சென்னை பள்ளி குழந்தைகள் 300 பேருக்கு சமைத்துக் கொடுத்த சிறுவன்!
சிங்கப்பூரைச் சேர்ந்த ரோஹன் சுரேஷ் சென்னையில் உள்ள சிறகு மாண்டசரி பள்ளியைச் சேர்ந்த 300 நலிவுற்ற மாணவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளார்.
குழந்தைகளில் பலர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அதேசமயம் சமூக அக்கறையுடன் தங்களது திறமைகள் கொண்டு தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் குழந்தைகளும் உள்ளனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த பதினாறு வயதான ரோஹன் சுரேஷ் தனது சமையல் திறனை சென்னையில் உள்ள சிறகு மாண்டசரி பள்ளி மாணவர்களுக்காக பயன்படுத்துகிறார்.
இவர் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவர்களுக்கு உணவு சமைத்துள்ளார். இவர் வழக்கமான உணவு வகையை சமைக்காமல் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், கோபி மஞ்சூரியன் போன்ற உணவு வகைகளைத் தயாரித்துள்ளார்.
இதற்காக காலை 5:30 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி பள்ளிக்குச் சென்றுள்ளார். சிங்கப்பூரில் வசிப்பவரான ரோஹன் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார். ரோஹன் இதற்கு முன்பு சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுப் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த குடிபெயர்ந்த 40 பணியாளர்களுக்கு உணவு சமைத்துள்ளார்.
ரோஹன் டிஎன்பி உடனான உரையாடலில் கூறும்போது,
"அவர்கள் உணவை விரும்பி சாப்பிட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. உணவருந்தியவர்களில் ஒருவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு வாழை இலையில் சாப்பிட்டதாக என்னிடம் கூறினார். அவரது வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியளித்தது,” என்றார்.
ரோஹனின் இந்த உன்னத முயற்சிக்கு அவரது பெற்றோர்களான சுரேஷ், சாஷி இருவரும் ஆதரவளிக்கின்றனர். சிறகு மாண்டசரி பள்ளியை நிறுவிய சுயம் சாரிடபிள் ட்ரஸ்டிற்கு சாஷி தனது நண்பர்களுடன் இணைந்து நிதியுதவி அளிக்கிறார்.
“நல்ல நோக்கத்திற்கு மக்கள் பங்களிக்க 'கிவ் இந்தியா’ மூலம் நிதி திரட்டும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளேன். வறுமையில் சிக்கித் தவிப்பவர்களின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் 'சிறகு’ குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குகிறது,” என்று தெரிவித்ததாக ’தி நியூஸ் மினிட்’ குறிப்பிட்டுள்ளது.
பள்ளியில் மாணவர்களுக்கு உணவு சமைக்க ரோஹன் அனுபவமிக்க நபர்களுடன் இணைந்து செயல்பட்டார். ‘காஸ்கேட் கிச்சன்’ சமையல் கலை நிபுணர் ஆரோக்கியசாமி சமையல் முறையை மேற்பார்வையிட்டார். மற்றவர்கள் உணவு தயாரிப்பில் உதவினார்கள்.
கட்டுரை: THINK CHANGE INDIA