கட்டுமானத்தில் 3டி அச்சு தொழில்நுட்பம்: அறிமுகப்படுத்தியது ஐஐடி மெட்ராஸ்!
ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், சமீபத்தில் கட்டுமானத்துறையில் இந்தியாவின் முதல் 3டி அச்சு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
தொழில்நுட்பத்தின் திறனை நிரூபிக்கும் வகையில் இந்தக் குழு அதன் முதல் 3டி அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 350 சதுர அடி கொண்ட வீட்டை ஒரு வார காலத்தில் கட்டி முடிக்க முடியும். வழக்கமாக வீடு கட்டுவதற்கான செலவுடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகும்.
இந்த தொழில்நுட்பத்தை Tvasta Manufacturing Solutions அறிமுகப்படுத்தியுள்ளது. ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களான ஆதித்யா விஎஸ், பரிவர்தன் ரெட்டி, வித்யாசங்கர், சந்தோஷ்குமார் நால்வரும் ஐஐடி மெட்ராஸ் சிவில் பொறியியல் துறையுடன் இணைந்து இந்நிறுவனத்தைத் துவங்கியுள்ளனர்.
தற்போதைய சந்தையில் ப்ராடக்டை அறிமுகப்படுத்த இக்குழு ’ஐஐடி மெட்ராஸ் ப்ரிண்டபிளிட்டி லேப்’ என்கிற 3டி அச்சு ஆய்வகத்தை நிறுவியுள்ளதாக ’தி இந்து பிசினஸ் லைன்’ தெரிவிக்கிறது.
இந்த நிறுவனம் இந்த கல்வி நிறுவனத்தின் வளாகத்திலேயே மூன்றாண்டுகளில் உருவாக்கப்பட்டது.
வளர்ச்சிக்கான செயல்முறை
டெக்கான் க்ரானிக்கல் உடனான நேர்காணலில் இணை நிறுவனர்களில் ஒருவரான வித்யாசாகர் சி தெரிவிக்கையில்,
வழக்கமாக ஒரு கான்க்ரீட் அடுக்கு வலுப்பெறுவதற்கு 28-30 நாட்கள் ஆகும். ஆனால் எங்களது புதுமையான தொழில்நுட்பம் வாயிலாக கான்கிரீட் 3 முதல் 5 நாட்களில் வலுவடையும்.
கணிணி வாயிலான கட்டுமானம் மூலம் பாதுகாப்பு தொடர்பான தரநிலைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதுடன் துல்லியமான முடிவுகள் பெறப்படும் என இந்த ஸ்டார்ட் அப் தெரிவிக்கிறது.
வித்யாசாகர் மேலும் குறிப்பிடுகையில்,
3டி மாடலிங் பயன்படுத்தி கணிணியில் வீட்டை வடிவமைத்தப் பிறகு அதைப் பிரிண்டருக்கு அனுப்பினால் டெலிவரி சிஸ்டமானது பிரிண்டர் வாயிலாக வீட்டையோ அல்லது வீட்டை உருவாக்கத் தேவையான ஒரு பகுதியையோ வழங்கும்.
கட்டுமானத்தில் 3டி அச்சு
இந்த தொழில்நுட்பத்தில் மென்பொருள், மூலப்பொருட்கள், பிரிண்டர், டெலிவரி சிஸ்டம் என நான்கு அம்சங்கள் உள்ளன
ஐஐடி மெட்ராஸ் சிவில் பொறியியல் துறை பேராசிரியரான மனு சந்தானம் கூறுகையில்,
”கான்கிரீட்டை 3டி பிரிண்டிங் செய்வது கட்டுமானத்தில் புதிய பரிமாணத்தை வழங்குகிறது. கான்கிரீட் அமைப்பு கொண்ட நவீன கட்டமைப்பில் காணப்படும் சிக்கலான தேவைகளுக்கு ஏற்றவாறு இந்த தொழில்நுட்பம் அமைந்துள்ளது,” என்றார்.
இந்த தொழில்நுட்பம் மூலம் நேரத்தையும் பணத்தையும் வெகுவாக சேமிக்கமுடியும் என இக்குழுவினர் தெரிவித்தனர். அத்துடன் பணிக்குத் தேவையான தொழிலாளர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். வீடுகள் அதிக நிலைத்தன்மையுடன் இருக்கும்.
”இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைவான விலையில் ஒரு மாதத்திற்குள்ளாகவே வழக்கமான வீட்டை கட்டிவிடலாம்,”
என வித்யாசாகர் விவரித்தார். வீட்டை கட்டுமானம் செய்ய முழுவீச்சில் செயல்படும் பிரிண்டரை உருவாக்குவதற்கான வாய்ப்பு குறித்து ஆராய இந்த ஸ்டார்ட் அப் தற்போது 10x10 மீட்டர் 3டி பிரிண்டர் முன்வடிவத்தை உருவாக்கியுள்ளது.
தேவையான கட்டுமானப் பொருட்களையும் கணிசமான அளவு சேமிக்கலாம். ஏனெனில் தற்போதைய வழிமுறைகள் மூலம் கட்டமைக்க முடியாத சிக்கலான வடிவங்களைக் கட்டமைக்க இந்த தொழில்நுட்பம் பயன்படும்.
கட்டுமானத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் வகையில் இயற்கையான பொருட்கள் அல்லது ஜியோபாலிமர் பயன்படுத்துவதை 3டி அச்சு சாத்தியப்படுத்தும்.
கட்டுரை : THINK CHANGE INDIA