அரசியல்வாதியாக விருப்பமா? அரசியலை முறையாகக் கற்றுக் கொடுக்கும் நிலையம் வந்துவிட்டது!
ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒன்றுகூடி தொடங்கியுள்ளதே, அரசியலை கற்பிக்கும் ’அர்த்தசாஸ்த்ரா லீடர்ஷிப் ஃபவுண்டேஷன்’
அமெரிக்க திரைப்படங்களில் எல்லாம் பள்ளிக்கூடங்களை காட்டும் போது அதில் ’அமெரிக்க அதிபர்’ ஆக நினைக்கும் கதாபாத்திரம் ஒன்றை மறக்காமல் இடம் பெறச் செய்வார்கள். அந்த கதாபாத்திரம் எந்த பாலினத்தை சேர்ந்ததாகவும் இருக்கலாம். படிப்பு மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு, விவாதங்களில் சிறப்பாக இயங்கக் கூடியவராக அந்த பெண்/ ஆண் இருப்பார். அரசியலும் ஒரு நம்பகமான எதிர்காலம் அளிக்கக் கூடிய பிரிவாக மாணவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
ஆனால், இந்தியாவிலோ எந்த மாணவனுமே நேரடியாக அரசியலில் இறங்க வேண்டும் என சொல்வதை நாம் கேட்டிருக்கவே மாட்டோம். அதிகபட்சமாக, நிர்வாக பிரிவில் இயங்க வேண்டும் என விரும்புபவர்கள் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று சொல்வார்கள். இளைஞர்களுக்கும் அரசியலுக்கும் இருக்கும் இந்த இடைவெளி மிக அப்பட்டமாகவே தெரியும். இந்த இடைவெளியை நிரப்புவதற்கு அரசியலில் ஈடுபடுவது குறித்த விழிப்புணர்வு அவசியமாக இருக்கிறது.
அதிகாரப் பிரிவுகளில் வேலை செய்த அலுவலர்கள், அரசியல் அனுபவம் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் ஆகிய பலர் ஒன்று கூடி ‘அர்த்தசாஸ்த்ரா லீடர்ஷிப் பவுண்டேஷன்’ எனும் லாப நோக்கமற்ற அமைப்பை கல்வி நிறுவனமாக தொடங்கியிருக்கிறார்கள்.
“ஆளுகை, அரசியல், அரசியல் தந்திரம், திட்ட வரைவு, பொது விவகாரங்கள் என பல்வேறு துறைகளில் அனுபவம் இருப்பவர்கள் நிறைந்தது எங்கள் குழு. கல்வியின் வழியே இப்போதிருக்கும் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்,”
என்கிறார் நிறுவனர்-அறங்காவலர், ஓய்வுபெற்ற டி.ஜி.பியும், மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவும் ஆன டாக்டர் ஆர். நடராஜ். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.பொன்னுசுவாமி, தமிழக அரசின் முன்னாள் முதன்மை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞான சேகரன், முன்னாள் அதிகாரி உஜாகர் சிங், தொழிலதிபர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி, மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ பதீர் சயீத், தொழிலதிபர் எம்.டி.பிரகாஷ், மேலாண்மை நிபுணர் பி.எஸ்.ரகுநாதன், தொழில்முனைவர் எஸ். கண்ணன் ஆகியோர் அர்த்தசாஸ்த்ரா பவுண்டேஷன் குழுவில் இருக்கின்றனர்.
இந்த அகாடமி தொடங்கப்படுவதற்கு பின் இருக்கும் கதை என்ன என்று கேட்ட போது,
“அப்படி குறிப்பிட்டு ஒரு சம்பவத்தை சொல்லிவிடமுடியாது. கடந்த பதினெட்டு வருடங்களாக வெவ்வேறு தளங்களில் அரசியலில் ஈடுபட்ட பிறகு, எந்த கட்சியுமே தங்களுடைய இளைஞர் அணியை வழிநடத்த ஒரு வடிவமைக்கப்பட்ட திட்டத்தை கையாளவில்லை என்பதை உணர்ந்தேன். இடது சாரி கட்சிகள் மட்டும் தான் அதிகாரப்பூர்வமாக ஒரு நபர் கட்சியில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு பயிற்சியளிக்கிறார்கள். நான் அந்த தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என நினைத்தேன்,” என்கிறார் செயலாளர் கே ராமசுப்பிரமணியன்.
