சங்க காலம் முதல் சமகாலம் வரை: பிரம்மாண்ட செஸ் ஒலிம்பியாட் விழா நிகழ்ச்சிகளை இயக்கியவர் யார் தெரியுமா?
வெற்றிப்பட இயக்குநர் எனப் பெயர் எடுத்த விக்னேஷ் சிவன், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் “வணக்கம் செஸ் சென்னை” பாடல் மற்றும் துவக்கவிழா கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையில், பிரமாண்டமாக, வண்ணமயமாக இயக்கி, பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்ளும், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளின் தொடக்கவிழா நிகழ்ச்சிகள், நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வண்ணமயமாக நடைபெற்றது.
பிரதமர் மோடி, தமிழகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து என பிரபலங்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மற்ற பிரபலங்களைப் போலவே மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆவார். கையில் வாக்கி டாக்கியுடன் பரபரப்பாக இயங்கிய அவர்தான், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுக்கு இயக்குநர். ஏற்கனவே, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பர படத்தையும் இவரே இயக்கி இருந்தார்.
அந்தப் பாடலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை இயக்கும் வாய்ப்பும் அவருக்கே அளிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலம்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதற்கு அளிக்கப்பட்டது என்றபோதும், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, நிகழ்ச்சியை சிறப்பாக இயக்கிக் கொடுத்து, பாராட்டுகளைப் பெற்றுள்ளார் விக்னேஷ் சிவன்.
விளம்பரப் படம்
தமிழில் போடா போடி, நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் என விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையிலேயே படங்களை இயக்கியிருந்தாலும், இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால், குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். அடுத்ததாக அஜித்தை இயக்கி வருகிறார். பட இயக்கம் மட்டுமின்றி, மற்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் பாடலாசிரியராக, பாடகராக, துணை நடிகராக என பன்முகத்தன்மையுடையவராக திரைத்துறையில் விளங்கி வருகிறார்.
கடந்த மாதம்தான் இவருக்கும், லேடி சூப்பர்ஸ்டார் நயனுக்கும் கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இருவரும் தங்களது பட வேலைகளில் திரும்பவும் பிஸியாகி விட்டனர்.
இந்த சூழ்நிலையில்தான், அஜித் பட வேலைகளுக்கு மத்தியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர படத்தை இயக்கும் பொறுப்பைப் பெற்றார் விக்னேஷ் சிவன்.
“வணக்கம் செஸ் சென்னை...” என்ற அந்த தீம் பாடல் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து, காட்சிகளிலும் நடித்திருந்த அந்தப் பாடலை, போட்டியில் கலந்துக் கொள்பவர்களையும், பார்வையாளர்களையும், விருந்தினர்களையும் வரவேற்கும் வகையில் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.
சென்னை நேப்பியர் பாலம் மற்றும் மகாபலிபுரத்தில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தினர்களை வரவேற்று அழைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. செஸ் விளையாட்டோடு, நமது தமிழகத்தின் பாரம்பரியத்தையும் எடுத்துக் கூறும் வகையில் பரதநாட்டிய கலைஞர்களையும் இந்தப் பாடலில் ஆட வைத்திருந்தார் விக்னேஷ் சிவன்.
இந்த வரவேற்புப் பாடலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறப்பாக அந்தப் பாடலை இயக்கி இருப்பதாக விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகளும் குவிந்தது. இதன் தொடர்ச்சியாக செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தொடக்கவிழா நிகழ்ச்சிகளை இயக்கும் வாய்ப்பும் அவருக்கே அளிக்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
பின்னர், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பெருமை, கல்லணை, கோயில்கள், கவிஞர்கள், சங்க இலக்கியம் போன்றவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் முப்பரிமாண நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
நடிகர் கமல் இதற்கு வர்ணனை செய்திருந்தது இன்னமும் அந்நிகழ்ச்சியின் தரத்தைக் கூட்டுவதாக அமைந்திருந்தது. லிடியன் நாதஸ்வரம் கண்ணைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்தது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மட்டுமின்றி, அதனை நேரலையாக தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் பார்த்தவர்களையும் மெய்மறக்கச் செய்தது.
குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இப்படி ஒரு தொடக்க விழாவா என அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் வண்ணமயமாக, பிரமாண்டமாக அமைந்திருந்தன. தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த இந்த தொடக்க நிகழ்ச்சியையும் இயக்கியவர் விக்னேஷ் சிவன் தான் என்பது, வாக்கி டாக்கியுடன் அவர் அரங்கத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போதே தெரிந்தது.
சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்கள்
இந்த நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன்,
“செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். அனைவரும் பார்த்து பெருமைப்படக்கூடிய நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எல்லோருடைய நோக்கமாக இருந்தது. அதனால் ரொம்ப பர்ஃபெக்ட்டா இதை செய்வதற்கு சப்போர்ட் செய்தார்கள். இதற்கான ஸ்கிரிப்ட்ட நாங்கள் கொடுக்கும்போதே பாராட்டினார்கள். ஃபைனலாக இன்றைக்குத்தான் லைட்டிங்கோடு இதனை பார்த்திருக்கிறார்கள். முதலில் 45 நிமிடம் இந்த ஸ்கிரிப்ட் வந்தது. 45 நிமிடம் செயல்படுத்த முடியாது என்பதால் பலர் வேலை செய்து இதை ஷார்ட் பண்ணி கொடுத்தார்கள்,'' எனத் தெரிவித்தார்.
மேலும், “குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தொடக்க விழா இது. எங்களுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசு அதிகாரிகள் முழுமையாக செய்து கொடுத்தனர். இது கண்டிப்பாக டீம் ஒர்க் தான். சர்வதேச அளவில் பார்க்கப்படும் விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம்.
“அதனாலேயே சர்வதேச அளவில் தலை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் இங்கே கொண்டு வந்தோம். அரசும் அதற்கு சிறந்த ஆதரவை அளித்தது. அதனால்தான் இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்த முடிந்தது. நமது பாரம்பரியமும் இருக்க வேண்டும், மாடர்ன் விசயங்களும் இருக்க வேண்டும் என திட்டமிட்டே இதனை உருவாக்கினோம். 10 நாட்களில் இதற்காக திட்டமிட்டு செய்து முடித்தோம்,” என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
கமல் குரலில் சங்க காலம் முதல் சமகாலம் வரை...
இந்த தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் கமல் குரலில் தமிழர்களின் பல நூறு ஆண்டுகால வரலாற்றை பின்னணியாகக் கொண்ட நிகழ்த்துக் கலை நடனம் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
அகழ்வாய்வு தொடங்கி தமிழகர்களின் நாட்டுபுற நடனம், ஜல்லிக்கட்டு, கல்லணை, திருக்குறள், மாமல்லபுரம் உள்ளிட்ட தமிழகம் கலை, இலக்கியம், வரலாறு, நீர் பாசனம், வீர விளையாட்டு போன்றவற்றை கண் முன்னே கொண்டு வரும் வகையில் மின்னும் விளக்குகளின் ஒளியில் ஊடாக கொண்டுவரப்பட்டிருந்தது. அதோடு இணைந்த நடன நிகழ்ச்சியும் ரசிக்கும்படி இருந்தது.
தமிழ் கலாச்சாரம் குறித்து கமல் குரல் பதிவு ஐடியா எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விக்னேஷ் சிவன் கூறுகையில்,
“குரூப் டிஸ்கஷனில் நாங்கள் ஆரம்பத்திலேயே கமல் சார் பேசினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். அதன் அடிப்படையிலேயே இது நிகழ்ந்தது. எத்தனையோ நாடுகளிலிருந்து வந்திருக்கிறார்கள் அல்லவா அவர்களுக்கு நம்ம நாட்டினுடைய கலாச்சாரம், சிவிலைஷேசன் தெரிய வேண்டும் என்பதற்காக மேலும் அதை விஷ்வலாக கன்வே பண்ண வேண்டும் என்பதற்காக 3டி மேப்பிங் உள்ளிட்ட டெக்னாலஜிகளை முதல் முறையாக நாம் இந்தியாவில் பயன்படுத்தி இருக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. அதுவும் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதனால், இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மிகவும் பிரமாண்டமாக செய்திருந்தது. எனவே, அதன் தொடக்கவிழா அனைத்து நாடுகளும் ஆச்சர்யப்படும் அளவில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஆரம்பம் முதலே இருந்தது.
அரசின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்து, தனது அணியில் இருந்தவர்களை சரியாக வேலை வாங்கி, சிறப்பாக நிகழ்ச்சியை இயக்கிக் கொடுத்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளிலேயே வெற்றியாளராகி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.