ஆசிட் வீச்சு; பார்வை இல்லை: அனைத்தையும் வென்ற அன்பு: நெகிழ்ச்சி காதல் கதை!
ஒடிசாவின் 29 வயதான பிரமோதினி ரூலின் கதை!
”ஒருமுறை, நான் படுக்கையில் சிறுநீர் கழித்தேன். தயக்கமின்றி அவர் அதை சுத்தம் செய்தார். நான் அவரைக் கட்டிப்பிடித்து அழுதேன். இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.''
ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானதால் அவரது முகம் முழுவதுமாக சிதைந்துவிட்டது. தழும்புகளால் சூழப்பட்டது அவரது முகம். மேலும் இரண்டு கண்களையும் இந்த தாக்குதலில் பறிகொடுத்துவிட்டார் பிரமோதினி ரூல். ஆனால் இந்த கொடூரமான சம்பவம் ஒடிசாவின் 29 வயதான பிரமோதினி ரூலின் திருமணத்தை தடுக்கவில்லை.
ஒடிசாவின் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரமோதினி. ஆசிட் தாக்குதலின் அதிர்ச்சிகரமான நினைவுகளை ஒதுக்கித் தள்ள முடிவு செய்து, தனது நீண்டகால காதலன் சரோஜ் சாஹூ, (30) உடன் கைகோர்த்துள்ளார். உறவினர்கள் புடைசூழ இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நாளை அவர் தனது வாழ்க்கையின் சிறந்த நாள், என்று விவரிக்கிறார்.
"ஒரு பெண்ணின் முகம் திருமணத்திற்கு மிகவும் முக்கியம். இனி எனக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை என நினைத்தேன். எனது குடும்பம் மற்றும் என் காதலனின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், அது நடந்தது,” என்கிறார் பிரமோதினி.
தந்தை உயிரிழக்க, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் பிரமோதினி. 2 சகோதரிகள். அவர் 2009 ஆம் ஆண்டு ஒரு உள்ளூர் கல்லூரியில் படித்திக்கொண்டிருந்தபோது சந்தோஷ் வேதாந்த் குமார் என்ற ராணுவ ஜவான் தொடர்ந்து காதலிக்க கூறியும், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்திய வந்துள்ளார்.
இதை பிரமோதினி நிராகரித்தார். தொடர்ந்து நான் படிக்க வேண்டும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி மறுத்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரத்தில் சந்தோஷ், பிரமோதினி முகத்தில் ஆசிட் வீசியதாகக் கூறப்படுகிறது. மே 4, 2009 அன்று, அவள் மீது ஆசிட் வீசியுள்ளார் சந்தோஷ். டின்ஏஜாக இருந்த பிரமோதினி மீது சந்தோஷ் ஆசிட் வீச, அவரது உடலில் சுமார் 80 சதவீதம் காயம் ஏற்பட்டது மேலும் அவரது உடலின் கீழ் பாதி முடங்கியது.
"எனக்கு அப்போது வயது 17. நான் சுதந்திரமாக இருக்க வேண்டும், என் குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்று கனவுடன் இருந்தேன். நான் ஒரு சிறுவனின் வாய்ப்பை மறுத்ததால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. அவர் இராணுவத்தில் இருந்து நன்கு படித்த சிறுவன். ராணுவத்தினர் நம்மை பாதுகாப்பார்கள் என்று நம்பிய என் வாழ்க்கை பாழாகிவிட்டது,” என்று பிரதமோதினி சில நாட்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது வாழ்க்கையின் பயங்கரமான நாட்களை விவரித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கானது 2012ம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குப்வாராவில் வசித்து வந்தார்.
ஆனால், பிரமோதினியோ, தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மருத்துவமனை படுக்கையில் ஐந்து ஆண்டுகள் கழித்தார். 2014 ஆம் ஆண்டில், புவனேஸ்வரில் உள்ள பாலகதி பகுதியைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதி சரோஜ் சாஹு, முதல்முறையாக அவளைப் பார்த்தார். இருவரும் கல்லூரி கால நண்பர்கள்.
”அவர் என் தாயுடன் பேசுவார். எனக்கு பார்வை இல்லை, ஆனால் அவரது குரலை கேட்கும்போதெல்லாம், அது சரோஜ் என்று எனக்குத் தெரியும்” என்றும் கூறும் அவர், புவாஜி (தந்தையின் சகோதரர்) எனக்கு விஷ ஊசி கொடுத்து சாகடிக்கும்படி கூறினார். என் முகத்துக்கு நேராகவே அவர் இதை என்னிடம் கூறியுள்ளார். அவரிடம், நான் ஏற்கனவே இறந்துவிட்டேன் என்று கூறினேன்,” என்று ரூல் தனது ஃபேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.
"என் நண்பர்கள் அனைவரும் என்னைக் கைவிட்டுவிட்டார்கள். அப்போது நான் பெரிய அளவில் பேசாத சரோஜ் சாஹு, என் மீது ஏன் அக்கறை செலுத்த தொடங்கினார் எனத் தெரியவில்லை. அவர் தனது நர்ஸ் நண்பரிடமிருந்து எனது முகவரியைப் பெற்றுள்ளார். அவர் எனக்கு பிடித்த சாக்லேட்டுகளை வாங்கி வருவார். ஆனால் நான் ஆண்களைப் பற்றி எச்சரிக்கையாக இருந்தேன்.
ஒருமுறை, நான் படுக்கையில் சிறுநீர் கழித்தேன். தயக்கமின்றி அவர் அதை சுத்தம் செய்தார். நான் அவரைக் கட்டிப்பிடித்து அழுதேன். இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. நான் அவரிடம் கேட்டேன், 'நீங்கள் ஏன் இதையெல்லாம் செய்கிறீர்கள்?' அவர், 'ஹர் காம் கே பீச் காரணம் நஹி ஹோட்டா' (ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒரு காரணம் இல்லை) என்று பதிலளித்தார். அன்று நான் அவருடன் மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன், நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன். நான் அவரது முகத்தைத் தொட்டேன், நம்பிக்கையுடன் அதை நானே எனக்குள் வரைபடமாக்கிக்கொண்டேன்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் பிரமோதினி.
தகவல் உதவி - hindustantimes | தமிழில்: மலையரசு