பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாறியது ஏதர் எனெர்ஜி!
இதுவரை தனியார் நிறுவனமாக இருந்த ஏதர் எனர்ஜி என்னும் மின் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம், பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்டது.
மின் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏதர் எனெர்ஜி தனியார் நிறுவனத்திலிருந்து பொது நிறுவனமாக மாறியுள்ளது. இப்போது ஏதர் எனெர்ஜி பிரைவேட் லிமிடெட் அல்ல, ஏதர் எனெர்ஜி லிமிடெட் ஆகும்.
யுவர்ஸ்டோரியால் உடனடியாக நிறுவனத்தின் பங்குச் சந்தைத் தாக்கல்களை அணுகவோ வெளியீட்டின் அறிக்கையை சுயாதீனமாகச் சரிபார்க்கவோ முடியவில்லை. யுவர்ஸ்டோரி இது தொடர்பாக ஏதரைத் தொடர்பு கோண்ட போது ஏதர் உடனடியாக பதிலளிக்கவில்லை.
பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாறியதைத் தொடர்ந்து ஏதர் நிறுவனம் அதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.93.6 லட்சத்தில் இருந்து ரூ.50 கோடியாக உயர்த்தியுள்ளது. அதன் பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் 2.96 போனஸ் பங்குகளை வெளியிடவிருக்கிறது.
ஏதர் எனர்ஜி இந்த ஆண்டு ஏராளமான நிதியைத் திரட்டியுள்ளது. அதன் மிகப்பெரிய பங்குதாரரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூன் மாதம் ரூ. 124 கோடி மதிப்புள்ள கூடுதல் 2.2% பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஆரம்பப் பங்கு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் ஏதர், ஸ்ட்ரைட் வென்ச்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து கடன் மற்றும் ஈக்விட்டியாக ரூ.286 கோடி தொகையை பெற்றது.
‘ஸ்ட்ரைட்’ மாற்ற முடியாத கடனீட்டுப் பத்திரங்கள் மூலம் ரூ.200 கோடி முதலீடு செய்தது, அதே சமயம், இணை நிறுவனர்களான தருண் சஞ்சய் மேத்தா மற்றும் ஸ்வப்னில் பாபன்லால் ஜெயின் ஆகியோர் சீரிஸ் எஃப் கட்டாய மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள் மூலம் தலா ரூ.43.28 கோடி முதலீடு செய்தனர்.
ஏதர் தனது ஐபிஓவிற்கு முன், முதன்மையாக தற்போதுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து நிறுவனத்தில் தங்களுடைய பங்கை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டி $95 மில்லியனை திரட்ட விரும்புவதாக யுவர்ஸ்டோரி ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த வாரம், ஏதரின் மிகப்பெரிய போட்டி நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் தனது தொடக்கப் பங்கு வெளியீட்டுக்காக சந்தைக் கட்டுப்பாட்டாளரான பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் பெற்றது.
'உலகிலேயே இந்திய மின் இருசக்கர வாகனங்கள்தான் சிறந்தது' - ஏதர் எனெர்ஜி இணை நிறுவனர்!