'112' – உங்கள் நண்பனின் புது நம்பர்!
112 எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் காவல், அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புச் சேவைகளை பெறலாம். அமெரிக்காவின் 911 எண் சேவையை போலவே இந்தியாவில் 112 எண் பல்வேறு அவசர சேவை பிரிவுகளை தொடர்புகொள்ள உதவுகிறது.
இந்த அவசரச் சேவையை குறுஞ்செய்தி (SMS), அழைப்புகள் தடை செய்யப்பட அலைபேசி மற்றும் தொலைபேசிகளில் இருந்தும் தொடர்பு கொள்ள முடியும்.
![image](https://images.yourstory.com/production/document_image/mystoryimage/istgj4ex-emergency.jpg?fm=png&auto=format)
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு சிறுவனுக்கு விருது வழங்கி பாராட்டியது மாகாண அரசு. அப்படி அந்தச் சிறுவன் செய்தது என்ன?
நாம் அன்றாடம் அடிக்கடி செய்யும் ஒரு செயலைத்தான் தான் அந்தச் சிறுவனும் செய்தான். வேறொன்றும் புதிதாக இல்லை வீட்டு தொலைபேசியில் இருந்து ஒரு எண்ணைத் தொடர்புகொண்டான்.
அவன் அம்மாவிற்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவிலிருந்து காப்பாற்ற அவன் அழைத்தது அமெரிக்காவின் அவசர சேவைக்கான தொலைபேசி எண் 911-ஐ தான். தக்க நேரத்தில் அவன் செய்த செயல் அவன் அம்மாவை காப்பாற்றியது.
இந்த நிகழ்விற்கு சில நாட்களுக்கு முன்பு அந்தச் சிறுவனின் தந்தை அவனுக்கு ஆபத்து காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர தொலைபேசி எண் 911 பற்றியும் அதை பயன்படுத்துவது பற்றியும் கற்றுக்கொடுத்திருக்கிறார். இதையே தான் அந்தச் சிறுவன் தக்க சமயத்தில் செயல்படுத்தினான்.
அந்தச் சிறுவனின் வயது நான்கு மட்டுமே, அவனது பெயர் : மேத்தேவ்.
இந்த அவசர சேவை எண் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஆம் இந்தியாவில் அனைத்து அவசர பிரிவுகளுக்குமான தொடர்பு எண் 112 வரும் ஆண்டின் தொடக்கத்தில் (1-1-2017) இருந்து செயல்பாட்டிற்க்கு வருகிறது.
இந்த 112 எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் காவல், அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவைகளை பெறலாம்.
அமெரிக்காவின் 911 எண் சேவையை போலவே இந்தியாவில் 112 எண் பல்வேறு அவசரச் சேவை பிரிவுகளை தொடர்புகொள்ள உதவுகிறது.
இந்த அவசர சேவையை குறுஞ்செய்தி (SMS), அழைப்புகள் தடை செய்யப்பட அலைபேசி மற்றும் தொலைபேசிகளில் இருந்தும் தொடர்பு கொள்ள முடியும் என இந்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
![image](https://images.yourstory.com/production/document_image/mystoryimage/x2unnm0h-112a.jpg?fm=png&auto=format)
இதுவரை காவல், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்ற சேவைகளுக்கு தனித்தனியே எண்கள் இருக்கிறது, இனி வரும் காலங்களில் இந்த சேவைகள் அனைத்தும் 112 என்ற ஒற்றை எண்ணின் கீழ் கொண்டுவரப்படும்.
கூடிய விரைவில் அனைத்து அலைபேசிகளில் panic பட்டன் என்ற அவசர கால தொடர்பு சேவை அறிமுகப்படுத்த உள்ளது.
ஆபத்து காலத்தில் இந்த பட்டனை ஒரு முறை அழுத்தும் போது நாம் இருக்கும் இடம் தொடர்பான தகவல்களை தேவையான நபர்களுக்கு அனுப்பிவிடும்.
இந்த அவசர கால 112 எண் சேவையை தொடர்பு கொள்ளும் போது உள்ளூர் மொழிகளில் பதிலளிக்கும் வசதியும் உள்ளது.
எனவே உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மொபைல் போனில் ஆங்ரி பேர்ட்ஸ் (Angry Birds) விளையாட்டை அறிமுகப்படுத்தும் முன் இந்த அவசர காலச் சேவையை பதிவு செய்து அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அது அவர்களுக்கும், உங்களுக்கும் உதவியாக இருக்கும்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்: