ரூ.5000 முதலீடு; தினமும் 100 ஆர்டர்கள் – கைவினைப் பொருட்கள் விற்பனையில் அசத்தும் பெண் தொழில்முனைவர்!
பூஜா காந்த் மேக்ரம் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் விற்பனை செய்ய Pooja Ki Potli தொடங்கி கிராமப் பெண்கள் வருவாய் ஈட்ட உதவி வருகிறார்.
மேக்ரம் என்பது நூல் கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கலை. பூஜா காந்த் கார்ப்பரேட் பணியில் இருந்தார். மேக்ரம் கலையில் ஆர்வம் ஏற்பட்டதால் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு இந்தக் கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார்.
இந்தக் கலையில் வாயிலாக கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்று பூஜாவிற்கு நம்பிக்கை பிறந்தது.
”தொழில்முனைவில் ஈடுபடவேண்டும் என்பது மட்டுமல்ல சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதும் என்னுடைய கனவாக இருந்தது. கிராமப்புறப் பெண்கள் மேக்ரம் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால் அவர்களால் சம்பாதிக்க முடியும், சொந்தக் காலில் நிற்கமுடியும் என்று திடமாக நம்பினேன். கஞ்சவாலா, ஜாவுண்டி, பாவனா, கராலா போன்ற கிராமங்களில் உள்ள பெண்களுடன் பணியாற்றினேன். அவர்கள் கைவினைப்பொருட்கள் உருவாக்கத் தேவையானப் பொருட்களையும் பயிற்சியையும் வழங்கினேன்,” என்கிறார்.
இந்த முயற்சியை மேற்கொண்டு எடுத்துச் செல்ல 5,000 ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் Pooja Ki Potli நிறுவினார். கைவினைப் பொருட்கள், குறிப்பாக மேக்ரம் கலைப்பொருட்கள் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
விற்பனை மற்றும் சவால்
Pooja Ki Potli வீட்டு அலங்காரப் பொருட்கள், தோட்டத்தை அலங்கரிக்கும் பொருட்கள், கலைப்பொருட்கள் என பலவிதமான கைவினைப்பொருட்கள் விற்பனை செய்கிறது.
ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு வகையிலும் விற்பனை செய்யப்பட்டாலும் தற்போது பெரும்பாலும் ஆன்லைன் விற்பனையே அதிகமுள்ளது.
“எங்கள் தயாரிப்புகளுக்குத் தேவையான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் கிடைப்பது சிரமமாக இருந்தது. எனவே இந்தப் பொருட்களை நாங்களே தயாரிக்கத் தொடங்கினோம். டெல்லியில் ஒரு யூனிட் அமைத்து இதற்கென பிரத்யேகமாக ஒரு குழு இயங்கி வருகிறது,” என்கிறார் பூஜா.
சிறிய ஸ்டூடியோவாக தொடங்கிய பூஜாவின் இந்த முயற்சி புதுடெல்லியில் ஒரு மிகப்பெரிய சில்லறை வர்த்தக ஸ்டோராக வளர்ச்சியடைந்துள்ளது. 25 ஊழியர்கள் கொண்ட குழுவாக இயங்கி வருகிறது.
அமேசான் விற்பனை
பூஜா கடந்த ஆண்டு ’லோக்கல் ஷாப்ஸ் ஆன் அமேசான்’ திட்டத்தில் சேர்ந்தார். இதன் மூலம் ஆன்லைனில் பல வாடிக்கையாளர்களை சென்றடைய முடிந்துள்ளது.
”ஆரம்பத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஆர்டர்கள் மட்டுமே கிடைத்தன. தற்போது தினமும் 100 ஆர்டர்கள் வரை கிடைக்கின்றன. இதற்குக் காரணமாக இருந்த லோக்கல் ஷாப்ஸ் ஆன் அமேசான் திட்டத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சென்றடைந்து விற்பனையை அதிகரிக்க முடிந்தது,” என்கிறார் பூஜா.
அவர் மேலும் கூறும்போது,
“20 லட்ச ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டும் பிராண்டாக வளர்ச்சியடைந்துள்ளோம். கூடுதல் தொகையை முதலீடு செய்து கூடுதல் தயாரிப்புகளுடன் விரிவடைய விரும்புகிறோம்,” என்கிறார்.
பெருந்தொற்று சமயத்தில் ஆஃப்லைன் வணிகம் கடுமையாக பாதித்திருந்த நிலையில், லோக்கல் ஷாப்ஸ் ஆன் அமேசான் திட்டத்தில் இணைந்திருந்தது கைகொடுத்தது. ஆன்லைனில் விற்பனை தொடர்ந்தது.
ஆறு ஊழியர்களைக் கூடுதலாக நியமிக்கும் அளவிற்கு அந்த சமயத்தில் வணிகம் வளர்ச்சியடைந்துள்ளது.
வருங்காலத் திட்டங்கள்
பூஜா வருங்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தொகுப்பில் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். பெண்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க விரும்புகிறார்.
“மேக்ரம் மட்டுமல்லாது காட்டன் மற்றும் கேன்வஸ் துணிகள் கொண்டு புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்கிறார்.
பூஜாவின் தொழில்முனைவுப் பயணம் எளிதாக இருந்துவிடவில்லை. இருப்பினும் படிப்படியாக முன்னேறி ஆன்லைன் வழியைத் தேர்வு செய்து விரிவடைந்துள்ளார். தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடைந்ததுடன் ஏராளமான பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்து பொருளாதார ரீதியாக அவர்களையும் மேம்படுத்தியுள்ளார். வணிகத்தைப் போன்றே குழந்தைகளையும் குடும்பத்தையும் சிறப்பாக நிர்வகித்து வருகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா