ஒரே ஒரு பிட்காயின், 6500% லாபம்: 4 வயது குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கிய அப்பா!
தந்தையால் குழந்தைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
நேற்று அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு தாறுமாறாக அதிகரித்தது. அதற்குக் காரணம் அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC அமைப்பு பிட்காயின் ETF குறித்து ஒப்புதலை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
இந்தத் திடீர் உயர்வால் நேற்று ஒரே நாளில் மட்டும் பிட்காயின் மதிப்பு 59,055.50 டாலரில் இருந்து 62,652.40 டாலர் வரை உயர்வு கண்டது. இந்த அதிகரிப்பு கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும் அள்ளிக்கொடுத்தது.
இதில், மற்றவர்களுக்குக் கிடைத்த லாபத்தை காட்டிலும், பிட்காயின் மூலம் 4 வயது குழந்தைக்குக் கிடைத்த லாபம் தான் தற்போது கிரிப்டோ முதலீட்டு சந்தையில் பேசுபொருளாகி உள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தின் நிறுவனர் பெயர் Joao Canhada என்பவர். இவருக்கு நான்கு வருடங்கள் முன்பு குழந்தை பிறந்தது.
2017ல் தனக்குக் குழந்தை பிறந்தபோது Joao, 1000 டாலருக்கு ஒரு பிட்காயினை வாங்கி பரிசாகக் கொடுக்கும் வகையில் குழந்தை பெயரில் முதலீடு செய்துள்ளார். இந்த பிட்காயின் மதிப்பு தான் நேற்றைய உயர்வில் 62000 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பால், Joao Canhada-வின் 4 வயது குழந்தை சுமார் 6,500 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்றுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. 2017ல் இந்த குழந்தை பெயரில் முதலீடு செய்யப்பட்ட ஒரு பிட்காயின் விலை இந்திய மதிப்பில் 70000 ரூபாய். இதுவே இன்று இந்திய மதிப்பில் கிட்டதட்ட 46 லட்சம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு வயது குழந்தை போலவே, இங்கிலாந்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனும் கிரிப்டோ சந்தையில் லாபம் அடைந்துள்ளார். 12 வயதாகும் பெணிமின் அகமது என்ற அந்த சிறுவன், தனது பள்ளி காலத்தில் அதிகளவிலான NFT-ஐ விற்பனை செய்துள்ளார்.
கடந்த ஒரு வருட காலத்தில் NFT மற்றும் கிரிப்டோ சந்தை 706 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதால் அதன்மூலம் மட்டும் சிறுவன் பெணிமின் அகமது தற்போது 4,00,000 டாலர் வரையில் சம்பாதித்துள்ளார். இந்திய மதிப்பில் இது கிட்டதட்ட 3 கோடி ரூபாய். இந்த இரண்டு சிறுவர்கள் குறித்து தான் தற்போது கிரிப்டோ முதலீட்டு சந்தையில் பேசுபொருளாகி உள்ளது.
தகவல் உதவி: என்டிடிவி | தொகுப்பு: மலையரசு