பட்ஜெட் அலசல்: ரூ.7 லட்சம் வருமானம் வரை வரி கிடையாது - இது சாதகமா? பாதகமா?
நேற்றைய பட்ஜெட்டில் மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கான வருமானத்திற்கான புதிய வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததும் மக்களவையில் பெரிய சந்தோஷம் நிலவியது. இதைப்பற்றி வல்லுனர்கள் சொல்வது என்ன?
இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மாதச்சம்பளம் பெறுவோருக்கு வருமான வரி உச்சவரம்பில் விலக்கு அளிக்கப்படுமா என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. பட்ஜெட் முடிவில் தனிநபர் வருமானவரி உச்சவரம்பு குறித்த அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
எல்லாருடைய எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தனிநபர் வருமானவரியில் சில மாற்றங்களை கொண்டுவந்திருப்பது குறித்து நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதன்படி, மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கான வருமானத்திற்கான புதிய வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததும் மக்களவையில் பெரிய சந்தோஷம் நிலவியது. ஆனால், அந்த அறிவிப்புக்காக பெரிய அளவுக்கு சந்தோஷம் கொள்ளத் தேவையில்லை என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்தாக இருக்கிறது.
புதிய வரி விதிப்பு முறையா? பழைய வரி விதிப்பு முறையா?
கடந்த 2020ம் ஆண்டு புதிய வரி விதிப்பு முறையை மத்திய அரசு அறிவித்தது. அதில், எந்த விதமான விலக்குகளையும் பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த வரம்பு 7 லட்ச ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது,
ஒருவருக்கு 7 லட்ச ரூபாய் வரை வருமானம் இருந்தால் அந்த தனிநபர் வரி ஏதும் செலுத்தத் தேவையில்லை. இதுதவிர standard deduction எனும் பெயரில் ரூ.50000 கழிவு வழங்கப்படுகிறது. இதனால் ஒருவர் 7.50 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என்றால் எந்தவிதமான வரியும் செலுத்தத் தேவையில்லை.
மேலும், புதிய வரி விதிமுறையே இயல்பானதாக எடுத்துக்கொள்ளப்படும். வரி செலுத்துபவர்கள் தேவைப்பட்டால் பழைய வரி விதிப்பு முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.
ரூ.7.50 லட்ச ரூபாய் வரை வரி இல்லை என்றால் இந்த முறையே தேர்ந்தெடுக்கலாம் என்று பலருக்கும் தோன்றும். ஆனால், இந்தத் தொகையை விட அதிக வருமானம் இருந்தாலும் ரூ.3 லட்ச ரூபாயில் இருந்து வரி செலுத்த வேண்டி இருக்கும். ரூ.7 லட்சம் என்னும் எல்லையை தாண்டுவதால் ரூ.3 லட்சத்தில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
உதாரணத்துக்கு ஒருவருக்கு 9 லட்ச ரூபாய் சம்பளம் என வைத்துக்கொள்வோம்.
அந்த நபர்:
- ரூ.3 லட்ச ரூபாய் வரை வரி செலுத்த தேவையில்லை.
- ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை 5% வரி செலுத்த வேண்டும்.
- ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10 சதவீதம் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
இதுதவிர இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஸ்லாப்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறார் நிதி அமைச்சர்.
- முன்பு ரூ.15 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி. இதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது அப்படியேதான் இருக்கிறது.
- தற்போதைய பரிந்துரையின் படி 25% வரி நீக்கப்பட்டிருக்கிறது. 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 சதவீதம் வரி தற்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது, முன்பு இந்தத் தொகைக்கு 25 சதவீதம் விதிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
சிக்கல் என்ன?
புதிய வரி விதிப்பு முறையில் வரிசெலுத்தும் தொகையில் சிலருக்கு சாதகம் இருக்கலாம். ஆனால், அதனால் பயன் இல்லை என்பதான் தற்போதைய விமர்சனமே. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டுக்கு சேமிப்பு என்பது முக்கியமானது. ஆனால், இந்த பட்ஜெட் அதனை தகர்த்துவிட்டது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
முன்பு சேமித்தால் வரி சலுகை, வீடு வாங்கினால் வரிச்சலுகை, காப்பீடு எடுத்தால் வரிச்சலுகை என 80 சி பிரிவின் கீழ் பல விதமான சலுகைகள் கொடுக்கப்பட்டுவந்தது. ஆனால், தற்போது எந்த விதமான முதலீட்டு மற்றும் சேமிப்பு சலுகையும் வழங்கப்படவில்லை கட்டாயத்தின் அடிப்படையிலாவது நடுத்தர மக்கள் சேமிப்பில் ஈடுபட்டுவந்தார்கள். ஆனால், புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்ச ரூபாய்க்கு கீழ் இருப்பவர்கள் சேமிப்பு குறையும் என்பதே கருத்தாக இருக்கிறது.
மக்கள் செலவாளிகளாக மாறிவிட்டால் அதனுடைய விளைவு இப்போது தெரியாது, இன்னும் பல ஆண்டுகளுக்கு பிறகே தெரியவரும். இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு 80 சி பிரிவே இல்லாமல் போகலாம். இதுபற்றி பலருக்கும் தெரியாமல் போகும் வாய்ப்பு கூட உருவாகும் என இணையத்தில் கருத்துகள் வரத்தொடங்கி இருக்கின்றன.
80சி சலுகைகள் புதிய வரி முறையில் கிடையாதே என்னும் கேள்வி நிர்மலா சீதாரமானிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர்,
”முன்பு அதிக வரி செலுத்த வேண்டி இருந்தது. அதனால் இருக்கும் சில வாய்ப்புகளில் மட்டுமே மக்கள் முதலீடு செய்தார்கள். தற்போது வரி குறைக்கப்பட்டிருக்கிறது. 80 சி பிரிவு அதில் இல்லை எனும் பட்சத்தில் மக்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளின் எண்ணிக்கை உயர்கிறது. அவர்களுக்கு எங்கு தேவையோ அங்கு முதலீடு செய்துகொள்வார்கள். கல்வி, எதிர்காலம் என அவர்களின் தேவையை அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள்,” என தெரிவித்திருக்கிறார்.
கேட்பதற்கு அடடே என்று தோன்றினாலும் மக்கள் சேமிப்பு குறையும் என்பதே எதார்த்தம். நிதி ஆலோசகர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் முதல் பதிலே,
சேமியுங்கள் அதனைத் தொடர்ந்து செலவு செய்யுங்கள் என்பதுதான். ஆனால், மக்களிடம் பணம் வந்த பிறகு சேமிப்பார்களா? அனைத்து மக்களும் விழிப்புணர்வுடனா இருக்கிறார்கள்?
சிலருக்கு பழைய வரி விதிப்பு முறை சாதகமாக இருக்கலாம், சிலருக்கு புதிய வரி விகித முறை சாதகமாக இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் சேமிப்பு முக்கியம்.
சேமிப்பு முக்கியம் மக்களே!
Budget 2023: சுற்றுலா, இளைஞர் நலன், மகளிர், ஆற்றல் துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் என்ன?