இந்தியாவில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமேசான் திட்டம்: பெசோஸ் அறிவிப்பு!
இந்தியாவை முக்கிய வளர்ச்சிச் சந்தை என்று தெரிவித்துள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் டிஜிட்டல்மயமாக அமேசான் நிறுவனம் படிப்படியாக 100 கோடி டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7,000 கோடி) முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனரும், சி.இ.ஓவுமான ஜெப் பெசோஸ், மூன்று நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.
செவ்வாய் கிழமை தில்லி வந்த பெசோஸ், தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அமேசான் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டாக இருக்கும் எனும் கணிப்பை அவர் வெளியிட்டார். தனது தொழில்முனைவுப் பயணம் பற்றி குறிப்பிட்டவர்,
“எனக்கு இந்த ஐடியா உண்டான போது, இதை முயற்சிக்காவிட்டால் பின்னர் வருந்துவேன் என நினைத்தேன். கடந்த 25 ஆண்டுகளில் நிகழ்ந்தவை என் எதிர்பார்ப்பை மிஞ்சியவை,” என்றும் அவர் கூறினார்.
“இந்த துடிப்பு, ஆற்றல், வளர்ச்சி. இந்த நாடு விஷேசமானதைக் கொண்டிருக்கிறது. அது ஜனநாயகமாகும்,” என்றும் பெசோஸ் கூறினார்.
2025 வாக்கில் அமேசான் நிறுவனம் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும், அமேசான் ஏற்கனவே இந்தியாவில் 5.5 பில்லியன் டாலர் முதலீட்டை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள், ஆன்லைனில் செயல்பட்டு, விற்பனை செய்யும் வகையில், அவை டிஜிட்டல்மயமாக 100 கோடி டாலர் படிப்படியாக முதலீடு செய்ய இருப்பதாகவும் பெசோஸ் தெரிவித்தார்.
இந்திய பயணத்தின் போது அமேசான் நிறுவனர் பெசோஸ், முகேஷ் அம்பானி, ரத்தான் டாடா உள்ளிட்ட தொழிலதிபர்களையும் சந்தித்து பேச இருக்கிறார்.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் 100 நகரங்கள், கிராமங்களில் டிஜிட்டல் குடில்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இ-காமர்ஸ் தொடர்பான பலவித வசதிகளையும், சேவைகளையும் இந்த டிஜிட்டல் குடில்கள் வழங்கும்.
இதனிடையே, அமேசான் நிறுவனம் தள்ளுபடிச் சலுகை அளித்து குறைந்த விலையில் ஆன்லைனில் பொருட்களை விற்பதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து சில்லரை வியாபார வர்த்தகர்கள் பல இடங்களில் அமேசான் நிறுவனர் வருகை எதிர்த்து போராட்டம் நடத்தினர். எனினும் அமேசான் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
தொகுப்பு: சைபர்சிம்மன்