ராஜஸ்தான் கிராமத்தில் அடிப்படை சுகாதார பராமரிப்பு வசதிகளைக் கொண்டு சேர்க்கும் ஆஷா பணியாளர்!
ஆஷா பணியாளரான சாந்தா கார்க் ராஜஸ்தானின் உதய்பூர் பகுதியில் தாய்மார்களுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்தும் சுகாதார பராமரிப்பும் கிடைப்பதை உறுதி செய்கிறார்.
இந்தியாவில் தரமான சுகாதார பராமரிப்பு என்பது பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கான சிறப்புரிமையாகவே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. 1.2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 0.7 மருத்துவர்களும் 1.1 படுக்கைகளும் மட்டுமே உள்ளது.
இது கவலையளிக்கும் செய்தியாகவே உள்ளது. அடிப்படை சுகாதார பராமரிப்பை விளிம்பு நிலையில் இருப்போருக்கு கொண்டு சேர்ப்பது இந்த நேரத்தில் அவசரத் தேவையாக உள்ளது.
ராஜஸ்தானின் உதய்பூர் அருகே உள்ள பாட்காவோன் பகுதியில் Dulawato Ka Guda பள்ளியின் மூலம் ஆஷா சமூக சுகாதார ஆர்வலரான சாந்தா கார்க் இந்தச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.
சமூகத்தினருக்கும் பொது சுகாதார அமைப்பிற்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார் சாந்தா.
முதுநிலை பட்டதாரியான சாந்தா பயிற்சி பெற்ற பிறகு தினமும் கிட்டத்தட்ட 10 வீடுகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களிடையே பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். இவர் என்டிடிவி உடனான உரையாடலில் கூறும்போது,
”நாங்கள் தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகள் (ஐ.ஈ.சி) மூலமாகவும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்பிக்கிறோம். விளையாட்டு மற்றும் கதைகள், ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துரைக்க ஐ.ஈ.சி நடவடிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இவை எங்கள் கிராமத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்றார்.
தாய்மார்கள் மற்றும் பாட்டிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் அமர்வுகளில், கர்ப்பிணிப் பெண்களுக்கு கருத்தரித்த நாள் தொடங்கி முதல் 1,000 நாட்களில் ஊட்டச்சத்து வழங்கப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுக்கப்படவேண்டியதன் முக்கியத்துவமும் எடுத்துக்கப்படுகிறது.
சாந்தா தான் சந்தித்த சவால்கள் குறித்து கூறும்போது,
”இதற்கு முன்பு எங்கள் கிராமத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ’பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரிவ் அபியான்’ திட்டத்தின்கீழ் பலனடைய குறைவான கர்ப்பிணிப் பெண்களே விண்ணப்பித்தனர். அப்போதுதான் இது குறித்த புரிதலை யாரிடம் ஏற்படுத்தவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டேன். பல ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து கர்ப்பிணிப் பெண்களின் மாமியார்களைக் கட்டாயப்படுத்தி சம்மதிக்கவைத்தோம். தற்போது அவர்கள் தங்களது மருமகளை அழைத்து வந்து சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கின்றனர்,” என தெரிவித்ததாக என்டிடிவி குறிப்பிடுகிறது.
தற்போது ஒவ்வொரு குழந்தைக்கும் முறையான ஊட்டச்சத்தும் தடுப்பூசியும் வழங்கப்படுவதாக சாந்தாவின் கிராம மேற்பார்வையாளர் கண்ணையா லால் தெரிவித்தார். மேலும் கர்ப்ப காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுமுறை குறித்தும் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் விதம் குறித்தும் தாய்மார்கள் தெர்ந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.
சாந்தாவின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டு சமீபத்தில் அவருக்கு ‘அவுட்லுக் போஷான் விருதுகள் 2019’ வழங்கப்பட்டதாக ’அவுட்லுக்’ தெரிவிக்கிறது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில் பல்வேறு பயிற்சி அமர்வுகள் ஏற்பாடு செய்து வரும் இந்திய சர்வதேச மேம்பாட்டு ஆலோசனை அமைப்பான IPE சாந்தாவின் பணியை கவனித்தது.
”கடந்த 12 ஆண்டுகளில் என்னுடைய பணி வாயிலாக என்னால் ஏற்படுத்த முடிந்த மாற்றத்தை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். வரும் ஆண்டுகளிலும் மேலும் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்,” என்றார் சாந்தா.
கட்டுரை: THINK CHANGE INDIA