கொரோனா தாக்கம்: 41 லட்சம் இந்திய இளைஞர்கள் வேலை இழப்பு: ஆய்வில் தகவல்!
கொரோனா நெருக்கடியால், 25 வயதுக்கு மேற்பட்டவர்களை விட, 15 முதல் 24 வயதான இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது.
கொரோனா தொற்று நெருக்கடியின் காரணமாக 41 லட்சம் இந்திய இளைஞர்கள் வேலையிழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இணைந்து நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
"இந்தியாவில் 41 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஏழு முக்கிய துறைகளில் கட்டுமானம் மற்றும் விவசாயத்துறைகள் அதிக இழப்பை சந்தித்துள்ளன,” என்று செவ்வாய் கிழமை வெளியிடப்பட்ட, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கோவிட்-19 உண்டாக்கிய இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியை எதிர்கொள்வது” எனும் தலைப்பிலான இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பெருந்தொற்று காரணமாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. கொரோனா நெருக்கடியால், 25 வயதுக்கு மேற்பட்டவர்களை விட, 15 முதல் 24 வயதான இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், நீண்ட கால பொருளாதார மற்றும் சமூக பாதிப்புக்கு இவர்கள் உள்ளாகும் இடர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, குளோபல் சர்வே ஆன் யூத் அண்ட் கோவிட்-19 எனும் கணிப்பு அடிப்படையில் அமைந்துள்ளது. பல்வேறு நாடுகள் தொடர்பான வேலையின்மை தரவுகளைக் கொண்டு கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில், மூன்றில் இரண்டு பங்கு நிறுவன பயிற்சியாளர்கள் மற்றும் பெரும்பாலான பயிற்சியாளர் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பெரிய அளவிலான மற்றும் குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், கல்வி மற்றும் பயிற்சியை தொடரச் செய்யுமாறும், இந்த பகுதிகளின் உள்ள 660 மில்லியன் இளைஞர்களின் எதிர்கால பீதியை போக்க வேண்டும் என்றும் அறிக்கை இப்பகுதி அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனாவுக்கு முன்னரே, ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு சவாலை எதிர்கொண்டு வந்தனர். 2019ல், பெரியவர்களுக்கான வேலைவாய்ப்பின்மை 3 சதவீதமாக இருந்த நிலையில் இளைஞர்களுகான வேலைவாய்ப்பின்மை 13.8 சதவீதமாக இருந்தது. 160 மில்லியன் இளைஞர்கள் வேலையில் அல்லது கல்வி/ பயிற்சியில் இல்லாமல் இருக்கின்றனர்.
5 இளம் தொழிலாளர்களில் 4 பேர் அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றுகின்றனர். பெரியவர்கள் மத்தியிலான விகிதத்தை விட இது அதிகம். நான்கு இளம் தொழிலாளர்களில் ஒருவர் மிதமான அல்லது மோசமான வறுமையில் வாடுகின்றனர்.
"இளைஞர்களுக்கான இந்த நெருக்கடி இப்போது கொரோனாவால் பன்மடங்கு அதிகரித்துள்ளது. போதுமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்த பாதிப்பை உணரக்கூடிய லாக்டவுன் தலைமுறை உருவாகலாம் என அஞ்சுகிறோம்’ என அறிக்கையின் முதன்மை ஆசிரியர் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிராந்திய பொருளாதார சமூக ஆய்வு பிரிவு தலைவர் சாரா எல்டர் தெரிவித்துள்ளார்.
அண்மை நெருக்கடியில் இளைஞர்கள் பாதிக்கப்படும் மூன்று விதங்களை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறைக்கப்படும் வேலை நேரம் மற்றும் வருவாய் குறைப்பு போன்றவற்றால் ஏற்படும் நெருக்கடி, தொழிலாளர்கள், சுய தொழில் செய்பவர்களுக்கான பணியிழப்பு, கல்வி மற்றும் பயிற்சியில் பாதிப்பு, பள்ளியில் இருந்து பணிக்கு மாறிச்செல்வதில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2020 முதல் காலாண்டில் இந்த பகுதிகளில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை கணிசமாக அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, ஒன்பது நாடுகளில் தரவுகள் உள்ள ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, வியட்னாம் மற்றும் ஹாங்காங், சீனா ஆகிய ஆறு நாடுகளில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நாடுகளில் எல்லாம் பெரியவர்களை விட இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், 2020ல் 13 நாடுகளில் 1.5 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்கலாம் என அறிக்கை தெரிவிக்கிறது.
பெரியவர்களை விட, இளைஞர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் அதிகமாக பாதிக்கப்படுவதற்கான காரணம், கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நான்கு துறைகளில் இவர்களில் பாதி பேர் பணியில் ஈடுபட்டிருந்ததே காரணம் என அறிக்கை தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்ட நான்கு துறைகளில் மூன்று துறைகளில், குறிப்பாக தங்குமிடம் மற்றும் உணவுத் துறையில் பெண்கள் அதிக அளவில் பணியில் இருக்கின்றனர். கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், கொரோனா நெருக்கடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு சந்தைக்கு செல்வதை பாதிக்கும் என அறிக்கை தெரிவிக்கிறது.
கல்வி மற்றும் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது இளைஞர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க, உடனடியாக, பெரிய அளவிலான மற்றும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் தேவை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான மானியம் மற்றும் பொது வேலைவாய்ப்புத் திட்டங்கள் தேவை. வளங்கள் சிறந்த முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய, பொருளாதார மீட்சி மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய நடவடிக்கைகள் இடையே சமநிலை தேவை.
"கொரோனாவுக்கு பிந்தைய மீட்பு நடவடிக்கைகளில் இளைஞர் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிப்பது, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கு வித்திடும் என ஆசிய வளர்ச்சி வங்கி என்.ஜி.ஓ மற்றும் சிவில் சமூக மைய தலைவர் சிறிஸ் மோரிஸ் கூறியுள்ளார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்