3 லட்சம் சதுர அடியில் ஓசூரில் 2வது ஆலை - 4 லட்சம் வாகனங்கள் உற்பத்தியில் Ather!
மின் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி, ஓசூரில் இரண்டாவது உற்பத்தி ஆலையை துவக்கியுள்ளது. இதன் மூலம் அதன் உற்பத்தி திறன் 4,20,000 வாகனங்களாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி மின் ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றான ஏதர் எனர்ஜி, தமிழகத்தின் ஓசூரில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை துவக்கியுள்ளது. மூன்று லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஆலை, நிறுவன உற்பத்தி திறனை ஆண்டுக்கு 4,20,000 வாகனங்கள் என உயர்த்தும்.
ஏதர் 450X மற்றும் 450 Plus பிரிவுகளில் அதிகரித்து வரும் தேவையை ஈடு செய்ய இது உதவும் என நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
“வேகமான விரிவாக்கம் தரம் சார்ந்த பிரச்சனைகளைக் கொண்டுவரக்கூடியது. வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான வாகனங்களை அளிப்பதே எங்கள் முதன்மை நோக்கம். செயல்முறை மற்றும் எந்திரங்களில் ஆழமான முதலீடு கொண்டுள்ள இந்த ஆலை, தரமான வாகனங்கள் பிரிவில் எங்கள் நிலையை மேலும் வலுவாக்கும்,” என ஏதர் எனர்ஜி, இணை நிறுவனர் மற்றும் சி.டி.ஓ ஸ்வப்னில் ஜெயின் கூறியுள்ளார்.
3,00,000 சதுர அடி கொண்டு இந்த புதிய ஆலை இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒரு பிரிவு பாட்டரி உற்பத்திக்கானது மற்றும் இரண்டாம் பிரிவு வாகன சேர்க்கைக்கானது. பேட்டரி பிரிவு ஐந்து சேர்க்கை வரிசைகளைக் கொண்டிருக்கும். சேர்க்கை பிரிவு இரண்டு வரிசைகளை கொண்டிருக்கும். அதிகரிக்கும் தேவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த வசதி 4,20,000 வாகனங்கள் உற்பத்தித் திறன் கொண்டிருக்கும்.
அதி நவீன வசதி கொண்ட இந்த ஆலை, அரசின் தற்சார்பு இந்தியா கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது. நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிப்பதிலும் பங்களிப்பு செலுத்தும்.
“ஓசூரின் புதிய ஆலை மூலம், மின்வாகன உற்பத்தியில் புதுமை மூலம், உற்பத்தி திறன் மற்றும் தரத்தில் நிறுவனம் புதிய உயரம் தொட்டுள்ளது. இந்த ஆலை, சோதனைகள் சார்ந்த தரவுகள் ஒருங்கிணைப்பு பெற்றுள்ளது. வாகனப் பாதுகாப்பிற்காக, உலகத்தரம் வாய்ந்த சோதனை முறையை பெற்றிருக்கிறோம்,” என ஸ்வப்னில் ஜெயின் கூறியுள்ளார்.
நாட்டின் மின் வாகனத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஏதர் எனர்ஜி முன்னேறி வருகிறது. உற்பத்தி ஆலை நீடித்த தன்மை பெற்றிருக்கும் வகையில், பொருத்தமான தர நிர்ணயங்களை பின்பற்றும் வகையில் அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதர் நிறுவனம் புதிய சந்தைகளில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. 2023 மார்ச் மாத வாக்கில், 100 நகரங்களில் 150 அனுபவை மையங்களை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. சார்ஜிங் உள்கட்டமைப்பிலும் நிறுவனம் கணிசமாக முதலீடு செய்துள்ளது. அண்மையில் நிறுவனம் நாடு தழுவிய அளவில் 500 விரைவு சார்ஜிங் மையங்கள் எனும் இலக்கை தொட்டது.
Edited by Induja Raghunathan