வைரல் ஆன கிராமப்புற அரசின் திட்டம் குறித்த ஸ்ரீதர் வேம்புவின் டிவிட்டர் பதிவு!
சொந்த வீட்டுக்கு தண்ணீர் இணைப்பு கிடைத்த சந்தோஷத்தில் ஸ்ரீதர் வேம்பு!
சென்னையை தலைமையகமாகக் கொண்ட சாஸ் ஜாம்பவனான Zoho, தனது கிராமப்புற செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது. ஜோஹோ நிறுவனம், 2011ல் அப்போது புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் மத்தளம்பரை பகுதியில் தனது முதல் கிராமப்புற அலுவலகத்தைத் துவக்கியது. இன்று இந்த அலுவலகத்தில் 500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதற்கு வித்திட்டவர் Zoho தலைவர் ஸ்ரீதர் வேம்பு.
கொரோனாதொற்று காரணமாக தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய வைத்துள்ள ஸ்ரீதர் வேம்பு, தனது அலுவலகத்தையும் தனது சொந்த கிராமத்துக்கு மாற்றியிருக்கிறார். தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் தனது சொந்த ஊரில் வசித்துக்கொண்டு, நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுவரும் இவர், தனது கிராமத்தில் வாழும் மக்களோடு மக்களாக மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார்.
தனது கிராமத்து வாழ்க்கையை அவ்வப்போது பகிர்ந்து வரும் ஸ்ரீதர் வேம்பு நேற்று பதிவிட்ட ஒரு ட்வீட் வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டில் தனது கிராமத்துக்கு வீட்டுக்கு அரசின் தண்ணீர் குழாய் சேவை கிடைத்துள்ளதை பதிவிட்டு இருந்தார்.
”தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமத்திற்கு அரசு வழங்கிய குழாய் நீர் இணைப்பு வந்துள்ளது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இப்போது தண்ணீர் இணைப்பு உள்ளது. நமது ஜனநாயக அமைப்பு மெதுவாக செயல்பட்டாலும், இறுதியில் பணிகளைக் கட்டாயம் முடித்துவிடுகிறது," என்று பதிவிட்டிருந்தார்.
இவரின் பதிவு வைரலானது. தற்போது வரை 7000 லைக்குகள் வரை கிடைத்துள்ளது. 1000க்கு மேல் ரீட்வீட் செய்துள்ளனர். பலர் அவரின் பதிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.
சந்திர சேகர் ஜா என்ற பயனர்,
“நமது ஜனநாயக அமைப்பு மெதுவாக இல்லை. ரொம்பவே மெதுவாக இருக்கிறது. இந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் பல தலைமுறைகள் வாழ வேண்டியிருந்தது. மேலும், இவை சிறந்த திட்டமிடலுடன் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். செயல்படாததற்கு ஜனநாயகம் ஒரு சாக்காக இருக்க முடியாது. இது என்னுடைய தாழ்மையான கருத்து," என்று கூறியிருந்தார்.
இவருக்கு பதில் கொடுத்த, வேம்பு,
“ஜனநாயகத்தில் Self Government மிகவும் முக்கியமானது. என்ன அதற்கு நேரம் தான் தேவைப்படும். நமது நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகள் சிறப்பாக உள்ளன. நமது ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் சிறப்பாகவே உள்ளன. இன்னும் பல விஷயங்கள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன," என்றுள்ளார்.