'வேட்டி கட்டுவதை யாரும் அவமானமாக கருதக்கூடாது' - பெங்களூரு மால் சம்பவம் குறித்து ராம்ராஜ் வேட்டி நிறுவனர் வருத்தம்!
“இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தது வேட்டி தான். இந்திய மக்கள் அனைவரும் வேட்டிக்கு உரிய மரியாதையையும், உரிய அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்,” என வீடியோ வாயிலாக வேட்டியின் பெருமைகளை எடுத்துக் கூறியுள்ளார் ராம்ராஜ் வேட்டி நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜன்.
பெங்களூரு வணிக வளாகத்தில் விவசாயி ஒருவர் வேட்டி அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னணி வேட்டி நிறுவனமான ராம்ராஜ் வேட்டியின் நிறுவனர் நாகராஜன்,
“இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது வேட்டி தான். இந்திய மக்கள் அனைவரும் வேட்டிக்கு உரிய மரியாதையையும், உரிய அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்,” என வீடியோ வாயிலாக வேட்டியின் பெருமைகளை எடுத்துக் கூறியுள்ளார்.
பெங்களூரு சம்பவம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெங்களூருவில் உள்ள ஜிடி மாலில் உள்ள திரையரங்கில் படம் பார்ப்பதற்காக கர்நாடகாவின் காவேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஃபகிரப்பா தனது மகனுடன் சென்றிருந்தார். ஆனால், வேட்டி அணிந்து வந்திருந்ததால், ஃபகிரப்பாவை வணிகவளாகத்திற்குள் அனுமதிக்க அங்கிருந்த பாதுகாவலர்கள் மறுத்துவிட்டனர். வேறு ஆடை அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என அவர்கள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.
‘வெகு தூரத்தில் இருந்து வருவதால் உடனே ஆடையை மாற்றி வர முடியாது’ என ஃபகிரப்பாவின் மகன் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அந்த பாதுகாவலர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் அவர்களும் வளாகத்தை விட்டு வெளியேறினர்.
வணிக வளாகத்திற்கு சீல்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, இந்த சம்பவம் விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி, சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தையும், கர்நாடக அரசையும் கடுமையாக கண்டித்து, சமூகவலைதளங்களில் கண்டனப் பதிவுகள் வெளியானது. கன்னட ஆதரவாளர்கள் மற்றும் கன்னட விவசாயிகள் இணைந்து, இந்த சம்பவத்தை கண்டித்து வேட்டி அணிந்து மாலுக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தினர்.
இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வணிக வளாக நிர்வாகம் மன்னிப்பு கோரியது. வணிக வளாக உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் மீது கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக அந்த வணிக வளாகத்தை ஒரு வாரம் மூடும்படும்படி கன்னட அரசு உத்தரவிட்டது.
வேட்டியின் மகிமைகள்
இந்நிலையில், இந்த பெங்களூரு வேட்டி சம்பவம் தொடர்பாக முன்னணி வேட்டி நிறுவனமான ராம்ராஜ் வேட்டி நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜன் வீடியோ வாயிலாக,
“இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தது வேட்டி தான். இந்திய மக்கள் அனைவரும் வேட்டிக்கு உரிய மரியாதையையும், உரிய அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்,” என வீடியோ வாயிலாக வேட்டியின் பெருமைகளை எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் அவர்,
“நான் கடந்த வாரம் லண்டன் சென்றிருந்தேன். அங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளை எல்லாம் பார்வையிட்டேன். அதில் ஒவ்வொரு கடைகளிலும் ராம்ராஜ் வேட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை பார்க்கும்போதும், அக்கடைக்காரர்கள் என்னை வரவேற்ற விதத்தைப் பார்க்கும்போதும், எனக்கு தலையில் கிரீடம் வைத்ததைப் போன்ற ஒரு உணர்வும், சிலிர்ப்பும் ஏற்பட்டது. ஆனால், அதே சமயத்தில் வாட்சப் மூலம் பெங்களூரு வணிக வளாகத்தில் வேட்டியுடன் சென்றதால் ஃபகிரப்பா என்ற விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற தகவல் அறிந்து மிகவும் வருத்தப்பட்டேன்.
