வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்: பேப்பரில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்!
தமிழக வரலாற்றில் காகிதமில்லாத இ பட்ஜெட் முதல் முறையாக தாக்கல்!
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக பட்ஜெட் 2021-22-க்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை முதல்முறையாக தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
தமிழக வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் உரையை படித்து வருகிறார். இதன்காரணமாக அனைத்து அமைச்சர்கள் முன்பாகவும் கணினிகள் பொருத்தப்பட்டு, பட்ஜெட் விவரங்கள் பிடிஎப் (PDF) முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அதிமுக வெளிநடப்பு செய்தது.
பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர்,
“கொரோனா தொற்றுநோயால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருத்த பட்ஜெட்டாகத்தான் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும். இதற்கு அடுத்து வரும் பட்ஜெட்டுக்கு இந்த பட்ஜெட் ஒரு முன்னோட்டமாக இருக்கும்,” என்றார்.
அரசின் கடன் சுமை அதிகமாக இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். கடனை சுமையை சரிசெய்வது எங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அதை நிச்சயம் செய்வோம்.
மேலும், தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதையும் தேர்தல் வாக்குறுதியாகச் சொல்லி இருந்த நிலையில், அதை நிறைவேற்றும் விதமாக நாளை முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மத்திய அரசு பல்வேறு சுங்க வரி விகிதங்களை 10 சதவிகிதத்திலிருந்து 20% ஆக அதிகரித்திருக்கிறது. வரியை பிரித்துக் கொடுப்பதிலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் மாநில அரசின் வரி வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
”இதனால் ஜி.எஸ்.டி உள்பட அனைத்து வரிகளுக்கும் தனி ஆலோசனைக் குழு நிறுவப்படும். மேலும், அனைத்து குடும்பங்களில் பொருளாதார நிதி நிலைமையை தெரிந்துகொள்ள, தகவல்களை திரட்ட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று நிதி அமைச்சர் கூறினார்.