'ஒரு நாள் மாவட்ட ஆட்சியர்’ பொறுப்பில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி!
முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள `பாலிகே பவிஷ்யது’ என்கிற திட்டத்தின்கீழ் ஸ்ரவனி ஆந்திரப்பிரதேசத்தின் ஆனந்தபூர் மாவட்ட ஆட்சியராக ஒரு நாள் பொறுப்பேற்று பதவி வகித்தார்.
அக்டோபர் மாதம் 11-ம் தேதி ’சர்வதேச பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இது அனைவருக்கும் மறக்க முடியாத தினமாக இருப்பினும் ஸ்ரவனியின் நினைவிலிருந்து என்றென்றும் நீங்காத தினமாக மாறியுள்ளது.
ஸ்ரவனி ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தபூர் பகுதியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார். இங்குள்ள மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த ‘பெண் குழந்தைகளின் எதிர்காலம்’ என்கிற பொருள் கொண்ட ‘பாலிகே பவிஷ்யது’ எனும் திட்டத்தின்கீழ் ஸ்ரவனி ஒரு நாள் முழுக்க மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று செயல்பட்டுள்ளார். முதல் முறையாக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி குறித்து மாவட்ட ஆட்சியர் காந்தம் சந்துருது அறிவிப்பு வெளியிட்டார்.
ஸ்ரவனி பொறுப்பேற்ற அன்றைய தினத்தில் இரண்டு முக்கியக் கோப்புகளுக்கு அனுமதி அளித்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு 25,000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார்.
அரசு அலுவலகங்களில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பெண் ஊழியர்கள் யாருக்கும் எந்தவித பணியும் ஒதுக்கப்படக்கூடாது என்கிற உத்தரவை பிறப்பித்தார். இவ்வாறு ’நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிட்டுள்ளது.
அன்றைய தினம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று பணியாற்ற குலுக்கல் முறையில் பெயர் தேர்வு செய்யப்பட்டது. அப்படித்தான் ஸ்ரவனியின் பெயர் தேர்வாகியுள்ளது. இவரது அப்பா விவசாயி. அம்மா தினக்கூலியாக வேலை செய்கிறார்.
ஸ்ரவனி மாவட்ட ஆட்சியராக செயல்பட்ட அந்த நாளில் கள நிலவரம் குறித்து தெரிந்துகொள்ள ஆனந்தபூர் நகரைப் பார்வையிட்டார். பின்னர் மந்திராலயம் ராகவேந்திர ஸ்வாமி கோயில் அருகே தண்ணீர் தேங்கியிருப்பது உள்ளிட்ட அங்குள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினார்.
அதுமட்டுமின்றி நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியை ஆய்வு செய்து சிறிது நேரம் செலவிட்டார். ’ஜெகனண்ணா வித்யா கனுகா’ மற்றும் ‘நாடு நேடு’ திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். காந்தம் சந்துருது `நியூஸ்18’ இடம் கூறும்போது,
“மாணவர்கள் அதிகாரிகளின் பொறுப்புகளை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கேற்ப வாழ்க்கையில் இலக்கு நிர்ணயித்து வெற்றியடையவேண்டும். இதற்காகவே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் முக்கியப் பொறுப்புகள் வகிக்கும்போது மக்களுக்கு நீதி கிடைக்கும்,” என்றார்.
சாலை பாதுகாப்பை மேம்படுத்துவது, குழந்தைகள் நலனில் பங்களிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட இருப்பதாக ஸ்ரவனி தெரிவித்தார். சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும் என்றும் விவசாயிகளின் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
கட்டுரை: THINK CHANGE INDIA