முகக்கவசம் அணியும் போது நாம் பொதுவாக செய்யக் கூடிய 4 தவறுகள்!
முகக்கவசத்தை முறையாக அணிந்துகொண்டால் மட்டுமே நோய்தொற்று பரவலைத் தடுக்கமுடியும் என்கிற சூழலில் நாம் பொதுவாக செய்யக்கூடிய நான்கு தவறுகள் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதல் இந்தக் கொடிய நோய்தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவதும் கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதுமே தாரக மந்திரமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மூன்றையும் முறையாகக் கடைபிடிப்பது மட்டுமே பலனளிக்கும்.
இதில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் கைகளை சுத்தம் செய்வதையும்கூட முறையாக செய்துவிடலாம். ஆனால் முகக்கவசம் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு முற்றிலும் பழக்கமில்லாத ஒன்று.
சிலர் முகக்கவசத்தை ஒருபக்க காதுகளில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அல்லது வாய்க்கு கீழ் இருக்கும்படி அணிந்து கொண்டிருக்கிறார். இப்படி முகக்கவசம் போட்டுக்கொள்வது வைரஸை நாமே விருந்து வைத்து அழைப்பதற்கு சமம்.
முகக்கவசம் அணிந்துகொள்வதில் இதுபோல் நாம் செய்யக்கூடிய பொதுவான நான்கு தவறுகள் இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
1. வாயை மட்டுமே மூடும்படி முகக்கவசம் அணிவது
முகக்கவசம் வாயை மட்டும் மூடும்படி இருக்கக்கூடாது. மூக்கால் நாம் சுவாசிக்கும்போது வைரஸ் துகள்களை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்க வாய்ப்புண்டு. அப்படியானால் வாயை மட்டும் மூடியிருக்கக்கூடிய முகக்கவசம் போட்டு என்ன பயன்?
எனவே நீங்கள் அணியும் முகக்கவசம் உங்கள் மூக்கு, வாய் இரண்டையும் மூடியிருக்கும்படியும் கீழ் தாடை வரை நன்றாக மூடியிருக்கும்படியும் அணியவேண்டியது அவசியம். அதேபோல் சுற்றிலும் இடைவெளி இல்லாமல் பாதுகாப்பாக மூடியிருப்பதையும் உறுத்செய்யவேண்டும்.
2. முகக்கவசத்தை அடிக்கடி தொட்டுக்கொண்டே இருப்பது
முகக்கவசத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவேண்டும். ஒருவேளை கிருமியிருக்கக்கூடிய உடலின் ஏதோ ஒரு பகுதியில் முகக்கவசம் படும் பட்சத்தில், அதையே நீங்கள் மூக்கு மற்றும் வாயை மூடும்படி அணியும்போது தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.
அதேபோல் முகக்கவசத்தை அணிவதற்கு முன்பு கைகளை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அணிந்த பிறகு அங்கங்கே கைகள் படும்படி அட்ஜஸ்ட் செய்வது கூடாது.
3. முகக்கவசத்தை முறையாக சுத்தம் செய்யாதது
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய முகக்கவசத்தை அணிந்துகொண்டால் பயன்படுத்திய பிறகு அதை முறையாக அப்புறப்படுத்திவிடலாம். ஆனால் மறுபயன்பாட்டிற்கு உரிய முகக்கவசங்களைப் பயன்படுத்தும்போது முறையாக துவைத்து சுத்தப்படுத்த வேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் வழக்கமான சோப்பு போட்டு துவைத்து வெயிலில் உலரவைக்கவேண்டும் என்பதே மருத்துவர்களின் பரிந்துரை. முகக்கவசம் கிழிந்திருந்தால் உடனடியாக முறையாக அப்புறப்படுத்திவிட்டு கைகளை நன்றாக சுத்தம் செய்துகொண்டு புதிய முகக்கவசத்தை அணிவது நல்லது.
4. ஈரமாக இருக்கும் முகக்கவசங்களை அணிந்துகொள்ளுதல்
வெப்பம் அதிகமாக இருக்கும்போது வியர்ப்பதால் முகக்கவசம் ஈரமாகிவிட வாய்ப்புண்டு. இதனால் அசௌகரியமான உணர்வு ஏற்படுவதுடன் பலனளிக்காமலும் போய்விடும். எனவே ஒருமுறை பயன்படுத்தக்கூடியதாக இருப்பினும் பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிடவேண்டும். அல்லது பாதுகாப்பாக பத்திரப்படுத்திவிட்டு புதிய முகக்கவசத்தை அணியவேண்டும்.
துணியால் ஆன முகக்கவசமாக இருப்பினும் மூன்று லேயர் இருக்கவேண்டும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை.
இதுபோன்ற தவறுகளை நாம் திருத்திக்கொண்டு பாதுகாப்பான முறையில் பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராடுவோம்.
தகவல் மற்றும் பட உதவி: இந்துஸ்தான் டைம்ஸ்