நேற்று: மேடை கலைஞர், டாக்டர், எழுத்தாளர்...
இன்று: இந்திய ஆட்சி பணி அதிகாரி.!
இத்தனைக்கும் சொந்தக்காரர் டாக்டர் திவ்யா ஐயர் ஐ.ஏ.எஸ்.!
கேரளாவில் கோட்டயம் மாவட்ட துணை ஆட்சியராக இன்று பணியில் இருக்கிறார் திவ்யா ஐயர். திருவனந்தபுரம் இவரது சொந்த ஊர். எந்த பிரச்சனையானாலும் புன்சிரிப்போடு சந்திப்பதுதான் இவரது பலம். திவ்யா ஒரு சகலகலா வல்லவர். இசை, நடனம், நாடகம், மோனோ ஆக்ட், என்று அத்தனை கலைகளிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
'கலை மன திருப்திக்கு' என்று சொல்லும் திவ்யா படிப்பிலும் படு சுட்டிதான். பத்தாம் வகுப்பில் கேரள மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். பின்னர் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்திருக்கிறார். ஐந்து ஆண்டு மருத்துவப் படிப்பு என்பது எதற்கும் நேரம் கிடைக்காத காலகட்டம் என்பது மற்றவர்களுக்குத்தான். இவரோ அந்த நாட்களில்தான் ஒடிசி நடனத்தை கற்றிருக்கிறார். தேர்வு முடிவுகள் வந்த போது நண்பர்கள் அசந்து போனார்கள். கம்யூனிடி மெடிசின், ஜெனரல் மெடிசின் இரண்டிலும் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றிருக்கிறார். பின்னர் வேலூரிலேயே ஒன்றரை ஆண்டுகாலம் மருத்துவ பணி. அதன் பிறகு திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவமனையில் வேலையை தொடர்ந்திருகிறார். அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபடியே அடுத்த கட்டப் பயணம். அதுதான் ஐ.ஏ.எஸ் படிப்பு.
"ஐ.ஏ.எஸ். என்பது எனது சிறு வயது கனவு. திருவனந்தபுரம் ஹோலி ஏஞ்சல் பள்ளியில் படிக்கும் போது, டாக்டர் பாபு பால் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கு போட்டி ஒன்றில் பரிசு வழங்கி பேசினார். ஐ.ஏ.எஸ் என்கிற 3 எழுத்தின் அர்த்தம் கூட தெரியாத அந்த வயதில் அவரது பேச்சு என்னவோ எனக்கு பிடித்து போனது. நானும் அவர் போலவே வர வேண்டும் என்று விரும்ப தொடங்கினேன்".
"பின்னர் அதனை மறந்து போனாலும் 7 வது படிக்கும் போது மீண்டும் என் மனதில் சிவில் சர்வீஸ் கனவு வந்தது. ஆனால், பத்தாவதில் ரேங்க் கிடைத்தவுடன் 'முதலில் எம்.பி.பி.எஸ். பின்னர் தான் ஐ.ஏ.எஸ்.' என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தேன். அதுதான் நடந்தது," என்று நினைவுகளில் மூழ்கினார் திவ்யா.
சிவில் சர்வீஸ் படிப்பு என்றவுடன் மற்றவர்கள் போல் டெல்லிக்கு போய் படிக்க வேண்டும் என்று நினைக்காமல் திருவனந்தபுரத்தில் உள்ள பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கத் தொடங்கி இருக்கிறார்.
புத்தகங்கள் படிப்பதோடு, எழுதுவது, நாள்தோறும் பத்திரிகை படிப்பது என்கிற சிறுவயது பழக்கங்கள் அப்போது அவருக்கு பெரிதும் கை கொடுத்திருக்கிறது.
