27 வயதில் 1 பில்லியன் டாலர் மதிப்பு யூனிகார்ன் நிறுவனத்தின் சி.இ.ஓ.ஆன முதல் இந்திய பெண்!
27 வயதில் பலரும் தங்கள் தொழில்முறை வாழ்க்கையில் முன்னேறுவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்திய இளம் பெண் அங்கிதி போஸ், 27 வயதில் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ள யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சி.இ.ஓவாக துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த சாதனையின் மூலம் அங்கிதா, யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனத்திற்கு சி.இ.ஓ ஆக பொறுப்பு வகிக்கும் முதல் இந்திய பெண்ணாகி இருக்கிறார். இளம் வயதில் இந்த சிகரத்தை அவர் அடைந்திருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு.
மும்பையில் உயர் கல்வியை முடித்த அங்கிதி போஸ் இணை நிறுவனராக துவங்கிய Zilingo ஸ்டார்ட் அப் நிறுவனம் சில மாதங்களுக்கு முன், தெற்காசிய நாடுகளில் விரிவாக்கத்திற்காக 226 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. இதனையடுத்து அதன் சந்தை மதிப்பு 970 மில்லியனாகி, ஒரு பில்லியன் டாலரை நெருங்கியதால் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றுள்ளது.
இ-காமர்ஸ் துறையைச் சேர்ந்த இந்நிறுவனத்தை அங்கிதி, இணை நிறுவனர் துருவ் கபூருடன் இணைந்து நடத்தி வருவதாக, அங்கீதி சாதனை தொடர்பான பிஸ்னஸ் டுடே செய்தி தெரிவிக்கிறது. துருவ், பெங்களூருவில் 100 பேர் கொண்ட தொழில்நுட்ப அணியை நிர்வகிக்கிறார்.
செக்கோயா கேபிடல் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்கள் அண்மைச் சுற்று நிதி அளித்தலில் பங்கேற்றுள்ளன. இது வரை zilingo 306 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
அங்கிதா, துருவ் கபூருடன் இணைந்து 2015 ல் ஜிலிங்கோ நிறுவனத்தை துவக்கியதாக ஜிகியூ இதழ் செய்தி தெரிவிக்கிறது. அங்கிதா மும்பை கல்லூரியில் படித்து முடித்த பின், மெக்கின்சி ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் அவர் செக்கோயா நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, இ-காமர்ஸ் நிறுவனத்தை துவக்குவது பற்றி யோசித்திருக்கிறார்.
பெங்களூருவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில், கேமிங் ஸ்டூடியோவில் பொறியாளராக இருந்த துருவ் கபூரை சந்தித்து பேசிய போது, அங்கிதி இருவருக்கும் பரஸ்பரம் திறன்கள் ஒத்துப்போவதை உணர்ந்திருக்கிறார். இருவருமே சொந்தமாக தொழில் துவங்கும் எண்ணத்திலும் இருந்தனர்.
இதன் பயனாக இருவரும் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஜிலிங்கோ நிறுவனத்தைத் துவக்கினர். தெற்காசியாவை சேர்ந்த சிறு வணிகர்கள் தங்கள் பிராண்டை வளர்த்துக்கொள்ள உதவும் இ-காமர்ஸ் தளமாக இது செயல்படுகிறது.
தாய்லாந்தில் உள்ள பாங்காங்கின் மிகப்பெரிய பேஷன் மார்க்கெட்டை பார்த்த போது இந்த எண்ணம் தனக்கு உதயமானதாக அங்கிதி கூறியதாக ஜிகியூ செய்தி தெரிவிக்கிறது.
ஆசியாவில் மிகப்பெரிய சந்தையான இந்த இடத்தில் 15,000 வர்த்தகர்கள் ஒரே இடத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்கின்றனர். இந்த வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக வேறு எந்த பெரிய மேடையும் இல்லாமல் இருப்பதை உணர்ந்த அங்கிதி அதை போக்கும் வகையில் ஜிலிங்கோவை துவக்க தீர்மானித்தார்.
இந்த எண்ணத்தை அடுத்து 2015 ல் தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் நிறுவனம் செயல்படத்துவங்கியது, இன்று 8 நாடுகளில் செயல்பாடுகளை கொண்டிருக்கிறது. 400 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்திய சந்தையில் ஃபிளிப்கார்ட், லைம்ரோட், வூனிக் போன்ற நிறுவனங்கள் இருப்பது போல தெற்காசிய பிராண்டுகளுக்கு உதவ இ-காமர்ஸ் தளங்கள் இல்லை என்பதை உணர்ந்து ஜில்லிங்கோவை துவக்கியதே நிறுவனம் இந்த அளவு வெற்றி பெற்றதற்கு காரணமாக அமைவதாக பிஸினஸ் டுடே செய்தி தெரிவிக்கிறது.
தெற்காசிய சந்தையை ஆன்லைனுக்கு கொண்டு வர உதவுவதோடு, சிறிய வர்த்தகர்களின் பிராண்டுக்கு உதவுவதில் பெரிய அளவில் வர்த்தக வாய்ப்பு இருப்பதையும் உணர்ந்து இருவரும் செயல்பட்டு வருகின்றனர். உலக பேஷன் அரங்கில் ஆசிய பேஷன் முக்கிய அங்கம் வகிப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த வெற்றியின் பயனாக, அங்கிதி தான் இணை நிறுவனராக துவங்கிய நிறுவனத்தை இன்று யூனிகார்ன் அந்தஸ்து பெற வைத்து அதன் சி.இ.ஓவாக பெருமையுடன் செயல்பட்டு வருகிறார்.
27 வயதில் யூனிகார்ன் நிறுவனம் ஒன்றின் முதல் இந்திய பெண் சி.இ.ஓவாக மகுடம் சூட்டிக்கொண்டிருப்பது உண்மையில் மகத்தான சாதனை தான்.