Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அரசுப்பள்ளியில் சேர அட்மிஷன் விளம்பரம்: சகல வசதிகளுடன் தனியார் பள்ளிக்கு டஃப் கொடுக்கும் நடுநிலைப்பள்ளி!

அரசுப்பள்ளியில் சேர அட்மிஷன் விளம்பரம்: சகல வசதிகளுடன் தனியார் பள்ளிக்கு டஃப் கொடுக்கும் நடுநிலைப்பள்ளி!

Monday April 08, 2019 , 3 min Read

வகுப்புக்கொரு கணினி, கராத்தே முதல் கிராமிய விளையாட்டுகள் வரையிலான ஸ்பெஷல் இலவச பயிற்சி வகுப்புகள், 3,000 புத்தகங்கள் கொண்ட நூலகம், அனைத்து மாணக்கர்களுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி என தனியார் பள்ளிகளுக்கு  சவால்விடும் வகையில், பள்ளியின் ஆசிரியர்கள் குழுவினரது தனிப்பட்ட முயற்சியால் சிறப்பாய் செயல்படுகிறது கோவையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.

கோவை மாவட்டம் மசக்காளிபாளையத்தில் அமைந்துள்ளது மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. 1956ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட மசக்கலிபாளைய அரசு பள்ளி தான் அந்த பகுதி மக்களுக்களது கல்விக்கான அச்சாணியாக இருந்தது. அக்கம் பக்கத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்துவந்துள்ளனர்.

பின்னர்,1966ம் ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. ஆனால், ஆதிக்கம் செலுத்த வந்த தனியார்பள்ளிகளின் வருகையால், அரசுப்பள்ளியில் மாணவ சேர்க்கை படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பள்ளியின் தரத்தை உயர்த்த களமிறங்கினர் அப்பள்ளியின் ஆசிரியர் படை. அவர்களுக்கு முழு பக்கபலமாயிருந்து தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்த்துள்ள பெற்றோர்களையே வியக்க வைத்தார் பள்ளியின் தலைமையாசிரியர் மைதிலி.

தலைமையாசிரியருடன் (வலமிருந்து இரண்டாம் இடம்) ஆசிரியர் குழு

“2017ம் ஆண்டில் பதவி உயர்வு பெற்று மசக்கலிபாளைய அரசு பள்ளியின் தலைமை ஆசிரியாக பணியில் சேர்ந்தேன். பள்ளியின் சுற்றுப்புறமே பொலிவிழந்தநிலையில் இருந்ததால், முதலில் பள்ளியின் சுற்றத்தையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்கு ஏற்றாற் போன்ற ஆசிரியர் குழுவும் கிடைத்தது. நான் நினைப்பதை செய்தே முடித்துவிடுவர்,” என்று தொடங்கினார் தலைமையாசிரியர் மைதிலி.

பள்ளியில் சுற்றத்தை தூய்மைப்படுத்தியவர்கள், வகுப்பறைகளை பெயின்டிங் வேலைகளையும் முடித்துள்ளனர். தவிர அரசு சார்பில் வழங்கப்பட்ட 3 கம்ப்யூட்டர்களுடன் அனைத்து வகுப்பறைகளிலும் மேம்பட்ட நெட் கனெக்ஷனுடன் கூடிய கணினி வசதியை ஏற்படுத்தி தனியார் பள்ளியின் தரத்திற்கு சமமாக பள்ளியை உயர்த்த பல நடவடிக்கைகளை அவர்களது சொந்த செலவிலும், நண்பர்கள், சொந்த பந்தங்களிடமிருந்து பெற்று செய்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் நன்செயலுக்கு ஆதரவாய் பலரும் நிதியுதவி செய்து வர, கல்லூரி மாணவர்களும் கைகோர்த்து 3000 புத்தகங்களை கொண்ட நூலகத்தினையும் அமைத்து கொடுத்துள்ளனர். பள்ளியின் எக்ஸ்ட்ரா சிறப்பு பள்ளியில் பயிலும் 144 மாணவ, மாணவிகளுக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசியும் எடுத்து, மாணாக்கர்களது நலனிலும் முக்கியத்துவம் அளிக்கின்றது. 

ஒவ்வொரு வகுப்பிலும் இதுபோன்ற கம்யூட்டர் வசதி உள்ளது.

“மாணவ, மாணவிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஒவ்வொன்றாய் செயல்படுத்தினோம். அப்படி, பள்ளிக்குழந்தைகளின் புத்தகங்களை பார்த்தீர்கள் என்றால் அரையாண்டிலே பாதியாகும் அளவிற்கு கிழித்து விடுவார்கள். அதற்காக அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்களை பைண்டிங் செய்து வழங்கினோம்.

”வகுப்பறைகளை முழுவதுமாய் பெயின்டிங் செய்தோம். கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததால், பள்ளி வளாகங்களில் நொச்சி மரக்கன்றுகளை நட்டோம். எங்களுக்கு கிடைத்த சிறுசிறு வாய்ப்புகளை பயன்படுத்தி மேம்படுத்தினோம். அவற்றை அனைத்தையும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்ற அக்கம் பக்கத்து ஊர் மக்கள் தொடங்கி அமெரிக்காவிலிருந்து வரை நிதியுதவி கிடைத்தது,” என்றார் பள்ளியின் ஆசிரியர் சக்திவேல். 

பள்ளி வெளியிட்டுள்ள அட்மிஷன் விளம்பரம்

தகுதிக்கு மீறி அதிகக் கட்டணம் கட்டி தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரின் மனப் போக்கை மாற்றி அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களை எப்படி கவரவேண்டும் என்பதை ஆராய்ந்து பக்கா பிளான் செய்து அரங்கேற்றியுள்ளனர் பள்ளியின் ஆசிரியர்கள். அதன் ஒரு பகுதியாய் பள்ளி நிர்வாகம் சார்பில், பொதுமக்களிடம் விளம்பர நோட்டீஸ் விநியோகித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வகுப்பறைக்கும் அதிவேக இணைய வசதியுடன் கூடிய  கணினி வசதி உள்ள தமிழகத்தின் முதல் மாநகராட்சி பள்ளி என்று நோட்டீசில் குறிப்பிட்டுள்ள அவர்கள், இந்த பள்ளியில் உங்கள் குழந்தைகளை ஏன் சேர்க்க வேண்டும்? என்பதற்கு அடுக்கடுக்கான காரணங்களை முன்வைத்து பட்டியலிட்டு இருந்தனர்.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்றுத்தரப்படும். மாணவர்களுக்கு நடனம், கராத்தே, பறை, அபாகஸ், யோகா, சதுரங்கம், மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் இலவசமாய் கற்றுதரப்படும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது மக்கள் மத்தியில் நன்வரவேற்பை பெற்றதுடன், இணையவழியில் நோட்டீஸ் வைரலாகவும் பரவியது.

விளைவு மசக்கலிபாளைய மாநகராட்சி பள்ளியில் சேர்க்கை பெற பெற்றோர்கள் முட்டி மோதிக் கொள்கின்றனர். ஆல்ரெடி, அடுத்த கல்வியாண்டுக்கு 30 மாணவச் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், அட்மிஷன் குறித்த விசாரிப்பு கால் எக்கச்சக்கமாய் வந்த வண்ணம் உள்ளது என்கிறார் மைதிலி.

3 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய பள்ளி நூலகம் (இடது), இலவச யோகா பயிற்சி (வலது)

இது போன்று ஒவ்வொரு அரசுப் பள்ளிகளும் செயல்பட துவங்கினால், தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை குறைத்து கல்வி வியாபாரமாவதை தடுத்துவிடலாம்.

பள்ளியின் ஃபேஸ்புக் பக்கம்: Cms Masakalipalayam