எல்ஜிபிடி சமூகத்தினருக்கு ஆதரவாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட செயலி!
எல்ஜிபிடி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பான தளத்தை உருவாக்கி ஆலோசனையும் ஆதரவும் அளிப்பது குறித்து விவரிக்கிறார் டெல்டா நிறுவனர் இஷான் சேதி.
2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்த உச்சநீதிமன்றம் தன்பாலின உறவு குற்றமல்ல என தீர்ப்பளித்தது. வண்ணமயமான கொடிகள், தீர்ப்புக்கு ஆதரவான கூக்குரல்கள், ஆனந்தக் கண்ணீர் என இந்தத் தீர்ப்பினை எல்ஜிபிடி சமூகம் உற்சாகமாகக் கொண்டாடியது.
எல்ஜிபிடி சமூகத்திற்கு ஆதரவான ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் போன்றோரின் பத்தாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு, 1861-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் விதிக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் இறுதியாக ரத்து செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானபோது இஷான் சேதி உச்சநீதிமன்றதுக்கு வெளியே உற்சாகமாக இருந்ததை நினைவுகூர்ந்தார். இவர் எல்ஜிபிடி சமூகத்திற்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு டேட்டிங் செயலியை உருவாக்கியுள்ளார்.
“இது என் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,” என்றார்.
இந்த வரலாற்று தீர்ப்பு வெளியான பிறகான முதல் காதலர் தினத்தில் செயலி உருவாக்குவது தொடர்பான அவரது இரண்டாண்டு காலப் பயணம், அதற்கு எழுந்த எதிர்ப்புகள், காதல் என்பது அனைவரையும் உள்ளடக்கியது என்பன குறித்த பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
பாதுகாப்பான பகுதியை உருவாக்கினார்
இந்திய நீதிமன்றங்களில் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்கான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இஷான் எல்ஜிபிடி சமூகத்தினர் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வதற்கான பாதுகாப்பான தளத்தை அமைத்துக் கொடுக்கும் செயலி தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தார். நிதி மட்டுமல்லாது பல்வேறு சவால்களையும் சந்தித்துள்ளார்.
”நிதி திரட்டுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவது அதிக சவால் நிறைந்ததாக இருந்தது. இது குறித்த புரிதல் இல்லாத காரணத்தால் மக்கள் இதில் பங்களிக்கத் தயங்கினார்கள்,” என்றார் இஷான்.
சட்டரீதியான விளைவுகள் ஏதும் இல்லை என்றாலும் பிராண்டுகள் எந்தவித சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என இஷான் விவரித்தார்.
டெல்டா 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறு குழுவுடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் குழு செப்டம்பர் மாதம் அதன் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத் துவங்கியது. இந்நிறுவனத்தின் 80 சதவீத வளர்ச்சி நிறுவன அமைப்பிற்குள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வாயிலாகவே உள்ளது என்கிறார் இதன் நிறுவனர்.
தற்சமயம் இந்தத் தளத்தில் 65,000 பயனர்கள் இணைந்துள்ளனர். Shunwei Capital, TrulyMadly.com இணை நிறுவனர் சச்சின் பாட்டியா, உயர் நிகர மதிப்புடைய தனிநபர்களான கேசவ் சூர், ரித்து டால்மியா போன்றோர் விதை நிதி வழங்கியுள்ளனர்.
தற்போது இஷான் சீரிஸ் ஏ நிதிச்சுற்று குறித்து பேசிவருகிறார். டெல்டா தொழில்நுட்பக் குழுவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனர்களில் 50 சதவீதம் பேர் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள். எனவே இவர்களுக்கு மொழியினைத் தேர்வு செய்யும் வசதிகளை வழங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கு தீர்வுகாண்பதிலும் கவனம் செலுத்த உள்ளது.
சமூகத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகச்சிறந்த தருணமாக அமைந்த நிலையில் இது செயலியை சிறிதும் பாதிக்காது என்கிறார் இஷான்.
“சட்ட ரீதியான மாற்றம் என்பது வேறு, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது வேறு,” என்கிறார்.
எனினும் பிராண்டுகள் திடீரென்று டெல்டாவில் ஆர்வம் காட்டுவதே டெல்டா தரப்பில் சந்திக்கும் மாற்றமாகும். சட்டப்பிரிவு 377 ரத்து செய்யப்படுவதற்கு முன்பு பிராண்டுகள் டெல்டாவுடன் இணைந்திருக்க தயக்கம் காட்டியது. ஆனால் இன்று சமத்துவத்திற்கான உறுதிமொதி (Delta Equality Pledge) எடுத்துக்கொண்டு டெல்டாவுடன் இணைந்திருக்க ஆர்வம் காட்டுகிறது. இந்த உறுதிமொழியின்படி அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான பகுதியை அவர்கள் உருவாக்கவேண்டும்.
ஏதேனும் பாதகமான சூழல் ஏற்படும் நிலையில் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். உதாரணத்திற்கு எந்த ஒரு டெல்டா பயனரும் நாட்டின் ஏதோ ஒரு பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும்போது உறுதிமொழி எடுத்துக்கொண்ட பாதுகாப்பான பார் மற்றும் உணவகங்களைக் கண்டறியலாம். இஷான் கூறுகையில்,
“பிராண்டுகளுடன் நெறிமுறை சார்ந்து இணைந்துகொள்ள விரும்புகிறோம். சட்டப்பிரிவு 377 ரத்து செய்யப்பட்டதால் நாங்கள் பிரபலமாகவில்லை. இந்த சமூகத்தின் நலனில் கவனம் செலுத்தவே நாங்கள் விரும்புகிறோம். டெல்டா, சமூகத்தால் உருவானது. சமூகத்திற்காக உருவானது,” என்றார்.
