ஒபாமாவிடம் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் கற்று கொள்ள வேண்டிய 4 பாடங்கள்!
முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ரீஷேப் 2021 மாநாட்டில், ’இன்சைடர்’ இணை நிறுவனர் ஹண்டே கிலிம்ங்கரிடம் உரையாடிய போது, முக்கிய தலைமை பண்புகளை பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்க அதிபராக இருந்த போது பாரக் ஒபாமா, எண்ணற்ற சவால்கள் மற்றும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறார். இருப்பினும் தனக்கு வழிகாட்டிய சில விஷயங்கள் இருப்பதாக அவர் கருதுகிறார். நிறுவனர்களுக்கு இந்த விஷயங்கள் சோதனையான காலத்தில் நிச்சயம் வழிகாட்டும்.
நம்பிக்கை
"நாம் எல்லோரும் நம்பிக்கைக்கான விளக்கங்களைக் கொண்டிருக்கிறோம் என நம்புகிறேன். என்னைப்பொருத்தவரை நம்பிக்கை என்பது சாத்தியக்கூறாகும். இந்த உலகம் நிர்ணயிக்கப்பட்டது அல்ல, நாம் விரும்பிய வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்பதே நம்பிக்கை ஆகும். இது நடைமுறை சார்ந்த சாத்தியத்தைக் கொண்டிருக்க வேண்டும். இங்கே இப்போது நிலைப்பெற்றிருக்கும் போதே, எதிர்காலத்தை கற்பனை செய்யக்கூடியதாக இது அமைகிறது,” என்று அமெரிக்காவின் 44 வது அதிபரான ஒபாமா, ரீஷேப் 2021 மாநாட்டில் இன்சைடர், இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஒ- ஹண்டே கிலிம்ங்கரிடம் (Hande Cilingir ) பேசும் போது கூறினார்.
தலைவர்கள், தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் தலைவர்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம் என அவர் கருதுகிறார். எந்த நடவடிக்கையும் எடுக்காமலே, அலசி ஆராயும் அல்லது உலகம் சவாலானது, இன்னல்கள், போர் மற்றும் நோய் ஆகியவை நிதர்சனம் என்பதை உணராமல், சும்மா உட்கார்ந்திருப்பதன் மூலம் எல்லாம் சரியாகி விடும் என நினைப்பது தான் நம்பிக்கை என பலரும் நினைத்துக்கொண்டிருப்பதாக ஒபாமா கருதுகிறார்.
"நம்பிக்கை என்பது, உலகின் நிதர்சனங்களை நிராகரித்துவிட்டு கண்மூடித்தனமான நல்லெண்ணம் கொண்டிருப்பது அல்ல. ஆனால், நம்முடைய சூழல் மோசமாக இருந்தாலும், அந்த சூழலை நேரடியாக எதிர்கொண்டு, அதே மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதே நம்பிக்கை ஆகும். இறுதியில் இதுவே முன்னேற்றத்திற்கான பொறியாக அமைவதாக கருதுகிறேன். இப்போது இருப்பதைவிட சிறந்த உலகத்தை நம்மால் கற்பனை செய்ய முடியாவிட்டால், நாம் எல்லாவற்றையும் கைவிட்டு அவநம்பிக்கை கொள்வோம். நம்முடைய செயல்களுக்கு அர்த்தம் மற்றும் குறிக்கோளைக் கண்டறிய நாம் முயற்சிப்பதில்லை. என்ன சாத்தியம் என்பதற்கான பார்வை தங்கள் முன் இல்லை என்றால் அது தனிமனிதர்கள் மற்றும் சமூகத்திற்கான தடைக்கல்லாகும்,” என்றார்.
வாழ்க்கையை ரசிப்பது
வாழ்க்கையின் அடிப்படையான விஷயங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அவற்றை ரசிப்பது முக்கியம் என்கிறார் ஒபாமா.
"அதிபராக இருந்த போது கூட என்னுடைய பிள்ளைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை அமைதித் தன்மை கொண்டதாக உணர்ந்திருக்கிறேன். நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடுவதும் முக்கியம். பெரும்பாலான நேரங்களில் தலைவர்கள், குறிப்பாக மன அழுத்தம் மற்றும் நெருக்கடியில் உள்ளவர்கள் மகிழ்ச்சிக்கான வழியை கண்டறிய வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றனர்.”
நீண்ட கால நோக்கு
உடற்பயிற்சி செய்வதும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். ஒரு அதிபராக போதிய தூக்கம் கிடைக்க வாய்ப்பில்லை என்ற போதிலும், வழக்கமான செயல்களைக் கொண்டிருந்தது உதவியதாக கூறுகிறார்.
"நடப்பவை எல்லாம் நாம் நினைக்கும் அளவுக்கு நன்மையானவையும் அல்ல தீங்கானவையும் அல்ல என்று வழக்கமான செயல்பாடுகளே எனக்கு நினைவூட்டின. என்னுடைய இலக்குகளை பொருத்தவரை நீண்ட கால புரிதல் கொண்டிருந்தேன். ஒரு நாளில் விஷயங்கள் மோசமாக இருக்கலாம் ஆனால், நீண்ட கால பார்வையை கொண்டிருப்பது முக்கியம்”.
உங்களுக்கான அட்டவணை
நீண்ட காலத்தில் கவனம் செலுத்த, வழக்கமான செயல்கள் அல்லது பழக்கங்களைக் கொண்டிருப்பது அவசியம் என்கிறார்.
"அதிபராக நான் தொலைக்காட்சி செய்திகளை பார்த்தது இல்லை. ஏனெனில் தொலைக்காட்சி செய்திகளின் நோக்கம் பார்வையாளர்களை ஈர்ப்பது என்பதால் எப்போதும் பரபரப்பான செய்திகளே இருக்கும். ஆனால், ஒரு நாட்டின் திசை அல்லது உலகின் மீதான தாக்கம் குறித்து நீண்ட கால முடிவுகளை எடுக்க விரும்பிய எனக்கு இது ஏற்றது அல்ல. எனவே நான் தொலைக்காட்சிகளை பார்த்ததில்லை.
இந்தப் பழக்கம் எனக்கு மிகவும் உதவியதாக நம்புகிறேன். இல்லை எனில் அண்மை தலைப்புச்செய்திகளுக்கு எதிர்வினை ஆற்றுவதிலேயே நேரத்தை செலவிட்டு, முதன்மை நோக்கத்தை தவறவிட்டிருப்பேன் என நினைக்கிறேன்.
இதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. சிலர் தியானம் செய்கின்றனர். ஒரு சிலர் வாழ்க்கை மீதான பார்வை மற்றும் தங்கள் நோக்கம் என்ன என்பது குறித்து நீண்ட கால பார்வை கொள்ள மத செயல்முறைகளை நாடுகின்றனர். ஆனால் குறுகிய காலத்தில் மட்டும் அல்லாமல் நீண்ட கால நோக்கிலும் நாம் கவனத்தை தக்க வைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.
ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்