மக்கும் சானிட்டரி பேட்களை தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் சமூக ஆர்வலர்!
நீங்களும் விலை மலிவு சானிட்டரி பேட்களை தயாரிக்கும் மெஷினை பேட்மேன் முருகானந்தத்திடம் இருந்து வாங்கி தேவைப்படுவோருக்கு அளிக்கலாம்.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் ஆறுகளிலும் நிலத்திலும் கொட்டப்படுவதால் அவற்றைத் தவிர்க்கவேண்டும் என சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ உரையின்போது வலியுறுத்தினார். அப்போதிருந்து ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 2022-ம் ஆண்டில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழித்துவிடுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களுக்கு சிறந்த மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் மட்டுமல்லாது பல்வேறு அரசு சாரா நிறுவனங்களும் தனிநபர்களும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாபின் லூதியானா பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பரம் சைனி சுற்றுச்சூழலுக்கு உகந்த, மக்கும்தன்மை கொண்ட சானிட்டரி பேட்களை இலவசமாக வழங்குகிறார்.
லூதியானாவின் கிருஷ்ணா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மேல் மாடியில் ஒரு சிறு பட்டறை அமைக்கப்பட்டுள்ளது. 52 வயதான ராஜிந்தர் கவுர், 28 வயதான ஷிகா, 52 வயதான மதன் பால் வர்மா ஆகியோர் இங்கு பணிபுரிகின்றனர். பரம் சைனி தலைமையில் செயல்படும் இந்தக் குழு ஒரு மாதத்திற்கு 20,000 சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கிறது. இந்த சானிட்டரி பேட்கள் மரக்கூழ், காட்டன், ஆர்கானிக் இழைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் பரம் கூறும்போது,
“நாங்கள் தற்சமயம் லூதியானா, கபுர்தலா, ஜலந்தர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு நாப்கின்களை விநியோகித்து வருகிறோம். ரோட்டரி க்ளப் பணியாளர்கள் மூலம் இமாச்சல பிரதேசத்தின் பாலம்பூர் பகுதியில் உள்ள சில பள்ளிகளுக்கும் விநியோகிக்கிறோம். மேலும் குடிசைப்பகுதிகள் மற்றும் மகளிர் சிறைச்சாலைகளுக்கும் விநியோக்கிறோம்.
இத்தகைய நாப்கின்களை இங்குள்ள பெண்கள் இதற்கு முன்பு பயன்படுத்தியதில்லை என்பதால் இவை எவ்வாறு அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை தெரிவித்தனர். இவர்கள் முன்பு துணிகளை பயன்படுத்தியதால் உடலில் தடிப்பும் நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளது. சிறுமிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர்நல மருத்துவர்களை பள்ளிக்கு அழைத்து செல்கிறோம்,” என்றார்.
பரம் நிறுவனத்தைத் தொடங்க இந்தியாவின் ’பேட்மேன்’ என்றழைக்கப்படும் அருணாச்சலம் முருகானந்தத்திடம் இருந்து 3.4 லட்ச ரூபாய் கொடுத்து இயந்திரத்தை வாங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் அவர்களின் உறவினரான பேராசிரியர் ஜக்மோகன் சிங் இலவசமாக இடவசதி வழங்கினார்.
2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவனம் தொடங்கப்பட்டபோது ரோட்டரி க்ளப் லூதியானா பிரிவு இயந்திரம் வாங்க பரமிற்கு ஆதரவளித்தது. அதேபோல் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க நன்கொடை தொகை உதவுகிறது. இந்தத் தொகை போதுமானதாக இல்லாத பட்சத்தில் பரம் தனது சொந்த பணத்தில் இருந்து பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதாக ’இந்தியன் வுமன் ப்ளாக்’ தெரிவிக்கிறது.
ராஜிந்தர் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும்போது,
“ஆரோக்கியத்திற்கு சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை சிறுமிகள் தெரிந்துகொள்ளவேண்டும். நான் தனிப்பட்ட முறையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். எங்களால் நாப்கின்கள் வாங்கமுடியாது. எப்போதும் தொற்று ஏற்படும் அபாயம் இருந்தது. தற்போது 28 வயதாகும் என்னுடைய மகன் நான் இங்கு பணிபுரிவதற்காக என்னை பாராட்டுவதுடன் நேரம் கிடைக்கும்போது இங்கு வந்து எனக்கு உதவுகிறார்,” என தெரித்ததாக ’இண்டியன் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிடுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA