மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணப்பெண்: ஷர்துல் தம்பதியின் வித்தியாச திருமணமும்; ட்ரோல்களும்!
ஆணும் பெண்ணும் சமத்துவம் என்பதை விளக்க வித்தியாச முடிவு!
மும்பையைச் சேர்ந்தவர்கள் தனுஜா, ஷர்துல். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். தற்போது இருவரும் நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளனர். காரணம், இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணம் என்றால் மணப்பெண் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவது தான் வழக்கம். ஆனால், இவர்கள் அதை மாற்றியமைத்தனர்.
வித்தியாசமாக, மணமகன் ஷர்துல் கழுத்தில் மணப்பெண் தனுஜா தாலி காட்டினார். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் இப்படி மாற்றியோசித்து மணமகன் ஷர்துல் கழுத்தில் மணமகள் தனுஜா கையால் தாலி கட்டிக்கொண்டிருக்கிறார். இந்த விநோத திருமணத்துக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.
இந்த எதிர்ப்புகளை தெரிந்துகொள்வதற்கு முன்னால், அவர்களின் காதலை தெரிந்து கொள்வோம். தனுஜா, ஷர்துல் இருவரும் ஒரே கல்லூரியில் படித்த போது தான் இருவரும் முதன்முதலில் சந்தித்து கொண்டுள்ளனர். படிக்கும் காலத்தில் அவர்கள் காதலிக்கவில்லை. இருவருக்கும் இடையே, பட்டம் பெற்ற நான்கு ஆண்டுகள் கழித்து தான் காதல் மலர்ந்தது. அதுவும் வலைத்தளங்கள் மூலம்.
ஒருமுறை, தனுஜா ஹிமேஷ் ரேஷம்மியா பாடலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். கூடவே, அந்தப் பாடலை 'சித்திரவதை' என்று தலைப்பிட்டிருந்தார். அதற்கு ஷர்துல், 'மஹா சித்திரவதை' என்று பதிலளித்திருக்கிறார்.
இப்படித்தான் இவர்கள் இருவரும் பேசத் தொடங்கியுள்ளனர். இப்படி பேச்சுக்கள் வளர, அதுவே நாளடைவில் காதலாக மாறியது. சில வாரங்களுக்குப் பிறகு அவர்கள் நேரில் சந்தித்து கொண்டுள்ளனர். சந்திப்பின்போது பெண்ணியம் பற்றி பேசத் தொடங்கியபோது, ஷர்துல் தன்னை ஒரு "ஹார்ட்கோர் பெண்ணியவாதி" என்று கூற, அவர் அப்படி கூறுவதை சற்றும் எதிர்பாராத தனுஜா, பின்பு இருவரும் ஒருமனதாக திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.
செப்டம்பர் 2020ல், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முதல் அலை தணிந்ததால், அவர்கள் தங்கள் திருமணத்தைத் திட்டமிடத் தொடங்கினர்.
டிசம்பரில் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறன்றனர். கூடவே தாலி விஷயத்தையும். பெற்றோர் ஆச்சரியப்பட்டனர் மற்றும் உறவினர்கள் அவர்களது முடிவை கேள்வி எழுப்பினர். ஆனால், தாலி அணிவது சமத்துவத்தை குறிக்கிறது என்று கூறி அவர்களை வாயடைக்க செய்துவிட்டார்.
எனினும், எதிர்ப்புகள் தொடர்ந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் தனுஜா, ஷர்துலிடம் திருமணத்திற்குப் பிறகு தாலி அணிந்துகொள்ளும் நிகழ்வை வைத்துக்கொள்ளலாம் என கூறியிருக்கிறார். ஆனால் ஷர்துல் ஒரேஅடியாக அதற்கு மறுப்பு தெரிவிக்க, இறுதியாக திருமணம் எந்தவித சச்சரவும் இன்றி நடந்து முடிந்தது.
ஒரு டிஜிட்டல் செய்தித்தாள் இவர்களின் இந்தக் கதையை செய்தியாக வெளியிட சர்ச்சைகள் தொடங்கியது. ஆம், கலாச்சாரவாதிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் நெட்டிசன்களில் பலர் இவர்களின் விஷயங்களிலும் மூக்கை நுழைத்து கருத்து தெரிவிக்கிறோம் என்ற போர்வையில், இருவரின் மீதும் விமர்சனங்களை ஏவினர்.
”இப்போது சேலையும் அணியுங்கள்', 'பாலின சமத்துவத்தை ஆதரிப்பதற்கான வழி இதுவல்ல', உனக்கென்ன மனநிலை பாதிப்பா முதலில் ஒரு நல்ல மருத்துவரைச் சென்று பார்' என்று ஷர்துலை குறிப்பிட்டு ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
ஆனால் இந்த ட்ரோல்களை பற்றி தம்பதிகள் இருவரும் கண்டுகொள்ளவில்லை. எனினும் திருமணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையிலும் ட்ரோல்கள் தொடங்கியது. அதேநேரம் அவர்களுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக பேசியிருக்கும், ஷார்துல்,
“சில ட்ரோலிங்கள் வரும் என்று தான் எதிர்பார்த்தேன். ஆனால் ட்ரோலிங்கின் அளவு எங்களை ஆச்சரியப்படுத்தியது. முதலில், தனுஜா இதனால் பாதிக்கப்பட்டார், ஆனால் இப்போது 4 மாதங்கள் ஆகிவிட்டன.”
”தனுஜாவும் நானும் மட்டுமே எங்கள் உறவை வேறு எவரையும் விட சிறப்பாக வரையறுக்க முடியும்; நாங்கள் ஒருவருக்கொருவர் வேலை செய்வதை, அன்பாக இருப்பதை ஆதரிக்கிறோம். ஒருவருக்கொருவர் கனவுகளை நம்புகிறோம். அதன் மீது மதிப்பளித்து செயல்படுகிறோம். இந்த பயணத்தில் ஒன்றாக இருக்கிறோம். எனவே, உலகம் என்ன நினைக்கிறது என்று கவலைப்படப்போவதில்லை," என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கும் அவர்களின் கதை, ஹுயூமன்ஸ் ஆப் பாம்பே இணையத்தின் பக்கத்தில் வெளியானது. இன்ஸ்டாகிராமில் 82,000 க்கும் மேற்பட்ட 'லைக்குகள்' மற்றும் பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான லைக்குகள் பெற்று வருகின்றன.
”உங்கள் முடிவைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன், கடவுள் உங்கள் இருவரையும் நிறைய வலிமையுடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிப்பார்" என்று ஒரு ஃபேஸ்புக் பயனர் அவர்களுக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்.
“நான் மணமகனின் உணர்வுகளை மதிக்கிறேன். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் தாலியை சமத்துவத்தின் அடையாளமாக அணிந்து தனது சிந்தனையை சித்தரித்திருக்கிறார்," என்று மற்றொருவர் கூறி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.