ஒரே ஒரு ஜூம் காலில் 900 ஊழியர்களின் வேலை காலி: Better.com சிஇஓ விஷால் செய்தது என்ன?
இந்த காலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அந்த 15 சதவீத துரதிருஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவர் தான். இந்த பணி நீக்கம் இப்பொழுது முதல் அமலுக்கு வருகிறது என்று ஜூம் காலில் 900 ஊழியர்களை வேலைவிட்டு அனுப்பிய better.com சிஇஒ விஷால் கார்க்.
Better.com என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) விஷால் கார்க் ஒரே ஒரு ஜூம் காலில் 900 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
யார் இந்த விஷால் கார்க்? என்ன நடந்தது?
விஷால் கார்க் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவருக்கு 7 வயது இருந்த போது அவரது குடும்பம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் நியூயார்கிற்கு குடியேறியது. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் 2000ம் ஆண்டு விஷால் கார்க் பைனான்ஸ் அண்ட் இன்டர்நேஷனல் பிசினஸ் படிப்பில் பட்டம் பெற்றார். அதன் பின்னர், பள்ளி நண்பர்கள் மற்றும் ராசா கான் என்பவருடன் இணைந்து மாணவர்களுக்கு லோன் வழங்கும் 'MY Rich Uncle' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிறுவனம் சரிவை சந்தித்தது. பொதுவுடமையாக்கப்பட்ட MyRichUncle நிறுவனத்தை Merrill Lycnh என்பவர் வாங்கினார். அதன் பின்னர், அவரிடம் இருந்து பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனம் வாங்கியது. ஆனாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு MyRichUncle நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கார்க் மற்றும் கானுக்கு இடையில் பிரச்சனைகள் வெடித்தன. தன்னை மோசடி செய்துவிட்டதாக கார்க் மீது கானும், கான் மீது கார்க்கும் வழக்கு தொடரும் அளவிற்கு பிரச்சனைகள் பூதாகரமானது.
அந்த வழக்கு தொடரப்பட்டு ஓராண்டுகளுக்குப் பிறகு நியூயார் நகரை தலைமையிடமாக கொண்டு better.com என்ற ஆன்லைன் மூலமாக லோன் வழங்கும் நிறுவனத்தை விஷால் கார்க் ஆரம்பித்தார். இந்நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான Soft bank, ally, city, american express உள்ளிட்டவை மூலமாக வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் லோன் பெற உதவி வருகிறது.
மேலும், இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் 10 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்துடன் விஷால் கார்க் One Zero Capital என்ற நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார்.
ட்ரெண்டிங்கில் விஷால் கர்க் காரணம் என்ன?
ஒரே ஒரு ஜூம் கால் மீட்டிங்கில் 900 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து விஷால் கார்க் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார்.
அந்த வீடியோவில் விஷால் கார்க், “நான் உங்களிடம் ஒரு பெரிய செய்தியோடு வந்திருக்கிறேன். சந்தை நிலவரம் மாறிவிட்டது. நாமும் மார்க்கெட்டில் தாக்கு பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்றார் போல் மாற வேண்டும். அப்போது தான் சிறப்பாக வளர முடியும். நிச்சயம் இது நீங்கள் கேட்க விரும்பும் செய்தி அல்ல. மிகவும் கடினமான சூழ்நிலையில் தான் ஒருமுடிவை எடுத்திருக்கிறேன். நீங்கள் இதை ஏற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக இப்படியொரு கடினமான முடிவை எடுத்துள்ளேன். கடைசிமுறை இந்த முடிவை நான் எடுத்த போது அழுதேன். ஆனால் இந்த முறை நான் வலுவாக இருப்பேன் என நம்புகிறேன்.
“சந்தை, செயல்திறன், உற்பத்தித்திறன் உள்ளிட்ட பல அளவுகளை கணக்கிட்டு நம் நிறுவனத்தில் உள்ள 15சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறேன். இந்த காலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அந்த 15 சதவீத துரதிருஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவர் தான். இந்த பணி நீக்கம் இப்பொழுது முதல் அமலுக்கு வருகிறது," என பேசிவிட்டு ஜூம் காலை துண்டித்துள்ளார்.
விஷால் கர்க் ஒரு நல்ல முதலாளியா?
கார்க்கின் இந்த செயல் அவர் ஒரு நல்ல முதலாளி தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனென்றால் அவர் இப்படியொரு மிகப்பெரிய முடிவை இரண்டாவது முறையாக எடுத்து, அவருடைய தலைமை பண்புகள் மீது சந்தேகத்தை எழும்பும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.
இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் ஃபோர்ப்ஸ் இதழ் கார்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மெயில் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
“நீங்கள் மிகவும் மெதுவாக செயல்படுகிறீர்கள். நீங்கள் ஒரு செயலிழிந்த டால்பின்கள், அதுவும் வலையில் சிக்கியுள்ள டால்பின்கள். வலையில் சிக்கியவை சுறாவிற்கு தான் இரையாகும். அதனால் நிறுத்து... நிறுத்து... இப்போதே நிறுத்து... என்னை சங்கடப்படுத்தாதீர்கள்...! என மிகவும் மோசமான வகையில் தனது பணியாளர்களுக்கு கார்க் அனுப்பியுள்ள மெயில் கடும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.
ஒரே ஒரு ஜூம் காலில் நீங்கள் இந்த காலில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இனி பெட்டர் டாட் காமில் வேலை இல்லை என 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய விஷாலின் வீடியோவை ஊழியர் ஒருவர் சோசியல் மீடியாவில் பதிவேற்ற, அது ட்விட்டர், கூகுள், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்களுடன் வைரலாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: டிவிட்டர் | தொகுப்பு: கனிமொழி