"2012 ஆண்டு முதல் முறை தேர்வு எழுதிய போது கிடைத்ததோ 139 வது இடம், அதனால் ஐ.ஆர்.எஸ். தான் கிடைத்தது. கிடைப்பதெல்லாம் நன்மைக்கே என்று கஸ்டம்ஸ் மற்றும் எக்சைஸ் துறையை தேர்வு செய்தேன். டிரைனிங் தொடங்கிய போதுதான் அதனை ரசிக்கத் தொடங்கினேன். தினமும் உடற்பயிற்சி, குதிரை சவாரி, துப்பாக்கிச் சுடும் பயிற்சிகள் என்று அந்த சீருடைப்பணி பிடித்துப் போனது. மூன்றாம் முறை தேர்வு எழுதிய போதுதான் ஐ.ஏ.எஸ். கனவு நனவானது. 48வது ரேங்கில் வந்து வெற்றிப் பெற்றேன்."
முதல் முறை தேர்வு எழுதி கிடைக்காதவர்கள் மனம் தளாராமல் அடுத்தடுத்த ஆண்டு தேர்வுக்கு தயாராகிவிட வேண்டும். ஒருசிலர்தான் முதல் முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள். இரண்டாவது, மூன்றாவது முறையாக எழுதி வெற்றி பெறுபவர்கள்தான் அதிகம். ஒன்றரை ஆண்டு கடின உழைப்பு. அது போதும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்பது இந்த துணை ஆட்சியர் திவ்யா வழங்கும் ஆலோசனை.!
சரி, ஐ.ஏ.எஸ். படிக்கும் போதாவது தான் உண்டு தனது படிப்பு உண்டு என்று இருந்தாரா..? இல்லை. கைகள் பரபரக்க ஐ.ஏ.எஸ். படிப்புக்கு தங்களை தயார் படுத்திக் கொள்வது எப்படி என்று 'பாத் பைண்டர்' (PATHFINDER - For Civil Service Main Examination) என்கிற புத்தகத்தை எழுதி எழுத்தாளர் அவதாரத்தையும் அதன் மூலம் பெற்றிருக்கிறார்.
"நான் படிக்கும் போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் சில மாற்றங்களை கொண்டுவந்தார்கள். ஆகவே, இலகுவாக எப்படி திட்டமிட்டு தேர்வுக்கு தயாராவது என்று எனக்கு பயன்படும் வகையில் சில குறிப்புக்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரித்தேன். அதனை பார்த்து பாராட்டிய எனது ஆசிரியர்கள் இது மற்ற மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் புத்தகமாக போடலாமே என்று ஐடியா கொடுத்தார்கள் அப்படித்தான் பாத் பைண்டர் புத்தகமாக உருவானது. ஆனால், நானும் அதே ஆண்டு தேர்வு எழுதியதால், 'என்னுடைய சக மாணவ போட்டியாளர்களுக்கு வழி காட்ட நானே ஏன் புத்தகம் எழுதி உதவ வேண்டும்?' என்று கேட்டு தடுக்க முயன்றவர்களும் உண்டு" என்கிறார் திவ்யா.
அதன்பின்பு மத்திய அரசுக்காக இந்திய சாதனைப் பெண்கள் குறித்து வெளியிட்ட 'The Indian Women' புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆக இருந்து அதனை உருவாக்கி இருக்கிறார். மூன்றவதாக வந்த புத்தகம் 'Applied Diplomacy - Though the Prism of Methology'.
நவீன தொழில்நுட்ப வசதிகள் இளம் அதிகாரிகள் மத்தியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களோடு சகஜமாக தொடர்புகொள்ள அது உதவுகிறது. மக்கள் இன்று தங்களது அனைத்து உரிமைகளையும், தகவல்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனை புரிந்து கொண்டு அனைவரும் பணியாற்றினால் பல மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பது இவரது தொழில்முறை மதிப்பீடு.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக சுற்றிவந்து கொண்டிருக்கும் இவருக்கு தப்போது மலையாள திரை உலகம் வலை விரிக்கத் தொடங்கி இருக்கிறது. "நடிகை கனவு எல்லாம் இல்லை. முதலில் பயிற்சி முடிக்க வேண்டும். பிறகு, சுகாதாரத் துறையில் பல சாதனைகளை செய்ய வேண்டும்.." என்பதே டாக்டர் திவ்யா ஐ.ஏ.எஸ். குறிக்கோள்.!
மலையாளத்தில் சுஜிதா ராஜீவ் | தமிழில் ஜெனிடா
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்: