வயதானவர்களுக்கு டெக்னாலஜியை கற்றுக் கொடுக்கும் 14 வயது சென்னை மாணவி!
9ம் வகுப்பு படிக்கும் தன்வி அர்விந்த் முதியோர்கள் தொழில்நுட்பம் கற்றுக்கொண்டு ஸ்மார்ட்போன், ஆன்லைனில் சுயமாக செயல்பட உதவுகிறார்.
நம் வீட்டில் உள்ள முதியவர்கள் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதற்கு சிரமப்படுவதைப் பார்த்திருப்போம். ஆப் பதிவிறக்கம் செய்வது, போன் மூலம் ஆர்டர் செய்வது, ஆன்லைன் பரிவர்த்தனைகள் போன்றவை அவர்களுக்கு புதிது என்பதால் பயன்படுத்தத் தயங்குவார்கள்.
இவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது குடும்பத்தில் உள்ள இளம் வயதினரிடம் உதவி கேட்பதுண்டு. ஆனால் முதியவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கான பொறுமையோ அவகாசமோ பெரும்பாலான இளைஞர்களுக்கு இருப்பதில்லை.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டறிந்துள்ளார் சென்னை மாணவி ஒருவர். சிஷ்யா பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவியான தன்வி அர்விந்த், TechEdEn என்கிற ஸ்டார்ட் அப்பை 2019-ம் ஆண்டு தொடங்கியுள்ளார். தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு பயிற்சியளிப்பதை முக்கியச் சேவையாக வழங்குகிறது இந்த ஸ்டார்ட் அப்.
தொடக்கம்
இவரது சொந்த அனுபவமே TechEdEn தொடங்கக் காரணமாக அமைந்துள்ளது.
“என்னுடைய பாட்டி, தாத்தா பெங்களூருவில் வசிக்கின்றனர். நான் அங்கு செல்லும்போதெல்லாம் அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியாமல் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் இரண்டு ஸ்மார்ட்போன்க்ள், இரண்டு ஐபேட்கள், லேப்டாப் ஆகியவை இருந்தன,” என்றார்.
அவர்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவவேண்டும் என்று தன்வி விரும்பினார். ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் அவர்களுக்கு எளிய முறையில் கற்றுக்கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.
“ஒவ்வொரு முறை நான் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொடுக்கும்போதும் தொழில்நுட்பத்தால் வாழ்க்கை மாறியுள்ள விதத்தைக் கண்டு அவர்கள் வியந்துபோவார்கள்,” என்றார்.
தன்வி தனது பாட்டி தாத்தாவிற்கு தொழில்நுட்பத்தை எளிமையாகக் கற்றுக் கொடுத்தபோது அவர்கள் அடைந்த மகிழ்சியைக் கண்டார். எனவே முதியோர்கள் தொழில்நுட்பத்தின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள உதவவேண்டும் என்கிற நோக்கத்துடன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கத் தீர்மானித்தார்.
TechEdEn முயற்சி மூலம் ஊபர் அல்லது ஓலா’வில் கார் புக் செய்வது, ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்வது, நெருக்கமானவர்களைத் தொடர்புகொள்ள ஜும், ஃபேஸ்டைம் போன்றவற்றைப் பயன்படுத்துவது, பயணங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது, கூகுள் மேப் பயன்படுத்துவது, இன்ஸ்டாகிராம், பிண்ட்ரெஸ்ட் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது என தொழில்நுட்பப் பயன்பாடுகளைக் கற்றுக்கொடுக்கிறார் தன்வி.
“முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போதுள்ள பெருந்தொற்றுச் சூழலில் சமூக இடைவெளி என்பது கட்டாயம் என்பதால் ஆன்லைனில் செயல்படுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது. முதியோர்களுக்கு தொழில்நுட்பம் என்பது பரிச்சயமில்லாத ஒன்று. எனவே இத்தகைய சேவை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தொழில்நுட்ப வளர்ச்சியுடன் மாறி வரும் இன்றைய டிஜிட்டல் உலகிற்கு அவர்கள் தங்களைத் தயார்படுதித்திக்கொள்ள வாய்ப்பளிக்கவேண்டியது அவசியமாகிறது. TechEdEn சேவைகள் டிஜிட்டல் உலகில் அவர்கள் சிறப்பாக இணைந்திருக்க உதவும்,” என்றார்.
பயம் மற்றும் தயக்கத்தை போக்குகிறார்
தன்வி ஆரம்பத்தில் நேரடியாக சென்று சேவையளிக்கவே திட்டமிட்டார். 68 முதியோர்களின் இடத்திற்கே நேரடியாக சென்று பயிற்சியளித்தார் தன்வி. இவர்களில் 25 சதவீதம் பேர் டிஜிட்டல் உலகில் இணைய அஞ்சினார்கள். அவர்களது பயத்தையும் தயக்கத்தையும் போக்கி தன்வி அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
வீட்டிலேயே பிரிண்ட் எடுப்பது, இணையத்தைப் பயன்படுத்துவது, சாதனத்திலும் இணையத்திலும் செயலிகளைப் பயன்படுத்துவது போன்ற அடிப்படைகளையும் கற்றுக்கொடுக்கிறார். ஊபர், ஸ்விக்கி, அமேசான் போன்ற சேவை வழங்குவோர்களைத் தொடர்புகொண்டு கிட்டத்தட்ட 30 பேர் வீட்டிலிருந்தே பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தன்வி ஒரு மணி நேர பயிற்சிக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார். நான்கு பேர் குழுவாக கற்றுக்கொள்ள 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார். மக்களின் வாழ்க்கையில் இதுபோன்று மாற்றத்தை ஏற்படுத்துவதில் பங்களிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார் இந்த இளம் தொழில்முனைவர்.
தன்வியின் வாடிக்கையாளர்களில் ஒருவரான 70 வயதான சித்னிஸ் இன்றைய காலகட்டத்தில் TechEdEn சேவை ஒரு வரப்பிராதம் என்றே குறிப்பிடுகிறார்.
தன்வி தனது சகோதரி மற்றும் நண்பர் ஒருவரின் உதவியுடன் முதல் ஆண்டிலேயே 28,400 ரூபாய்க்கு வணிகம் செய்துள்ளார். தொழில்நுட்பத் திறன் கொண்ட ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களையும் இணைத்துக்கொண்டு இரண்டாம் ஆண்டில் தொலைபேசி வாயிலாக சேவையளிக்கவும் மூன்றாம் ஆண்டில் ஆன்லைனில் சேவையளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
“தற்போது இணைந்துள்ள வாடிக்கையாளர்களிடம் எங்கள் சேவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர்கள் பலருக்கு பரிந்துரை செய்கின்றனர். TechEdEn எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று திடமாக நம்புகிறேன்,” என்றார் தன்வி.
வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதால் அதற்கேற்ப செயல்பாடுகளை திட்டமிடவேண்டும் என்கிறார் தன்வி. இதுவே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளுக்கான சவாலாக இருக்கும்.
தன்வி ஒருமுறை டெட்ராய்ட் பகுதியைச் சேர்ந்த ஏசியா நியூசன் என்கிற 13 வயது தொழில்முனைவர் வெற்றியை வசப்படுத்தியது குறித்த சுவாரஸ்யமான வீடியோ ஒன்றைப் பார்த்துள்ளார். இவர் மெழுகுவர்த்தி விற்பனை செய்யத் தொடங்கி பின்னாளில் சொந்தமாக தயாரிக்கத் தொடங்கினார்.
2016-ம் அண்டு வணிகம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே 70,000 டாலர் விற்பனை இலக்கை எட்டியுள்ளார். அப்போதிருந்து அவரது வணிகம் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. இவரது வீடியோவைப் பார்த்தபோது தன்விக்கு சொந்த வணிக முயற்சியில் ஈடுபடவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது
“நான் 20 வாரங்கள் இளம் தொழில்முனைவோர் அகாடமியில் (YEA) செலவிட்டது பயனுள்ளதாக இருந்தது. வணிக நடவடிக்கைகளை அமைப்பது குறித்தும் சந்தை மற்றும் நிதி செயல்பாடுகள் குறித்தும் புரிந்துகொள்ள உதவியது. பல இடங்களுக்குப் பயணம் செய்ததால் வெற்றி குறித்த வெவ்வேறு வணிகங்களின் அளவுகோல்களையும் செயல்படும் விதங்களையும் புரிந்துகொள்ள முடிந்தது. என்னுடைய வழிகாட்டிகள் எனக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்கள்,” என்றார்.
வயதானவர்கள் தொழில்நுட்பத்தைக் கற்றறிவது முக்கியம் என்பதைக் காட்டிலும் அத்தியாவசியம் என்று குறிப்பிடுவது மிகையாகாது.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா