ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை: தங்கையின் நினைவாக ஹாஸ்பிடல் கட்டிய டாக்சி டிரைவர்!
டாக்சி டிரைவர் சைதுல் லஷ்கருக்கு 2004-ம் ஆண்டு சோகமான ஆண்டாக அமைந்தது. அவரின் தங்கை மருஃபா 17 வயதாக இருந்த போது மார்ச்சளி தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் வியாதிக்கான மருந்துகளை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர், கையில் காசில்லாமல் சிகிச்சை கொடுக்க முடியாமல் அவர் இறந்து போனார்.
தன் தங்கைக்கு ஏற்பட்ட நிலை இனி எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது என்றும் அதற்காக அவரே ஒரு மருத்துவமனை கட்டுவதாக சபதம் எடுத்தார் சைதுல்.
“என் தங்கை போன்று எத்தனையோ ஏழை மக்கள் கையில் காசில்லாமல் மருத்துவ உதவி பெறாமல் அவதிப்படுவார்கள். என்னை போன்ற எந்த ஒரு அண்ணனும் தங்கையை இழக்கக்கூடாது,” என்று IANS பேட்டியில் கூறினார் சைதுல்.
மருஃபா ஸ்ம்ரிதி நலச்சங்கம், கொல்கத்தா பருய்பூர் அருகின் புன்ரி கிராமத்தில் உள்ளது. சைதுல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்து ஒரு மருத்துவமனையை கட்டியுள்ளார். ஒரு டாக்சி டிரைவராக தனது முயற்சியை பற்றி தன் பயணிகளுடன் பகிர்ந்தார். பலர் அவரை பாராட்ட, சிலர் நிதியுதவி செய்ய முன் வந்தனர்.
அவரின் நீண்ட கால பயணியான ஷிருஷ்டி கோஷ் என்பவர், தன் ஒரு மாத சம்பளத்தை சைதுல்லுக்கு கொடுத்தார். சைதுலில் மனைவியும் அவரின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
“என் மனைவி ஷமிமா இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. நான் மருத்துவமனை கட்ட தொடங்கியதும் பல நண்பர்கள் உட்பட பலரும் என்னிடமிருந்து விலகிப் போனார்கள். என்னை முட்டாள் என்று கூறினர். என் மனைவி மட்டுமே உடனிருந்தார். அவர் தனது நகைகளை கொடுத்து மருத்துவமனை கட்ட நிலம் வாங்க உதவினார்.”
சைதுலில் கனவு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி நிறைவேறியது. அவர் மருத்துவமனை கட்டி திறப்புவிழா நடத்தினார். விழாவின் சிறப்பு விருந்தினராக ஷ்ருடியை அழைத்து ரிப்பன் வெட்ட வைத்தார் சைதுல். 50 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அதில் எக்ஸ்ரே வசதி, ஈசிஜி என்று எல்லா முக்கிய வசதிகளுடன் இருக்கிறது. 286 நோயாளிகள் அங்கு சிகிச்சை பெறமுடியும். இதன் மூலம் 100 கிராமங்கள் பலனடைந்துள்ளது.
சைதுலின் முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ ரேடியோ நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார்.
“பிரதமரின் உரையைக் கேட்டு பலர் சைதுலை தொடர்பு கொண்டார். பலரும் அவருக்கு உதவிட முன்வந்தார். உள்ளூர் கட்டுமான நிறுவனங்கள் சில மண், கல் மற்றும் சிமெண்ட் மூட்டைகளை தானமாக கொடுத்தும் உதவியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டர் அவரின் மருத்துவமனையில் சேர்ந்து ஏழைகளுக்கு சிகிச்சை தர முன் வந்துள்ளார்.”
தற்போது மருத்துவமனையில் எட்டு டாக்டர்கள் இலவச சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் இதோடு நிறுத்த சைதுல் விரும்பவில்லை. அவருக்கு மேலும் பல பெரிய திட்டங்கள் உள்ளன.
“இப்போது எனக்கு உதவிட பலர் உள்ளனர். அதனால் என் கனவை முழுதும் அடைய இன்னும் முயற்சிக்க விரும்புகிறேன். மருத்துவமனை கட்டுவதோடு நிற்காமல் ஏழைகளுக்கு உதவ மேலும் பல நல்ல காரியம் செய்ய கனவை நோக்கி செல்லப்போகிறேன்,” என்கிறார் சைது;
கட்டுரை: Think Change India