'மொத்தம் 11 பேர் தான்; கோட், சூட் உடை; நவீன மணப்பெண் சஞ்சனா செய்தது என்ன?
திருமண மணப்பெண் உடை, நகை அணிவதில் இருந்து தனித்து யோசித்த சஞ்சனா, தன் திருமணத்தில் அவர் தேர்ந்தெடுத்த உடைகள் பலரையும் உற்று கவனிக்க வைத்தன.
பட்டுப்புடவை, வேலைப்பாடுகள் நிறைந்த உடைகள், இப்படித்தான் திருமணங்களின் போது இந்தியப் பெண்களின் உடைத்தேர்வு இருக்கும். பொதுவாக இந்திய மணப்பெண்கள் இந்திய மரபுசார் உடையுடன் அம்மா/பாட்டியின் நகைகளை அணியவே விரும்புவார்கள். ஆனால் உடை, நகை இவற்றிலிருந்தெல்லாம் தனித்து தெரிகிறார் சஞ்சனா. திருமணத்தின்போது அவர் தேர்ந்தெடுத்த உடைகள் பலரையும் உற்று கவனிக்க வைத்தன.
இந்திய-அமெரிக்க தொழிலதிபரான சஞ்சனா ரிஷிக்கு வயது 29. இவர், தில்லி தொழிலதிபரான த்ரூவ் மஹாஜனை (வயது 33), செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி தில்லியில் மணமுடித்தார். அமெரிக்காவில் பல வருடங்களாகக் கார்ப்பரேட் வழக்கறிஞராகப் பணிபுரிந்த சஞ்சனா, சென்ற வருடம் இந்தியா திரும்பினார். இவரும் த்ரூவும் கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இணைந்து வாழ்ந்தார்கள்.
சஞ்சனாவின் சகோதரர், மற்றும் பெரும்பான்மையான நண்பர்களும் அமெரிக்காவில் இருப்பதால் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கும், நவம்பரில் டெல்லியில் ஒரு பாரம்பரிய முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் தம்பதியினர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கோவிட் பிரச்னை எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கிறது.
"என் பெற்றோர் மிகவும் முற்போக்கானவர்கள்தான் என்றாலும், நண்பர்கள், அண்டைவீட்டார், உறவினர்களிடமிருந்து அளவுக்கதிகமான அழுத்தம் காரணமாக, உறவை முறைப்படுத்தி, திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்," என்கிறார் சஞ்சனா.
இதனால் திருமணத்திற்கு அவர் ஒப்புக்கொண்டார். திருமணம் முடிவானதும் மற்றவர்களைப் போல புடவைகளுக்கு நாட்டத்தை செலுத்தாமல், பேண்ட் சூட் அணிய முடிவெடுத்தார் சஞ்சனா.
பொதுவாகவே பயன்படுத்தப்பட்ட உடைகளை வாங்கும் பழக்கமுடையவராக இருந்தார் சஞ்சனா. அப்படித்தான் அவர் வாங்கிய பேண்ட் சூட்டும்.
"இது முன்பே வேறு ஒருவரால் பயன்படுத்தப்பட்ட பேண்ட்சூட். பழங்கால ஆடை வடிவமைப்பு கொண்டது. 1990களில் இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் கியான்ஃப்ராங்கோ ஃபெர்ரேவால் உருவாக்கப்பட்டது. அந்தக் கடைக்குப் பேசியபோது அந்த உடை இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது," என்கிறார் சஞ்சனா.
பேண்ட், சூட் உடையை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்பது குறித்து அவர் சொல்லும்போது, தன்னை மிகவும் கவர்ந்த பல வலிமையான நவீன பெண்களும் இந்த உடையையே அணிந்தார்கள் என்பதால் இந்த உடையை விரும்பி அணிந்தேன் என்கிறார்.
ஒட்டுமொத்தமாகவே 11 பேர் மட்டும் தான் அந்த திருமணத்தில் கலந்துகொண்டார்கள். இதனால் பேண்ட் சூட் உடை பொருத்தமாக இருக்கும் என கருதினேன் என்கிறார்.
“எங்கள் பெற்றோரும் தாத்தா பாட்டிகளும் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டார்கள். த்ரூவின் வீட்டுத் தோட்டத்தில் நிகழ்வு நடைபெற்றது. அனைவரும் எளிய உடைகளையே அணிந்துகொண்டிருந்தார்கள். நான் மட்டும் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெரிய மரபார்ந்த திருமண உடையை அணிந்துகொண்டிருந்தால் மிகவும் விசித்திரமாக இருந்திருக்கும்," என்கிறார் சஞ்சனா.
"எந்த உடை அணிந்தாலும் சஞ்சனா அசத்திவிடுவாள் என்பது எனக்குத் தெரியும். சொல்லபோனால், அவளைத் திருமணத்தின்போது பார்த்தபோது, அவளது பேண்ட்சூட் முதலில் என் கண்ணில் படவில்லை. ஒரு தேவதையைப் போல, கொள்ளை அழகுடன் அவள் இருந்தாள்,” என்றபடி சிரிக்கிறார் த்ரூவ்.
சமூக வலைத்தளங்களில் சஞ்சனாவின் உடை வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அவர் தனது புகைப்படங்களை வெளியிட்டபோது, ‘நவீன மணப்பெண்’ என்று அவரை பலரும் புகழ்ந்துள்ளனர்.
நவீன பெண்களுக்கான உடை வடிவமைப்பாளர்களில் இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்றவராகக் கருதப்படும் ஆனந்த் பூஷன், ‘மணப்பெண்ணுக்கு அழகுட்டும் உடை இது’ என்று பாராட்டியிருக்கிறார்.
மற்றொருபுறம் பலர் சஞ்சனாவை வசைபாட ஆரம்பித்துவிட்டனர்.
"பெண்ணியம் என்ற பெயரில் இவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்", "இந்திய கலாசாரம் இவருக்கு ஒருபோதும் புரியாது, இவர் மேலைநாட்டுக் கலாசாரத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறார்," என்றெல்லாம் கடுமையாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
"இந்திய ஆண்கள் திருமணங்களின்போது பேண்ட்சூட் தானே அணிகிறார்கள்? அதை யாரும் கேள்வி கேட்பதில்லை. பெண் அணிந்தால்மட்டும் அது பிரச்சனையாகிவிடுகிறது. பெண்களுக்கான வரைமுறைகள் எப்போதுமே கடுமையாக இருக்கின்றன," என்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சஞ்சனா.
தகவல் மற்றும் படங்கள் உதவி - பிபிசி | தொகுப்பு: மலையரசு