ஏழ்மையால் கல்வி இழந்த ஆசிஃப்; இன்று ஏழைகளுக்கு உதவிடும் துபாய் செல்வந்தர்!
ஆசிஃப் கமல் கொரோனா வைரஸ் பெருந்தொற்று சூழலால் தவிக்கும் கிராமப்புற மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்து உதவி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எத்தனையோ நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் தனிநபர்களும் கஷ்டப்படுவோர்களுக்கு உதவி வருகின்றனர். இவர்கள் உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து வருகின்றனர்.
அப்படி உதவுபவர்களில் ஒருவர் ஆசிஃப் கமல். இவரே ஏழ்மை நிலையில் இருந்து செல்வந்தர் ஆனவர் என்பதால் இவரால் தினக்கூலிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகளை நன்கு உணர முடிந்தது.
'ஆசிஃப் கமல் அறக்கட்டளை’ இவரது நிறுவனம். இந்நிறுவனம் கிராமப்புறங்களில் கஷ்டப்படுவோர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவு வருகிறது. அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடுகளும் செய்து வருகிறது.
ஆசிஃப் துபாயைச் சேர்ந்த Alturaash Group தலைவர். இந்தியாவின் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்களை மேம்படுத்துவதே இவரது வாழ்நாள் நோக்கம். இவர் துபாயியிலும் டெல்லியிலும் கலைக்கூடம் நடத்தி வருகிறார்.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இவரது அறக்கட்டளை மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் அனைவருக்கும் கல்வியும் மருத்துவ வசதியும் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தைப் பற்றியும் ஆசிஃப் கமல் சோஷியல்ஸ்டோரி உடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
ஆரம்ப நாட்கள்
ஆசிஃப்பின் தனது குழந்தைப் பருவத்தை பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் கழித்தார். இந்த கிராமம் நேபால் எல்லையில் அமைந்துள்ளது. சுபால் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 10 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. ஆசிஃப்பின் அப்பா கிராமத்தில் அஞ்சல் நிலையத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார். ஆனால் குடும்பத்தின் பணச்சூழல் காரணமாக பணி தேடி துபாய் சென்றார். ஐந்தாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு இந்திய தூதரகத்தில் பணி கிடைத்தது.
“என் அம்மா மிகவும் துணிச்சலானவர். எங்களைப் படிக்கவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். குறைந்த பணத்தைக் கொண்டு அவர் குடும்பத்தை நிர்வகிக்கவேண்டிய சூழல் இருந்தது,” என்றார் ஆசிஃப்.
ஆசிஃப் இருந்த பகுதியில் பள்ளிக் கட்டிடங்கள் ஏதும் இல்லை. மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்றன. எனினும் அந்தக் கிராமத்தில் ஒரு சிறு அகாடெமி நிறுவப்பட்டபோது ஆசிஃப்பின் அம்மா உடனடியாக முதல் மாணவராக ஆசிஃபை அங்கு சேர்த்தார். எட்டாம் வகுப்பு வரை அங்கு படித்தார்.
விரைவிலேயே அவர்கள் தர்பாங்கா மாவட்டத்திற்கு மாற்றலாயினர். அங்கு ஆசிஃப்பின் அம்மாவின் பகுதியில் தங்கினார்கள். அரசுப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எழுதினார்.
ஆசிஃப் மேற்படிப்பு படிக்காத காரணத்தால் ஷாப்பர்ஸ் ஸ்டாப்பில் விற்பனையாளராக பணிபுரிவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தார். மாதம் 4,000 ரூபாய் சம்பாதித்தார். Hutch நிறுவனத்தில் கால் செண்டர் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.
ஆசிஃப் கமல் அறக்கட்டளை
2009-ம் ஆண்டு தனது அப்பாவிடம் வணிக செயல்பாடுகளைக் கற்றுக்கொள்ள ஆசிஃப் துபாய் சென்றார். ஆரம்பத்தில் சொந்தமாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வணிகத்தைத் தொடங்கினார். அந்நிறுவனம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியதும் கலைப் பிரிவு தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டார்.
2019-ம் ஆண்டு சமூக நலனில் பங்களிக்கும் நோக்கத்துடன் ஆசிஃப் கமல் அறக்கட்டளை நிறுவினார்.
“மற்றவர்களுக்கு உதவி செய்யும் நிலையில் நான் இருப்பதால் நலிந்தோர்களின் நலனில் பங்களிக்க விரும்பினேன். எந்த ஒரு காலகட்டத்திலும் குழந்தைகளின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. குறிப்பாக சுபால் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. என்னால் அவர்களது வலியை உணரமுடிந்தது,” என்றார்.
