ற உணவுகளை நம்மில் பெரும்பாலானவர் பயன்படுத்தி இருப்போம். அல்லது குறைந்தபட்சம் அப்படி ஒரு உணவு இருக்கிறது என்னும் விழிப்புணர்வாவது நம்மிடம் இருக்கிறது. ஆனால், ‘டெம்பே’ ‘Tempeh' என்னும் புதிய உணவு வகை தற்போது இந்திய சந்தையில் வளரத்தொடங்கி இருக்கிறது. இந்தோனேஷியா அருகில் உள்ள ஜாவா தீவில் பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் உணவு. தற்போது சர்வதேச உணவாக மாறி வருகிறது.
பெங்களூருவை தலைமையாகக் கொண்டு செயல்படும் Vegolution நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சித்தார்த் ராமசுப்ரமணியன் உடன் உரையாடினேன். இவரது ஆரம்ப காலம் எப்படி இருந்தது, இந்த உணவின் தேவை என்ன சந்தை எப்படி இருக்கிறது. முதலீடு வாய்ப்புகள் குறித்து உரையாடினேன்.
சொந்த ஊர் திருநெல்வேலி என்றாலும் சர்வதேச அளவில் பயணம் செய்திருக்கிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் மத்திய கிழக்கு நாடுகள் என சர்வதேச அனுபவமிக்கவர். பெரும்பாலும் ஹாஸ்பிட்டாலிட்டி ரியல் எஸ்டேட் துறைகளில் பணியாற்றி இருக்கிறார். 2012ம் ஆண்டு முதல் ஷோபா டெவலப்பர்ஸ் எனும் முக்கியமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் துபாய் பிரிவு தலைமைச் செயல் அதிகாரியாக சில ஆண்டுகள் பணியாற்றினார்.
ஆரம்பகாலம்
இவ்வளவு பெரிய பொறுப்பை விட்டு நிறுவனம் தொடங்கக் காரணம் என்ன, தவிர ஒவ்வொரு தலைமைச் செயல் அதிகாரியும் குறிப்பிட்ட பிராந்தியத்திலே பணியாற்றி இருப்பார்கள். ஆனால், உங்களுக்கு சர்வதேச அனுபவம் இருப்பதால் பன்னாட்டு நிறுவனங்களின் முக்கியமான தேர்வாக நீங்கள் இருப்பீர்களே என அடுத்த கட்ட உரையாடலுக்கு சென்றேன்.
கார்ப்பரேட்டில் ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் நிதி சார்ந்த சுதந்திரம் கிடைத்துவிடும். அதனால், அதற்கு பிறகு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் எனும் எண்ணம் எழுவதை தவிர்க்க முடியாது. தவிர சர்வதேச அனுபவம் இருப்பதால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் குரோத் ஸ்டோரி என்பது தெளிவாகத் தெரிந்தது.
”இந்திய மக்களின் சராசரி வயது, மற்றும் வளர்ச்சி விகிததை பார்க்கும்போது அடுத்த 20 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பங்கேற்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் வெளிநாட்டில் தொழில் தொடங்குவதை விட இந்தியாவில் தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்தேன்,” என்றார்.
புரோட்டீன் பற்றாக்குறை
உணவுத்துறை சார்ந்து இயங்கலாம் என முடிவெடுத்து இந்தியாவின் உணவுப்பழக்கம் குறித்து ஆராயத் தொடங்கினோம். மேலோட்டமாக பார்த்தால் இந்தியாவில் 70 சதவீதத்துக்கு மேல் அசைவம் சாப்பிடுபவர்களாகத் தெரியும். 30 சதவீதத்தினர் சைவம். ஆனால் அசைவம் சாப்பிடுபவர்களின் அளவினை எடுத்தால் வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு மூன்று முறை என்னும் அளவிலே இருக்கும். இந்த அளவிலே சுமார் 40 சதவீதத்தில் அசைவம் சாப்பிடுகின்றனர்.
இந்தியாவில் புரோட்டீன் பற்றாக்குறை என்பது பொதுவாக இருக்கிறது. தற்போது பன்னீர் என உணவு வகைகள் வந்தாலும் தினமும் பன்னீரை சாப்பிட முடியாது. அப்போது மாற்று உணவாக ’டெம்போ’வை கொண்டுவரத் திட்டமிட்டோம்.
”சோயாபீன்ஸ் விதைகளை நொதிக்க வைத்து பன்னீர் கட்டிகளாக அல்லது சுண்டல், உப்புமா போன்ற பல வகைகளில் மாற்றிக்கொள்ள முடியும். இதனைதான் டெம்பே என்று அழைக்கிறோம். இதனை நமக்குப் பிடித்த வகையில் எளிதாக சமைத்துக்கொள்ள முடியும். இதனால் இந்தியர்களின் புரோட்டீன் பற்றாக்குறையும் குறையும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்,” என சித்தார்த் தெரிவித்தார்.
Vegolution நிறுவனம் தொடங்கி அதில் ‘Hello Tempayy' என்ற பெயரில் டெம்பே விற்பனை செய்யப்படுகிறது. இந்தியர்கள் விலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் 200 கிராம் டெம்பே ரூ.130 என விலையை நிர்ணயம் செய்திருக்கிறோம், என்றார்.
புரோட்டீன் பற்றாக்குறை இருக்கிறது என்பது உண்மைதான். அசைவம் சாப்பிடுபவர்களின் அளவும் குறைவுதான். ஆனால் இதனை 5 ரூபாய் முட்டை சரி செய்யுமே? எதற்காக ஹெல்லொ டெம்பேவை நான் வாங்க வேண்டும் என்று கேட்டதற்கு,
“முட்டை பெரும்பாலும் காலை உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மதியத்துக்கு என்ன செய்வார்கள். தவிர 20 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு உணவு குறித்து விழிப்புணர்வு இல்லை. அதனால் எது கிடைத்ததோ சாப்பிட்டார்கள். தற்போது விழிப்புணர்வு இருப்பதால் அனைத்து வகையான உணவுகளை சமமாக எடுத்துக்கொள்கின்றனர். டெம்பேவை ஏழு நாட்களும் சாப்பிட வேண்டாம். வாரத்துக்கு சில நாட்களாவது பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. அதற்கு ஏற்ப பல வகைகளில் அறிமுகம் செய்திருக்கிறோம்.”
நிதி சார்ந்த தகவல்கள்
நிறுவனம் தொடங்கும்போது நானும் என்னுடைய நிறுவனரும் 5 லட்சம் டாலர் அளவுக்கு முதலீடு செய்தோம். அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக முதலீட்டாளர்களில் 1.1 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்தார்கள். இந்தத் தொகை அடுத்த 18 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும்.
இப்போதைக்கு பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே எங்களுடைய பொருட்கள் கிடைக்க இருக்கிறது. இந்த நகரங்களில் ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த பிறகு மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவு படுத்த திட்டமிட்டிருக்கிறோம், என்றார் சித்தார்த்.
சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பொருளை அறிமுகம் செய்வது மிகப்பெரிய செலவு பிடிக்கும் விஷயமாக இருந்தது. தற்போது குறிப்பிட்ட நகரத்தில் குறிப்பிட்ட மக்களுக்கு எங்களது பிராண்டை கொண்டு சேர்க்க முடியும் என்பதால் நாங்கள் அவசரப்படவில்லை. நாங்கள் சீரான வளர்ச்சியையே விரும்புகிறோம்.
விற்பனை குறித்து கேட்டதற்கு, அது குறித்த தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது. ஆனால், தற்போது 3 டன் பொருட்களை தயாரிக்கிறோம். அடுத்த மாதத்தில் ஆறு டன் என்னும் இலக்கை அடைவோம். அடுத்த சில மாதங்களில் எட்டு டன் பொருட்களை தயாரிப்போம், என்றார்.
காரணம் தற்போது நாங்கள் இருக்கும் நகரங்களில் சீரான வளர்ச்சி அடைகிறோம். தவிர அமேசான், பிக் பாஸ்கட் உள்ளிட்ட தளங்களிலும் எங்களின் விற்பனை உயர்ந்துவருகிறது. மேலும், 8 புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் வைத்திருக்கிறோம், சைவம் சாப்பிடுபவர்களுக்கு புதிய ஆப்ஷனை வழங்குவதுதான் எங்களது திட்டம் என சித்தார்த் கூறினார்.
பன்னீர் போல டெம்பேவும் உணவுப்பழக்கத்தில் இணையலாம்.!