நமது கலாச்சார உடை
எனது இந்த வருத்தத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோப் பதிவை வெளியிடுகிறேன்.
வேட்டி என்பது இந்தியாவின் பாரம்பரிய கலாச்சார உடை. தொன்று தொட்டு நம் இந்தியர்கள் உடுத்தி வரும் உடை இது. சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகள்கூட வேட்டிதான் அணிந்திருந்தார்கள். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி பயன்படுத்திய முதல் ஆயுதம் அஹிம்சை. இரண்டாவது ஆயுதம் உடை. அவர் மதுரை வந்திருந்தபோது, தனது ஆடை கலாச்சாரத்தை எல்லாம் மாற்றி அவர் வேட்டிக்கு மாறினார். சுதேசி என்ற இயக்கத்தின்மூலம் பிரிட்டிஷாருக்கு எதிராக அவர் எப்படி போராடினார் என்பதெல்லாம் நாம் அறிந்த ஒன்றுதான்.
பாரம்பரிய சுதேசி தயாரிப்பான வேட்டியை நாம் கட்டுவது என்றுமே அவமானமானதல்ல... வேட்டி கட்டுவது என்பது நம் அடையாளம். இந்தியாவின் கலாச்சாரம். நம்முடைய பாரம்பரியம். இதை இந்தியர்களான நாம் அனைவரும் உணர வேண்டும்.
ராம்ராஜ் வேட்டியின் புரட்சி
இதை உணார்ந்துதான், கடந்த 40 வருடங்களாகவே ராம்ராஜ் நிறுவனம், 1,000 பேர் இருக்கும் இடத்தில் ஒருவர் வேட்டி கட்டிச் சென்றால்கூட அவருக்கு எழுந்து மரியாதை செய்யக்கூடிய மிகப்பெரிய புரட்சியைச் செய்திருக்கிறது.
எனக்கும் ஆரம்பத்தில், இதேபோன்று ஏற்பட்ட அவமானங்களை மனதில் வைத்துதான், இதை ஒரு தொழிலாகக் கொண்டு, இவ்வளவு தூரம் வேட்டியை மேலே கொண்டு வந்து, அனைவரிடத்திலும் அன்பையும், மரியாதையும், கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறோம். எனக்கு கௌரவத்தையும், செல்வாக்கையும், புகழையும் பெற்றுத்தந்தது வேட்டி தான்.
இந்திய மக்களாகிய நாம் வேட்டியை ஒரு சாதாரண உடையாக அல்ல, நம் மூதாதையர் அணிந்த உடை, இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த உடை என்பதை உணர வேண்டும். வேட்டி கட்டுவதை யாரும் அவமானமாகக் கருதக்கூடாது. அதனைக் கட்டுவதால் உங்கள் மரியாதை மேலும் கூடும்.
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
இந்த பெங்களூரு சம்பவம் சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தின் உரிமையாளருக்கு தெரிந்து நடந்ததோ அல்லது அவரது கவனத்திற்கு வராமல் நடந்ததோ தெரியவில்லை. ஆனால், இந்த சம்பவத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், வணிக வளாகங்களுக்கு வேட்டி அணிந்து வருபவர்களுக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களும் நம் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள்தான் என்ற மதிப்பைத் தந்து வரவேற்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தை சில நாட்கள் மூட உத்தரவிட்ட கர்நாடக அரசுக்கும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிந்த அனைவருக்கும் என் நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்று சேர்த்த ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளப் பக்க பதிவுகளுக்கும் என் நன்றிகள்.
”இது போன்ற சம்பவங்கள் இனி பெங்களூரு நகரத்தில் மட்டுமல்ல... இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் நடைபெறக்கூடாது என்பதே என்னுடைய கோரிக்கை. அதோடு, இந்திய மக்கள் அனைவரும் வேட்டிக்கு உரிய மரியாதையையும், உரிய அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.