மேலும், அரசியலில் ஈடுபடும் ஒரு நபருக்கு ஏன் கல்வி அறிவு அவசியமானது என்று விளக்கிய ராமசுப்பிரமணியன், “நம் சமூகத்திற்கு துடிப்பான சுறுசுறுப்பான தலைவர்கள் தேவை. இதை எல்லாம் விட முக்கியமான அறிவார்ந்த தலைவர்கள் தேவை. நம் ஒவ்வொருவருக்கு உள்ளுமே ஒரு தலைவர் இருக்கிறார். தங்களுடைய தயக்கங்களை எல்லாம் விட்டுவிட்டு பதில் தேடுபவர்கள் தான் தலைமை பொறுப்பேற்று, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இந்நிலையில்,
“பதிலளிக்கப்படாத பல கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க உதவவும், எதிர்காலத்தில் பெரிய அதிகார பதவிகளோடு வெற்றிகரமான தலைவர்களாக வேண்டும் எனும் ஆசை இருக்கும் இளைஞர்களின் பலத்தை சரியான பாதையில் செலுத்தவும் நாங்கள் இருப்போம்” என்கிறார்.
இந்தியாவை புரிந்துகொள்தல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இயங்குமுறை, இந்தியாவின் நிர்வாக அமைப்பு, சட்ட செயல்பாடு, அரசியல் தலைமையின் சோசியாலஜி, அரசியல் தலைமையின் உளவியல், ஆளுமை வடிவமைப்பு மற்றும் பேச்சுத் திறன், பொதுத்திட்டம், தேர்தல் அரசியல் மற்றும் பிரச்சார மேலாண்மை, நல்லாட்சிக்கான தலைமை, அரசியல் தொலைத்தொடர்பு, பொது நிதி, சர்வதேச அரசியல் மற்றும் ராஜதந்திரம், தொகுதி மேலாண்மை, ஊடக மேலாண்மை மற்றும் மக்கள் தொடர்பு - ஆகியவையே அர்த்தசாஸ்த்ரா பவுண்டேஷனில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்.
நிறுவனர் - அறங்காவலரான டாக்டர் டி ஸ்ரீனிவாசன், “இது ஆறு மாத கால முழுநேர டிப்ளோமா பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்பறை பாடங்கள் என்று பிரிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படும்.
21 வயது நிறைவடைந்த, இளநிலை பட்டம் பெற்ற எவருமே இந்த டிப்ளமோவிற்கு தகுதியானவர்கள் தான். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் வைத்து சேர்க்கை நடைபெறும். 50% பாடங்கள் மட்டுமே வகுப்பறையில் பயிற்றுவிக்கப்படும் - மீதி 50% பாடங்கள் சுற்றுலாக்கள், அசைன்மெண்டுகள், பிராஜெக்டுகள் வழியே பயிற்றுவிக்கப்படும்” என்று சொல்கிறார்.
தற்போது வரை, சேர்க்கை பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், பல்வேறு தரப்பிலிருந்து பலரும் அழைத்து இந்த படிப்பு குறித்து விசாரித்துக் கொண்டே இருக்கிறார்களாம். படிப்பிற்கான கட்டணமும் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. வெவ்வேறு செலவுகள், உள்ளீடுகளை கருத்தில் வைத்து ஒரு எளிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்கிறார் செயலாளர்.
சமகாலத்தில் அரசியல் தலைவர்களாக இருப்பவர்கள் பலரின் கல்வித் தகுதி நம்மை அதிர்ச்சியடையச் செய்வதாக இருக்கும். போலிச் சான்றிதழ்கள் வைத்து அரசியல் தலைவரானவர்களின் கதைகளை எல்லாம் கூட கேட்டிருக்கிறோம். தீர்க்கமான தெளிவான கல்வி அறிவு இருக்கும் ஒரு நபர் அரசியல் தலைவராக வேண்டும் எனும் நம்முடைய கனவுகள் எல்லாம் நனவாக அர்த்தசாஸ்த்ரா பவுண்டேஷன் உதவும் என நம்புவோம்.
மேலும் விவரங்களுக்கு: ArthaShastra Leadership Foundation