தமிழக சிறுதொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மென்பொருள் அளிக்க முன்வந்துள்ளது Zoho!
ஜோஹோ நிறுவனம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் டிஜிட்டல் கல்வி பெறுவதற்கு உதவும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தனது மென்பொருளை சலுகை விலையில் வழங்குவதற்காக, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மென்பொருள் சேவை நிறுவனமான ஜோஹோ (Zoho ) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) டிஜிட்டல் கல்வி பெற உதவும் திட்டத்தின் ஒரு பகுதியாக தனது மென்பொருளை சலுகை விலையில் அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இதற்காக நிறுவனம், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் சங்கத்துடன் (TANSTIA) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
நிறுவனத்தின் வர்த்தக பென்பொருளை எப்படி தானியங்கிமயமாக்குவது என சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிறுவனம் ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கும்.
”டான்ஸ்டியா அமைப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் துறைக்கு சேவை ஆற்றி வருகிறது. எம்.எஸ்.எம்.இ துறையை பலப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும். கொஞ்சம் ஊக்கத்தை உண்டாக்கி, எம்.எஸ்.எம்.இ துறையில் முதலீடுகளை ஈர்ப்பது என்பது இப்போது எங்கள் இலக்காகும்,”
என்று இது தொடர்பான செய்தி வெளியீட்டில் டான்ஸ்டியா தலைவர் எஸ்.அன்புராஜன் கூறியுள்ளார். ஜோஹோ நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழகத்தில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
டான்ஸ்டியா அமைப்புடனான ஒப்பந்தம் குறித்து, ஜோஹோ கார்ப் இயக்குனர் (பொறியியல்), ராஜேந்திரன் தண்டபாணி பேசுகையில்,
“சிறு தொழில் நிறுவனங்கள் இப்போது தான் தங்கள் வர்த்தகத்தை ஆன்லைனுக்குக் கொண்டு வருகின்றன. ஜோஹோ, சர்வதேச அளவில் எண்ணற்ற சிறுதொழில் நிறுவனங்கள் ஆன்லைனில் செயல்பட உதவி வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, ஜோஹோ மற்றும் டான்ஸ்டியா, தொழில் முனைவோர் தங்கள் வர்த்தகத்தை டிஜிட்டல்மயமாக்க உதவும் வகையில் தமிழில் விழிப்புணர்வு உள்ளடக்கத்தை உருவாக்கும்.
இந்த மாத துவக்கத்தில், ஜோஹோ நிறுவனம், தனது ஜிஎஸ்டி மென்பொருள் சேவையான ஜோஹோ புக்ஸை, எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைந்த விற்றுமுதல் கொண்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த மென்பொருள் இலவசமாக வழங்கப்படுவதாக ஜோஹோ தெரிவித்துள்ளது. தகுதி உடைய தொழில்முனைவோர்களுக்கு, அவர்கள் ஜி.எஸ்.டி போர்டல் மூலம் பதிவு செய்து கொள்ளும் போது இந்த மென்பொருளுக்கான வசதி அளிக்கப்படும்.
தமிழில்: சைபர்சிம்மன்