ராஜஸ்தான் கிராமப்புறங்களுக்கு குடிநீர், மின்சார வசதிகளை ஏற்படுத்தியுள்ள மருத்துவ மாணவர்!
24 வயது அஷ்வானி பராஷர் ராஜஸ்தானின் தொலைதூர கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கப் போராடி, தற்போது இந்த கிராமவாசிகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார வசதி கிடைத்துள்ளது.
ராஜஸ்தானையும் மத்திய பிரதேசத்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் உள்ளது ராஜ்காட் கிராமம். இந்த கிராமம் முக்கிய சமூகத்துடன் இணையாமல் விலகியுள்ளது.
பாறைகளுடன்கூடிய ஒழுங்கில்லாத சாலைகள் காணப்படும் இந்தப் பகுதியில் சிமெண்ட் சாலைகள் என்பது எட்டாக் கனவாகவே உள்ளது. இங்குள்ள கிராமவாசிகள் தண்ணீருக்காகவும் மின்சார வசதிக்காகவும் எப்போதும் போராடி வருகின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
பாறைகள் நிறைந்த இந்தப் பகுதியில் நிறைவேறாத கனவுகளுடன் வாழ்ந்து வரும் கிராமத்தினரின் வாழ்க்கையில் நுழைந்தார் அஷ்வானி பராஷர். எத்தகைய மாற்றம் ஏற்படவேண்டும் என்று விரும்புகிறாரோ அத்தகைய மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்பதே 24 வயதான இந்த மருத்துவரின் நோக்கமாகும்.
அஷ்வானி ஜெய்ப்பூர் சவாய் மன் சிங் மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் 2016-ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் நலிந்த பிரிவினைச் சேர்ந்த மக்களுக்கு இனிப்புகள் வழங்குவதற்காக ராஜ்காட் பகுதிக்கு முதல் முறையாகச் சென்றார். இங்குள்ள கிராமவாசிகளுக்கு மின்சார வசதியோ குடிநீரோ இல்லாததைக் கண்டு அதிர்ந்தார்.
கைகளால் இயக்கப்படும் பம்ப் தவிர இந்த கிராமத்திற்கு இருந்த ஒரே நீராதாரம் சம்பல் ஆறு மட்டுமே. அதுவும் மாசடைந்திருந்தது.
”ஆற்றின் மேற்பரப்பில் விலங்குகளின் உடல் மிதந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்தப் பகுதிவாசிகளும் வேறு வழியின்றி உயிரைப் பணயம் வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தனர். அத்தகைய மோசமான சூழலிலேயே அவர்கள் வாழ்ந்து வந்தனர்,” என்றார் அஷ்வானி.
பெரும்பாலான கிராமவாசிகளுக்கு சூரியன் மறைந்த பிறகு வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும். பகல் வேளையிலேயே உணவு சமைத்துவிட வேண்டும். கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் திறந்தவெளி கழிப்பிடங்கள் பரவலாக காணப்படுகின்றன.
இந்த நிலையைக் கண்ட அஷ்வானி கிராமத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்துமாறு சில நண்பர்களின் உதவியுடன் பல்வேறு அரசுத் துறைகளை அணுகினார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், முதன்மை செயலாளர் போன்றோருடன் பல்வேறு சந்திப்புகளை ஏற்பாடு செய்தார். மாநிலத்தின் முதலமைச்சருக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் கடிதம் எழுதினார்.
சந்திப்புகளுக்கும் கடிதங்களுக்கும் எந்தவித பலனும் இல்லாமல் போனது. உடனே அஷ்வானி தனது நோக்கத்தில் மக்களை ஒருங்கிணைப்பதற்காக #SaveRajghat என்கிற சமூக ஊடக பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவின்படி வாழ்வுரிமை அடிப்படையில் 2019-ம் ஆண்டு ராஜஸ்தான் அரசிற்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றையும் பதிவு செய்தார்.
இவர் கிராமத்தின் மோசமான நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் இங்குள்ள குடியிருப்புவாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்த மக்களின் உதவியையும் நாடினார். #SaveRajghat பிரச்சாரம் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அஷ்வானியின் இந்த முயற்சிகள் மூலம் ராஜ்காத் பகுதியின் வளர்ச்சிக்காக அரசு சாரா நிறுவனங்களிடமிருந்தும் தனிநபர் நன்கொடையாளர்களிடமிருந்தும் தேவையான நிதியுதவி பெறப்பட்டது. இன்று இங்குள்ள 100 வீடுகளிலும் மின்சார வசதி உள்ளது. பெரும்பாலான வீடுகளில் சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் உள்ளது.
இணைந்து செயல்பட்டால் அனைத்தும் சாத்தியமே!
”இந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை. ஆனால் முயற்சிக்கான பலன் கிடைத்தது. இறுதியாக மக்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார் அஷ்வானி பராஷர்.
ராஜ்காட் பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்த ஏராளமான தனிநபர்களும் நிறுவனங்களும் முன்வந்தன. அஹமதாபாத்தைச் சேர்ந்த Karma Konnect என்கிற அரசு சாரா நிறுவனம் கூட்டுநிதி பிரச்சாரத்தைத் தொடங்கியது. சுத்தமான குடிநீர் விநியோகத்திற்காக தண்ணீர் ஃபில்டர்களை நிறுவ இந்த நிதித்தொகை பயன்படுத்தப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான சுரேந்திரா ஜிதானி சோலார் பேனல் நிறுவத் தேவையான தொகையை வழங்கி உதவினார். பின்னர் தொடர்ந்து மின்சார வசதி கிடைக்கத் தேவையான வளங்களை இந்திய நார்வேஜிய சமூகம் வழங்கியது,” என்றார்.
இவர் தொடுத்த பொதுநல வழக்கு பலனளித்தது. ராஜ்காட் பகுதியில் எட்டு பொதுக் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் முதன்மை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்த கிராமம் திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதியாக மாறியது. மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டது. தற்போது குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கவேண்டும் என்பதற்காக பைப்லைன் கட்டும் பணியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
நேர்மறை மாற்றம்
அஷ்வானியும் அவரது நண்பர்களும் ராஜ்காட் குடியிருப்புவாசிகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை வழங்குவதற்காக வளங்களை ஏற்பாடு செய்தனர். இதற்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.
”என் குடும்பம் சுத்தமான குடிநீர் இன்றி அவதிப்பட்டது. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு என் குழந்தைகளால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை. அருகாமையில் கழிப்பறை கட்டத் தேவையான பணம் கிராம மக்களிடம் இல்லை. அஷ்வானி பராஷர் எங்கள் கிராமத்திற்கு வந்த பிறகே எங்கள் பகுதியில் மாற்றம் ஏற்பட்டது,” என்றார் ராஜ்காட் பகுதிவாசியான ராமச்சந்திரன்.
ராஜ்காட் பகுதியில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் இங்குள்ள பெரும்பாலான ஆண்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏனெனில் இந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தங்களது மகளை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் விரும்பவில்லை. இதனால் இந்தப் பகுதி ‘பேச்சுலர்ஸ் கிராமம்’ என்றே அழைக்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் இங்கு இரண்டு திருமணங்கள் மட்டுமே நடந்துள்ளது. எனினும் இரண்டு வாரங்களுக்கு முன்பு வீரிசிங் மற்றும் ஊர்மிளாவின் திருமணம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
”என்னுடைய மகளுக்கு ராஜ்காட் பகுதியைச் சேர்ந்தவருக்கு மணமுடித்துக் கொடுப்பேன் என்றும் இவ்வளவு பிரகாசமான சூழலில் திருமணம் நடக்கும் என்றும் என் கனவிலும் நினைக்கவில்லை,” என்றார் ஊர்மிளாவின் அப்பா தீனதயாள்.
தடைகளைத் தகர்த்து வெற்றியடைதல்
அஷ்வானி பராஷர் ராஜ்காட் மக்களின் மேம்பாட்டிற்காக போராடினார். பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் சற்றும் மனம் தளராமல் தொடர்ந்து செயல்பட்டார்.
இத்தகைய மகத்தான பணியை செய்துமுடிப்பது சவால் நிறைந்ததாகவே இருந்தது.
”என்னுடைய நேரத்தை முறையாக நிர்வகிப்பது சவால் நிறைந்ததாக இருந்தது. படிப்பிலும் மருத்துவ ஆய்விலும் வார நாட்களில் கவனம் செலுத்தினேன். வார இறுதியில் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தினேன். இந்த செயல்முறையில் பலர் நம்பிக்கை இழக்கச் செய்தனர். என்னுடைய முயற்சிகள் அனைத்தும் பலனற்று போகும் என்று எதிர்மறை கருத்துகளைத் தெரிவித்தனர். ஆனால் நான் மனம் தளர்ந்துவிடவில்லை. கிராம மக்களின் மோசமான நிலையைக் கண்டு என்னால் அமைதியாக கடந்து சென்றுவிட முடியவில்லை,” என்றார் அஷ்வானி.
24 வயதான இவர் எம்.டி படிப்பதற்காக தற்போது நுழைவுத் தேர்விற்குத் தயாராகி வருகிறார். இருப்பினும் ராஜ்காட் பகுதியை மேம்படுத்தும் இவரது முயற்சி தொடர்கிறது. அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பள்ளியை சீரமைக்க திட்டமிட்டுள்ளார். அத்துடன் குடிநீர் வழங்குவது தொடர்பான அரசாங்க ஏற்பாடுகளையும் மேற்பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா