1 லட்ச இலவசத் துணிப்பைகளை சிறு தொழிலாளிகளுக்கு வழங்கும் சகோதரர்கள்!
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து மக்கள் பழயபடி துணிப்பைகளுக்கும், ஆர்கானிக் மக்கும் பிளாஸ்டிக்கும் மாறினர். இதற்குத் துணை போகும் வகையில் 12, 16 வயதான சகோதரர்கள் இருவர் தமிழகத்திலுள்ள சிறு தொழிலாளிகளுக்கு 1 லட்சம் துணிப்பைகளை வழங்க வேண்டும் என்று ’மிஷன் 1 லாக்’ என்ற பிரச்சாரத்தை துவங்கினர்.
சென்னையை சேர்ந்த ப்ரீத் அஸ்வனி (12) மற்றும் ஜெய் அஸ்வனி (16) என்ற சகோதரர்கள் வழக்கம்போல் தங்கள் பெற்றோருடன் தங்கள் இடத்தில் சுற்றியுள்ள அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு சென்று அரசி மூட்டைகளை தியானம் செய்துள்ளனர். அப்பொழுது ஒரு இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் துணிப்பைகளை தயாரிப்பதை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர் இந்த சகோதரர்கள்.
“அவர்கள் துணிப்பைகளை தைப்பதை பார்த்து சிலிர்த்துப்போனேன்; அது ஒரு கலை. இவ்வளவு திறமை கொண்டிருக்கும் இவர்கள் இதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நானும் என் தம்பியும் இணைந்து அவர்களுக்கு உதவ முடிவு செய்தோம்,” என்கிறார் ஜெய்.
இது குறித்து பெற்றோர்களுடனும் அந்த விடுதி உரிமையாளர்களிடம் பேசி அனுமதிபெற்ற பின் குறைந்த விலைகளில் துணிகளைப் பெற்று பைகளை தைக்க முடிவு செய்தனர். அதன் பின் தங்களது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனைப்படி பழைய தேவையில்லாத துணிகள் மற்றும் போர்வைகளை பயன் படுத்தும் முடிவுக்கு வந்தனர்.
அக்டோபர் மாதமே இந்த யோசனையை அமல்படுத்த முடிவு செய்த இவர்களுக்கு தமிழகத்தின் பிளாஸ்டிக் தடை இவர்களின் போக்கை எளிமையாக்கியது. இலவசமாக 1 லட்ச துணிப்பைகளை மக்களிடத்தில் சேர்த்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும் தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும் என முழு நம்பிக்கையுடன் இருந்தனர்.
“பிளாஸ்டிக் தடை மற்றும் எங்கள் மிஷன் இரண்டுமே சரியான நேரத்தில் அமைந்தது. பிளாஸ்டிக் தடையால் வாடிக்கையாளர்களுக்கு பைகளில் பொருளைக் கொடுக்க முடியாமல் வாடிகையாளர்களை பல வியாபாரிகள் இழந்தனர். சிறு தொழிலாளர்களுக்கு துணிப்பை வாங்கவும் வசதி இருக்காது,” என்கிறார்.
இதனால் இவர்களுக்குப் பைகளை இலவசமாக கொடுக்க முடிவு செய்தனர். ஆனாலும் பைகளைத் தைக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சன்மானம் போய் சேர வேண்டும் என்று நிதித் திரட்டி ஒரு பைக்கு ரூ.5 என்று வழங்கியுள்ளனர் இந்த சிறுவர்கள். பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு துணிப்பைகளை தயார் செய்து சம்பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துள்ளனர்.
இதுவரை 50 ஆயிரம் பைய்களை விநியோகம் செய்துள்ள இவர்கள் கூடிய விரைவில் தங்கள் இலக்கை முடிக்கும் முனைப்பில் உள்ளனர். இது மட்டுமின்றி B2W (Born 2 win) என்ற அமைப்பை 2012ல் இருந்து நடத்தி வருகின்றனர் இந்த சகோதரர்கள். பெருகிவரும் காற்று மாசை கட்டுப்படுத்த 2012ல் பட்டாசுகள் இல்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என்று போராடினர். இதனால் தங்கள் பள்ளி மற்றும் தெருக்களில் உள்ள மாணவர்களை சேகரித்து பட்டாசுகள் இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுத்தனர். இதில் கிட்டத்தட்ட 3000 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதனால் சுத்துவட்டாரத்தில் நல்ல பெயரை சம்பாதித்த இவர்கள் துணிப்பை யோசனை தெரிவித்ததும் அம்மக்கள் தயக்கமின்றி துணிகளை தானம் செய்ததோடு நிதி திரட்டவும் உதவியுள்ளனர்.
சென்னை ரோட்டரி கிளப்பும் துணிகளை சேகரித்து இவர்களுக்கு வழங்குகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். “ஒரு லட்ச துணிப்பை 10 லட்ச பிளாஸ்டிக் பைகளுக்கு சமானம்” என நம்பிக்கையுடன் முடிக்கிறார் இந்த இளம் தன்னார்வலர் ஜெய்.