அவரது கிராமத்தில் மாணவர்கள் எட்டாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்யும் விகிதம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அவர் கல்வியில் கவனம் செலுத்துவதற்கு இதுவே முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த கிராமத்திற்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் உயர்தர கல்வி வசதி வழங்கப்பட உதவவேண்டும் என்று தீர்மானித்தார்.
இந்த அறக்கட்டளை விரைவிலேயே படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கத் தொடங்கியது. மாணவர்களின் குடும்ப வருமானத்தையும் படிப்பில் உள்ள ஆர்வத்தையும் அடிப்படையாகக் கொண்டே உதவித்தொகை வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இந்த அறக்கட்டளை சுகாதாரப் பராமரிப்பிலும் கவனம் செலுத்த விரும்பியது.
“பீகாரில் பாட்னா நகருக்கு அருகில் வசிப்பவர்கள் மருத்துவமனையைச் சென்றடைய 400 கி.மீட்டருக்கும் மேலாக பயணம் செய்யவேண்டியிருந்தது. எனவே இதுபோன்ற கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு எளிதாக மருத்துவ வசதி கிடைக்க உதவும் வகையில் மருத்துவமனை இருப்பதை உறுதிசெய்ய விரும்பினோம்,” என்றார் ஆசிஃப்.
கோவிட்-19 பெருந்தொற்று கால உதவிகள்
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தினக்கூலிகளும் புலம்பெயர் தொழிலாளர்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிஃப் அறக்கட்டளை இவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்ளைக் கொடுத்து உதவி வருகிறது.
இந்நிறுவனம் பீகார், டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
“இந்த நோய் கிருமியும் தற்போதைய சூழலும் நமக்கு புதிது. ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் அதிகம் கஷ்டப்படுகின்றனர். எனவே இவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணிகளில் எங்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்,” என்றார் ஆசிஃப்.
இக்குழுவினர் உதவி எண்ணை அமைத்துள்ளனர். தொடர்புகொள்ள வேண்டிய இந்த உதவி எண்ணை வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைக் கண்டறிய இந்தக் குழுக்கள் உதவுகின்றன. இந்தக் குழுவில் உள்ளூர் அமைப்புகளும் அடங்கும்.
இதுவரை இந்நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி உதவியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளது.
“மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப உதவி வருகிறோம். அடுத்த பகுதிக்கு செல்ல முடியாமல் நகர்புறங்களில் தவிப்பவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர பாஸ் வழங்குகிறோம். உணவுப் பொருட்கள் தேவைப்படாதவர்களுக்கு நிதி உதவியும் வழங்குகிறோம்,” என்றார் ஆசிஃப்.
ஊரடங்கு
இந்நிறுவனம் பள்ளி, மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றை ஒரே இடத்தில் கட்ட விரும்புகிறது. ஆதரவற்றோர் இல்லம் என்பது வீடற்ற குழந்தைகளுக்கும் பெற்றோர்களால் பராமரிக்க முடியாத நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்குமானது.
குழந்தைகளுக்கு தரமான கல்வியும் அடிப்படை சுகாதார வசதிகளையும் அறக்கட்டளை வழங்கும். குடும்பத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு மிகக் குறைவான கட்டணம் செலுத்த இயன்றவர்களிடம் சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். இயலாதவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படும்.
அரசு மருத்துவமனையில் வசூலிக்கப்படும் அளவிற்கு மிகக்குறைந்த கட்டணத்துடன் தனியார் மருத்துவமனை போன்ற வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதே இவர்களது மருத்துவமனையின் நோக்கம்.
கட்டணம் செலுத்த இயன்றவர்களால் இந்த சேவைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும் தேவையிருப்போர்களுக்கு சரியாகச் சென்றடையவும் ஆசிஃப் ஒரு திட்டத்தை வகுத்துள்ளார்.
“முதல் கட்டமாக வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை BPL கார்டு மூலம் கண்டறிவோம். மாவட்ட தலைவர்களின் தரவுகளில் அந்த விவரங்களை சர்பார்ப்போம்,” என்றார் ஆசிஃப்.
மருத்துவத்திற்காக செலவிட இயலாதவர்கள் வருவாய் இல்லை என்பதற்கான கடிதத்தை சமர்ப்பித்தால் இலவசமாக மருந்து மற்றும் சிகிச்சைகளை வழங்கி இந்நிறுவனம் உதவும்.
தற்சமயம் இந்த பிராஜெக்ட் சுய நிதியில் செயல்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்நிறுவனம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆசிஃப்பின் முயற்சியில் ஏற்கெனவே பல முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா