'பறக்கும் சீக்கியர்' தடகள சாதனையாளர் 'மில்கா சிங்' மறைந்தார்!
பறக்கும் சீக்கியர் என அழைக்கப்பட்ட, தடகள சாதனையாளரான மில்கா சிங், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால், தனது 91 வது வயதில் காலாமானர்.
இந்திய தடகளத்தின் நாயகனாக விளங்கிய ”பறக்கும் சீக்கியர்” மில்கா சிங், வாழ்க்கை எனும் ஓட்டத்தில் இருந்து தனது 91 வது வயதில் விடைபெற்றிருக்கிறார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு மற்றும் வயோதிகத்தால் அவர் காலமானார்.
மில்கா சிங் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தலைச்சிறந்த தடகள வீரர்களில் ஒருவராக போற்றப்படும் மில்கா சிங், தற்போது பாகிஸ்தானில் இருக்கும் கோவிந்த்புராவில் 1928ம் ஆண்டு பிறந்தவர். பெரிய குடும்பத்தில் பிறந்த மில்கா சிங், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்தில் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை இழந்தார்.
அதன் பிறகு இந்தியா வந்தவர், மிகுந்த இன்னல்களுக்கு பிறகு இந்தியா ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். ராணுவத்தில் இருந்த போது அவருக்கு தடகள போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறந்து விளங்கியதால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று முத்திரை பதித்தார்.
ராணுவம் தான் தடகளத்தை தனக்கு அறிமுகம் செய்ததாக மில்கா சிங் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். 1956 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மில்கா சிங், 1958ல், 200 மற்றும் 400 மீ ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தார். அதன் பிறகு ஆசிய போட்டியில் 400 மீ தங்கம் வென்றார்.
சாதனை
காமென்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற மில்கா சிங், 1960 ஒலிம்பிக் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் நான்காவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தாலும், இது அவரது சாதனையாக பார்க்கப்படுகிறது. இதில் இவர் எடுத்துக்கொண்ட நேரம் பல ஆண்டுகள் தேசிய சாதனையாக நீடித்தது.
தடகளத்தில் காட்டிய துடிப்பு மற்றும் வேகத்திற்காக பறக்கும் சீக்கியர் என மில்கா சிங் அழைக்கப்பட்டார். மில்கா சிங் தனது சுயசரிதையையும் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தி திரைப்பம் ‘பாக் மில்கா பாக்’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இவரது மகன் ஜீவ் மில்கா சிங் புகழ்பெற்ற கால்பந்து வீரராக இருக்கிறார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வசித்து வந்த மில்கா சிங், கடந்த மாதம் கோவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்டார். முதலில் வீட்டில் தனிமையில் இருந்தவர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரங்கல்
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இயற்கை எய்தியதாக அவரது மகன் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் தான் அவரது மனைவி கொரோனாவால் காலமானார்.
மில்கா சிங் மறைவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விளையாட்டு நட்சத்திரமான மில்கா சிங் மறைவு தன்னை துயரத்தில் ஆழ்த்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மில்கா சிங் மறைவினால், தேசத்தின் கனவை ஈர்த்த மற்றும் இந்தியர்கள் இதயத்தில் சிறப்பான இடத்தை பெற்றிருந்த மகத்தான விளையாட்டு நட்சத்திரத்தை இழந்துள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
”வாழ்க்கை எனக்கு தகுதியானதைவிட அதிகமாக கொடுத்திருக்கிறது. என் வாழ்க்கை பற்றி கேட்கும் போதெல்லாம் இப்படி தான் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது,” என மில்கா சிங் அடிக்கடி கூறுவது வழக்கம் என இந்து நாளிதழ் இரங்கல் கட்டுரை தெரிவிக்கிறது.
ஒழுக்கம் மற்றும் உடல் தகுதியில் தீவிர பற்று கொண்டிருந்த மில்கா சிங், வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து விடைபெற்றிருக்கிறார். அவர் இந்த ஓட்டத்தில் முழு திருப்தியுடன் ஓடியிருப்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது.
தொகுப்பு: சைபர் சிம்மன்