செங்கலின்றி, கம்பியின்றி ஒரு வீடு: தமிழக அரசின் ‘தெர்மாக்கோல்’ ஐடியா!
இந்திய டிரெண்டிங் வார்த்தைகளுள் ஒன்றாகிப் போன, தெர்மாக்கோலை மீம் டெம்ப்ளேட்களாய் பார்த்து சிரித்த நமக்கு, தெர்மாக்கோல்கள் பூகம்பத்தையே தாங்கும் வல்லமை படைத்தவை என்பது ‘ஆ’ விஷயமே. யெஸ், முழுக்க முழுக்க தெர்மாக்கோல் பயன்படுத்தி வேகமாகக் கட்டப்படும் வீடுகள் பிரபலம் அடைந்துவரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபீசர்ஸ் மெஸ் விடுதியில், தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி கழகம் வெறும் 40 நாட்களில் தெர்மாக்கோல் பயன்படுத்தி இரண்டு மாடிக் கட்டிடத்தை கட்டி எழுப்பியுள்ளது.
செங்கற்களுக்கு மாறாக வலுவூட்டப்பட்ட தெர்மாக்கோல்கள் கொண்டு தமிழக அரசு கட்டியுள்ள முதல் கட்டிடம் இதுவாகும்.
ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தெர்மாக்கோல் கட்டிடம், வழக்கமான கட்டுமான முறையினை பயன்படுத்தினால் ஆகும் செலவைக் காட்டிலும் 30 சதவீதம் குறைவாகும். தவிர, தெர்மோ கான்கீரிட் கட்டுமான முறையில், வீட்டுக்கான சுவர்கள், கூரைகள் என எல்லா வேலைகளையும் வேறொரு இடத்தில் ரெடிமேடாக செய்து, அதை அப்படியே தேவையான இடத்தில் கொண்டுபோய் பொருத்திவிட முடியும்,”
என்கிறார், கர்நாடகா, ஐஐடி -ஜம்மு மற்றும் இந்திய ரயில்வேயில் இத்திட்டத்தை திறம்பட செய்துமுடித்த பியர்ஷெல் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த ரெட்டி உதய் பாஸ்கர்.
“வழக்கமான கட்டுமானங்களை விட இத்தொழில்நுட்பம் மூலம் கட்டப்படும் கட்டிடங்கள் 25 சதவீதம் எடை குறைவாக இருக்கிறது. மேலும், தூண்கள், பீம்களின் தேவையின்றி வீட்டைக் கட்டி முடிக்கலாம்,” என்கிறார் அவர்.
கட்டுமானத் துறையில் மணல் தட்டுப்பாடு கடுமையாகத் தாக்கிய நேரத்தில், தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதிக் கழகம் இம்முயற்சியை மேற்கொண்டது.
“அடித்தளம் அமைத்தபின், கட்டிடத் திட்டத்தின் படி செங்குத்து பேனல்கள் அமைக்கப்பட்டன. இதற்காக முதல் படியாக தெர்மாகோல் துண்டுகளை இரு புறமும் கம்பி வலை கொண்டு பிணைத்து, நான்கு முனைகளிலும் கான்க்ரீட் போட்டு காய வைக்கப்படும். அதே போல் பக்கவாட்டுகளில் வழக்கமாக கட்டுமானப் பணிகளில் செய்யப்படும் சிமென்ட் பூச்சை பூசிவிட்டால் வீடு கட்டத் தேவையான பேனல்கள் ரெடி. பின்னர், சுவர் மற்றும் கூரை பேனல்கள் வழக்கமான கான்க்ரீட் அடித்தளங்களில் இணைக்கப்பட்டன. எட்டுத் தொழிலாளர்கள் கொண்ட குழு இவ்வேலைகளை முடித்த 20 நாட்டுகளுக்கு பிறகு உட்பூச்சு வேலைகள் தொடங்கப்பட்டன. அடுத்த 15 நாட்களுக்குள் உட்சுவர் பூச்சு, பிளம்பிங், மின்னணு மற்றும் பிற வேலைகள் நிறைவு செய்யப்பட்டன,” என்கிறார் முதன்மை இன்ஜீனியர் குமார்.
ஒட்டு மொத்தமாய் வீட்டை கட்டி முடிக்க 40 நாட்களே ஆகியது என்கிறார்.
ஒரு வழக்கமான கட்டிடத்தில், சுவர்கள் 250 மிமீ தடிமனானவை, ஆனால் தெர்மாகோல் கொண்டு கட்டப்படும் கட்டிடங்களின் சுவர்கள் 125 மி.மீ-130 மி.மீ தடிமன் மட்டுமே கொண்டிருப்பதால், உட்புற அறைகளின் பரப்பளவு அதிகமாக இருக்கும் என்கிறார் அவர். தவிர, தெர்மாக்கோல் கடத்தாப்பொருள் என்பதால், கோடைக்காலங்களில் வெப்பத்தை உள்ளிழுக்காமல், வீட்டின் உட்புறத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். தீவிர பூகம்பங்களையும் தாங்கவல்லதாய் இருக்கிறது தெர்மாக்கோல் கட்டிடங்கள்.
பலபல பாசிட்டிவ்கள் நிறைந்திருப்பினும், கடைசி நிமிடத்தில் பட்டி டிங்கரிங் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது, மின் விசிறி இவ்விடத்தில் தான் சுத்தி சுத்தி வரப்போகிறது என்று முடிவு செய்து பேனல் ரெடி செய்துவிட்டால், அவ்விடத்திலே இருந்தாக வேண்டும்.
தகவல் மற்றும் பட உதவி : டைம்ஸ் ஆப் இந்தியா |கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