‘மிஷன் மில்க்’ - தினமும் 500 லிட்டர் பாலை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவும் இளைஞர்கள்!
இந்த முயற்சி தொடங்கி ஊரடங்கு சமயத்தில் தினக்கூலி மக்களுக்கு இலவசமாக பால் வழங்கி வருகின்றனர் இத்தொழில் முனைவோர்கள்!
கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களும் தினக்கூலிகளும் எண்ணற்ற ஏழை மக்களும் உணவின்றி தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவி வருகின்றன. ஆனால் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு அவர்களின் முக்கிய உணவான பால் கிடைப்பதில்லை.
இதை உணர்ந்து உறவினர்களான பெங்களூருவைச் சேர்ந்த ஜீஷன் ஜாவித், ஜுஃபிஷன் பாஷா, ஷேசர் ஷெரீஃப் ஆகிய மூன்று தொழில்முனைவோர்களும் ‘மிஷன் மில்க்’ தொடங்கினார்கள். இவர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து தினமும் 500 லிட்டர் அளவிலான பாலை ஏழை மக்களுக்குக் கொடுத்து உதவி வருகின்றனர்.
ஊரடங்கு பிறப்பக்கப்பட்டது முதல் இவர்கள் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
“குடிசைப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு போதுமான பால் கிடைப்பதில்லை என்பதைத் தெரிந்துகொண்டோம். மில்க் மிஷன் முயற்சி மூலம் கிட்டத்தட்ட 45 நாட்களாக பால் வழங்கி வருகிறோம்,” என்று ஜீஷன் சோஷியல்ஸ்டோரி இடம் தெரிவித்தார்.
இக்குழுவினர் முதலில் இடத்தைக் கண்டறிந்து அந்தப் பகுதியில் வசிக்கும் நபர்கள், குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்தனர். பின்னர் அருகிலுள்ள நந்தினி டெய்லி பார்லரை அணுகி மொத்த விலைக்கு பேசி விலையை நிர்ணயிக்கின்றனர். அதன் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் தொகையை செலுத்திவிடுகின்றனர்.
அதன் பிறகு தன்னார்வலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு சென்று பால் பாக்கெட்டுகளை சேகரித்து விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த இந்தப் பணிகளில் உள்ளூர் தன்னார்வலர்களே தேர்வு செய்யப்பட்டனர்.
இக்குழுவினர் இதுவரை 16,800 லிட்டர் பாலை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவியுள்ளனர். குழுவினர் அனைவரும் முகக்கவசம், கையுறை போன்றவற்றை அணிந்து செல்வதை மூவரும் உறுதிசெய்தனர்.
இந்த முயற்சி குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி நிதி திரட்டுவதற்காக ‘மிலாப்’ கூட்டுநிதி தளத்துடன் இணைந்துள்ளனர்.
“இதுபோன்ற கடினமான சூழல்களில் ஏழை மக்கள் படும் துன்பத்தை பலரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எங்களது நோக்கம். இந்தப் புரிதலை ஏற்படுத்தி பலர் உதவ முன்வருவதற்கு உந்துதலளிக்க விரும்புகிறோம்,” என்கிறார் ஜீஷன்.
கட்டுரை: Think Change India