உங்கள் வயதான பெற்றோரை உங்களைப் போன்றே பார்த்துக்கொள்ள உத்தரவாதம் தரும் நிறுவனம்!
நொய்டாவைச் சேர்ந்த IVH சீனியர் கேர் முதியவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பராமரிப்பு மேலாளரை நியமித்து ஹெல்த்கேர் சேவைகள் வழங்கி சமூக இணைப்பையும் சாத்தியப்படுத்துகிறது.
முதியோர் பராமரிப்பு என்பது அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் முக்கியமானதாகும். ஆனால் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலரால் அவர்களது வயதான பெற்றோரை தங்களது விருப்பத்திற்கேற்ப பராமரிக்க முடிவதில்லை.
தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையத்தின் (NCBI) ஆய்வின்படி சமுதாயம் நவீனமயமானதால் கூட்டுக்குடும்ப அமைப்புகள் உடைந்து தனிக்குடும்ப அமைப்பு உருவானது. பலர் வாய்ப்பு தேடி வெவ்வேறு நகரங்களுக்கும் நாடுகளுக்கும் குடிபெயர்ந்து சென்றனர். பெற்றோர்கள் குழந்தைகளைப் பிரிந்து தனிமையில் வசிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் முதியோர்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கத் துவங்கியது.
முதியோர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் ஆதரவளிக்க மன்ரீத் கலன் மற்றும் ஸ்வதீப் ஸ்ரீவத்சவ் 2016-ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் ’IVH சீனியர் கேர்’ துவங்கினர். இந்த ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப் அடிப்படை மருத்துவ வசதி, வீட்டிலேயே ஹெல்த்கேர் சேவை வழங்குவது, ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு பராமரிப்பு மேலாளர் மூலம் சமூகத்துடன் இணைய உதவுவது என இந்தியாவில் தனிமையில் வசிக்கும் முதியவர்களுக்கு சேவையளித்து வருகிறது.
ஆரம்பத்தில் IVH டெல்லி என்சிஆர், சண்டிகர், அம்பாலா, பெங்களூரு, புனே ஆகிய பகுதிகளில் சோதனை முறையில் சேவையளித்தது. தற்போது ஹப்-அண்ட்-ஸ்போக் மாதிரி மூலம் இந்தியாவில் 25-க்கும் அதிகமான நகரங்களில் சேவையளித்து வருகிறது. சுமார் 1,200 நோயாளிகளுக்கு சேவையளிக்கிறது. இதில் 415 பேர் சந்தா மாதிரியில் இணைந்துள்ளனர்.
”நாங்கள் முதியோர்களுக்கு சேவையளிக்கும் இளம் நிறுவனம். இந்தியா வளர்ந்து வரும் விகிதத்திற்கு ஏற்ப எங்களது சேவைகளையும் விரைவாக விரிவுபடுத்தி வருகிறோம். அதே சமயம் தரமான தீர்வளிப்பதையும் உறுதி செய்கிறோம்,” என்றார் ஸ்வதீப்.
ஸ்வதீப் மற்றும் மன்ரீத் தங்களது புதுமையான தீர்வுகள் மூலம் முதியவர்களுக்கு சேவையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். 3.5 கோடி ரூபாய் ஆரம்ப முதலீடுடன் துவங்கப்பட்ட இவர்களது நிறுவனம் தற்போது 8 மில்லியன் டாலர் சீட் நிதியை எதிர்நோக்கியுள்ளது.
துவக்கம்
பாதுகாப்புத் துறை ஊழியர்களின் குடும்ப அமைப்பைப் பார்த்தபோதுதான் நிறுவனம் துவங்கவேண்டும் என்கிற எண்ணம் மனதில் தோன்றியதாக அவர் தெரிவிக்கிறார். அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் பணி நியமனம் செய்யபட்ட பகுதிக்கு வெகு தொலைவில் செல்ல நேரும்போது அவர்களது சொந்த பகுதியைச் சேர்ந்த சமூகம் அவர்களது குடும்பத்திற்கு ஆதரவளிக்கிறது.
”2008-ம் ஆண்டு பொதுமக்களுக்கும் அதே போன்ற அமைப்பை உருவாக்கவேண்டும் என்று சிந்திக்கத் துவங்கினேன். ஏனெனில் நானும் என்னுடைய சகோதரியும் என் அம்மாவை விட்டு தொலைவில் வசிக்க நேர்ந்ததால் எங்கள் அம்மாவை கவனிக்க ஆள் தேவைப்பட்டது,” என்றார்.
முதியோர்களை பராமரிப்பதற்காக மேலாளர்களுக்கு பயிற்சியளித்து குடும்ப ஆதரவு அமைப்பினை மன்ரீத் பரிசோதனை செய்து வந்த நிலையில் இண்டியன் வெர்சுவல் ஹாஸ்பிடலின் கீழ் இயங்கும் IVH Care என்கிற சிறப்பு பராமரிப்பு திட்டத்தை நடத்தி வந்த ஸ்வதீப்பைத் தொடர்பு கொண்டார். இருவரும் ஒன்றாக பணிபுரிய ஒப்புக்கொண்டு IVH சீனியர் கேர் அறிமுகப்படுத்தினர்.
கோரக்பூரைச் சேர்ந்த ஸ்வதீப் ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப் துவங்குவதற்கு முன்பு Via Media Communication என்கிற மருத்துவமனைக்கான தொடர்பு சேவை வழங்கும் சொந்த நிறுவனத்தை நடத்தி வந்தார்.
பாதுகாப்புத் துறையின் மாதிரியை செயல்படுத்துதல்
பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களின் தனித்துவமான குடும்ப ஆதரவு அமைப்பானது சமூக அளவில் செயல்படுகிறது என்கிறார் மன்ரீத்.
கடற்படையைச் சேர்ந்தவர்களது குடும்பங்களில் காணப்படும் பராமரிப்பு அமைப்பை கவனிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தத் துறையில் பணிபுரியும் சிலர் கப்பலில் பணிபுரிவோரின் குடும்பங்களுக்கு உதவ கரையில் இருந்து செயல்படுவார்கள்.
”எங்களது பராமரிப்பு மேலாளர்கள் அவர்களது குடும்பத்தில் இருந்த முதியவர்களை மாதாந்திர செக் அப், கோயில், ஷாப்பிங் என பல இடங்களுக்கு அழைத்து செல்வார்கள்,” என்றார்.
மன்ரீத் அதே மாதிரியைப் பின்பற்ற விரும்பினார். உயர்தர நம்பகமான தீர்வுகளை உறுதிப்படுத்துவதற்காக வலுவான மருத்துவ பயிற்சியாளர்கள் குழுவை உருவாக்க பாதுகாப்புத் துறை முன்னாள் ஊழியர்களை இணைத்துக்கொள்ள நிறுவனர்கள் தீர்மானித்தனர்.
”பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள் எங்களது பராமரிப்பு மேலாளர்களாக இருப்பதால் நேர்மை, தலைமைத்துவம், முதியோர்களுக்கு சேவையளிக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன்கூடிய செயல்பாடுகள் போன்றவற்றை எங்களது பராமரிப்பு மையங்களில் பார்க்கமுடிகிறது,” என்றார் மன்ரீத்.
ஹெல்த்கேர் சேவையை வீட்டிற்கு கொண்டு சேர்த்தல்
முதியவர்களை ஹெல்த்கேர் மையத்திற்கு அழைத்துச் செல்வது கடினம் என்பதால் IVH சீனியர் கேர் வீட்டிலேயே ஹெல்த்கேர் சேவையை கொண்டு சேர்க்க தீர்மானித்தது. பராமரிப்பு மேலாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் போன்றோரை நியமித்து வாடிக்கையாளர்களுக்குத் தேவையான லாஜிஸ்டிக்ஸை வழங்குகிறது. ஸ்வதீப் கூறுகையில்,
“அனைத்தையும் வீட்டில் டெலிவர் செய்யும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதில் ஹெல்த்கேர் சேவையையும் ஏன் இணைத்துக்கொள்ளக்கூடாது? அத்துடன் தற்போதைய கட்டமைப்புடன் இந்தியாவில் ஹெல்த்கேர் சுமை அதிகமாகவே உள்ளது,” என்றார்.
முதியோர்களுக்கு மருத்துவ ஆதரவும் உதவியும் வழங்குகிறது IVH. வாடிக்கையாளர்கள் விடுமுறையில் செல்லும்போதோ அல்லது உதவி தேவைப்படும் நேரங்களிலோ பராமரிப்பு மேலாளர்கள் உதவிக்கு வருவார்கள். நர்சிங், பிசியோதெரபி, அவசரகால ஆதரவு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பிறகு நோயிலிருந்து மீள்வதற்கான சேவையையும் வழங்குகிறது.
ஹெல்த்கேர் சேவையையும் தாண்டி...
கேட்கும் குறைபாடுள்ள எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு சேவையளித்ததே IVH-ன் முதல் சேவையாகும். அறுவைசிகிச்சை அவசியமாய் இருந்த இந்த நோயாளியுடன் பராமரிப்பு மேலாளர் சிகிச்சை முழுவதும் உடன் இருந்தார்.
முதியோர் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்றும் இதில் மருத்துவ ஹெல்த்கேர் சேவைகள் மட்டுமின்றி முதியோர்கள் திரைப்படத்திற்கும் மத ரீதியான பயணங்களுக்கும் அழைத்து செல்லப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார் ஸ்வதீப்.
முதியோர்கள், குறிப்பாக குழந்தைகளுடன் பரபரப்பாக இருந்தவர்கள் தனிமையில் மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். IVH வாடிக்கையாளர்களில் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்கள் வெளிநாட்டில் வசிக்கும் அவரது இரண்டு மகன்களுடன் சென்று தங்குவார். மற்ற நாட்களில் டெல்லியில் தனியாகவே இருப்பார். தனது மகன்களுடனும் பேரக்குழந்தைகளுடனும் நேரம் செலவிட விருப்பம் இருந்தாலும் உடன் யாரும் இல்லாத காரணத்தால் தனிமையை அனுபவித்துள்ளதாக எங்களது பராமரிப்பு மேலாளரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் டெல்லியில் பராமரிப்பு மேலாளரின் உதவியுடன் ஒரு வலுவான சமூக இணைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
வருவாய் மாதிரி
IVH மாத சந்தாவாக 800 ரூபாயும், மூன்று மாதங்களுக்கு 3,000 ரூபாயும் ஆறு மாதங்களுக்கு 5,400 ரூபாயும் நிர்ணயித்துள்ளது. சந்தா அடிப்படையில் இணைவோரை பராமரிப்பு மேலாளர் ஒவ்வொரு மாதமும் ஒரு முறை இலவசமாக சந்திப்பார். அதன் பிறகு ஒவ்வொரு முறை வருவதற்கும் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும்.
சராசரியாக பராமரிப்பு மேலாளர் ஒரு மாதத்தில் ஒரு க்ளையண்டை வெவ்வேறு காரணங்களுக்காக நான்கிலிருந்து ஐந்து முறை சந்திப்பார். IVH சீனியர் கேர் அதன் பி2பி வணிகத்திற்காக தங்களது நோயாளிகளை பரிந்துரைக்கும் மருத்துவமனைகளுக்கு தொடர்ச்சியான திட்டங்களை வழங்குகிறது.
எதிர்காலத் திட்டம்
IVH சீனியர் கேர் தற்போது மெட்ரோ மருத்துவமனை, PSRI மருத்துவமனை, ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை, இந்திரபிரஸ்தா அப்போலோ, ராக்லாண்ட், கொலம்பியா ஏசியா, ஃபோர்டிஸ், மேக்ஸ் க்ரூப் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ் என நாடு முழுவதும் உள்ள 100-க்கும் அதிகமான NABH மருத்துவமனைகளுடன் இணைந்துள்ளது. 500-க்கும் அதிகமான சிறப்பு மருத்துவ ஆலோசகர்களுடனும் இணைந்துள்ளது.
இந்தியாவில் முதியோர்கள் எண்ணிக்கை தற்போதுள்ள 104 மில்லியனில் இருந்து 2050-ம் ஆண்டு 324 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் IVH சீனியர் கேர் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என நம்புகிறது.
ஆங்கில கட்டுரையாளர் : கிருஷ்ணா ரெட்டி | தமிழில் : ஸ்ரீவித்யா