'என் சம்பளத்தை கொடுத்து உயிரைக் காப்பாத்த விரும்புகிறேன்’ - காய்கறி வியாபாரி மகனின் நெகிழ்ச்சி மெசேஜ்!
காய்கறி விற்பனையாளர் மகனின் தாராள மனசு!
கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளில் மற்ற நாடுகளை விட இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் பற்றாக்குறை, இருப்பதால் ஒவ்வொரு நாளும் கொரோனா இரண்டாம் அலை சோக செய்திகளை தான் தருகிறது. இரண்டாவது அலை முதல் அலையைவிட ஆபத்தானது மற்றும் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று மக்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள்.
உதவிகள் மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், நாடு முழுவதிலுமிருந்து மக்கள் ஒருவருக்கொருவர் உதவ பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஒன்றாக இணைந்து வருகின்றனர். ரெம்டெசிவிர் மருந்து முதல் வீட்டில் சமைத்த உணவு வரை, நெட்டிசன்கள் பல வழிகளில் உதவியை செய்து வருகிறார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தாலும் பரவாயில்லை, அத்தகைய கடினமான நேரத்தில் அவர்கள் நாட்டிற்காக இருக்க விரும்புகிறார்கள்.
அப்படி செய்த உதவி தற்போது டுவிட்டர் வாசிகளை நெகிழ்வைத்து வருகிறது. மும்பையைச் சேர்ந்த இருதயநோய் மருத்துவர் டாக்டர் ஸ்னேஹில் மிஸ்ரா ஒரு காய்கறி விற்பனையாளரின் மகனிடமிருந்து தனக்குக் கிடைத்த செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் தான் இந்த செய்தி தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட காய்கறி விற்பனையாளர் டாக்டர் மிஸ்ராவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரின் மகன் மிஸ்ரா ஒரு மெசேஜ் செய்துள்ளார். அதில்,
“ஹாய் சார், மருத்துவமனை வென்டிலேட்டர் செலவு அல்லது மருந்து செலவை சமாளிக்க அல்லது கட்ட முடியாத ஏதேனும் கொரோனா நோயாளி, ஏழைக் குடும்பமாக இருந்தால் தயவுசெய்து என்னிடம் சொல்லுங்கள். எனது சம்பளத்தை பங்களிப்பாக கொடுத்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறேன். அப்படி யாரேனும் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்..." என்று தெரிவித்து இருக்கிறார் மிஸ்ராவிடம் சிகிச்சை பெற்று வரும் காய்கறி விற்பனையாளரின் மகன்.
இந்த மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட் எடுத்த மருத்துவர் மிஸ்ரா,
"நான் வார்த்தைகளை இழந்துவிட்டேன், இவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள்..." என்று ட்வீட் செய்துள்ளார்.
இத்தகைய முகமற்ற ஹீரோக்களுக்கு பெரும்பாலும் அதிக அங்கீகாரம் கிடைப்பதில்லை. இருப்பினும், இந்த ஸ்கிரீன் ஷாட் இணையங்களில் வைரல் ஆனது. நெட்டிசன்கள் பலரும் முகம் தெரியாத காய்கறி விற்பனையாளரின் மகனை பாராட்டி வருகிறார்கள்.
"இது அழகாக இருக்கிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்களை விட அதிக நற்பண்புடையவர்கள் மற்றும் தாராளமானவர்கள் என்பதை தரவு தொடர்ந்து காட்டுகிறது. மேலும், மற்றவர்களின் நலனில் அவர்களுக்கு அதிக இரக்கமும் அக்கறையும் இருக்கிறது," என்று டுவிட்டர் பயனர் புகழ்ந்துள்ளார்.
இதற்கிடையே, காய்கறி விற்பனையாளரின் மகன் செய்த செயலின் தாக்கம் காரணமாக அவரை போலவே உதவப்போவதாக பலர் கூறி வருகின்றனர்.