டெல்டா சேவைகள்
டெல்டா வெறும் டேட்டிங் செயலி மட்டுமல்ல. இது கனெக்ட், நெட்வொர்க், கம்யூனிட்டி ஆகிய மூன்று முக்கிய சேவைகளை வழங்குகிறது. டெல்டா கனெக்ட், பயனர்கள் ஒத்த சிந்தனையுடைய மக்களை சந்திக்க உதவும் பாதுகாப்பான தளமாகும். அவர்களது போன் நம்பர், இமெயில், செல்ஃபி செக் போன்றவை மூலம் பயனர்கள் தாங்களே தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம். பிறகு மேட்ச் அல்லது டிஸ்கவர் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கேள்வி பதிலை அடிப்படையாகக் கொண்டு செயலி சுயவிவரங்களை பரிந்துரை செய்ய மேட்ச் உதவுகிறது. பயனர் செயலியில் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த டிஸ்கவர் வசதி உதவுகிறது.
உங்களுக்கு யாரேனும் ஒருவரைப் பிடித்திருந்தால் நீங்கள் ’லைக்’ அனுப்பலாம் அல்லது ’ஸ்பார்க்’ பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம்.
“ஆனால் அந்த நபர் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாதவரை உங்களால் அவருடன் உரையாட முடியாது,” என்றார் இஷான்.
ஒரு நபரின் ட்ரஸ்ட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட ஸ்பார்க்ஸ் எண்ணிக்கை ஒதுக்கப்படுகிறது.
இந்த சமூகத்தினர் தனிப்பட்ட இடங்களிலும் பொது இடங்களிலும் சுதந்திரமாக இருக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் டெல்டா நெட்வொர்க் என்கிறார் இஷான்.
”நீங்கள் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டாலும் உங்களை விநோதமாக பார்க்காத சூழல் இருக்கும் உணவகத்தையோ மற்ற பகுதியையோ கண்டறிவது கடினம். எல்ஜிபிடி சமூகத்தினருக்கு ஏற்றவாறான பார்கள் மற்றும் உணவகங்களின் பட்டியலை டெல்டா நெட்வொர்க் வழங்குகிறது,” என்றார் நிறுவனர்.
இறுதியாக மக்கள் குழுவாக ஒன்றிணைந்து, மனம் திறந்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, ஆலோசனைகள் வழங்கி ஆதரவளித்துக் கொள்ளத் தேவையான பகுதியை டெல்டா கம்யூனிட்டி வழங்குகிறது.
“மற்றவர்களிடம் பேசக் கூச்சப்படுபவர்கள், குழுவில் உள்ள மற்ற நபர்களுடன் இணையத் தயங்குபவர்கள், பாலியல் சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு குறித்தோ அல்லது மன ஆரோக்கியம் குறித்தோ விவாதிப்பவர்கள் போன்றோர் அடங்கிய நூற்றுக்கணக்கான குழுக்கள் உள்ளது,” என்றார்.
தனித்துவம்
டெல்டா மக்களுக்கான பாதுகாப்பான தளமாக இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார் இஷான். ’Grindr’ போன்ற செயலிகள் இந்தியாவில் உருவாக்கப்படாத காரணத்தால் அவை இந்திய சமூகத்திற்கு ஏற்றவாறு இருப்பதில்லை. மற்ற பகுதிகளைக் காட்டிலும் இங்குள்ள பிரச்சனைகள் மாறுபட்டதாகும். பாதுகாப்பு, அந்தரங்கம் போன்றவற்றில் நாம் கவனம் செலுத்தவேண்டும்,” என்றார்.
இஷான் சீனாவைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான சமூக ஒருங்கிணைப்பு செயலியான Blued குறித்து பேசினார். குறைந்த வயதுடையோர் அதிக எண்ணிக்கையில் இணைந்திருப்பதாகவும் பல பயனர்களுக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதால் இந்தச் செயலி குறித்து விசாரணை நடந்துவருகிறது.
மக்களிடையே மன ஆரோக்கியம் மற்றும் பாலியல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டெல்டா பல்வேறு குழுக்களிலும் அமர்வுகளிலும் பங்களிப்பதுடன் எல்ஜிபிடி சமூகத்தின் நிலையை மேம்படுத்துவதறகான உலகளவிலான தளமாகவும் விளங்குகிறது.
டெல்டா, சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்ட பிறகு கொண்டாடப்படும் முதல் காதலர் தினத்திற்காக ’டெல்டா ப்ளைண்ட்’ என்கிற சேவையை பயனர்களுக்கு வழங்குகிறது. ஒரே மாதிரியான ஆளுமைகள் அல்லது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பயனர்களுக்கு ’Blind Dates’ வழங்கப்படுகிறது.
சந்தையில் பல்வேறு டேட்டிங் செயலிகள் இருக்கும் நிலையில் இஷான் சமூகத்திற்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார். “டெல்டாவில் மக்கள் உண்மையான அர்த்தமுள்ள உறவுகளைப் பெற விரும்புகிறேன். அது சாத்தியமானால் என்னுடைய பணி முடிவடைந்துவிடும்,” என்கிறார் இஷான்.
ஆங்கில கட்டுரையாளர் : அம்ருதா லக்கே | தமிழில் : ஸ்ரீவித்யா