Budget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் முனைவர்களுக்கு என்னென்ன அறிவிப்புகள்?
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தனி டிவி சேனல் உள்ளிட்ட தொழில்துறைக்கு ஊக்கம் தரும் பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தனி டிவி சேனல் துவக்கப்பட இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் கீழ் துவங்கப்பட உள்ள இந்த டிவி சேனல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2019 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் எனும் பெருமையை பெறும் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட்டார்.
ஸ்டார்ட் அப் துறையினருக்கு உற்சாகம் அளிக்கும் செய்தியாக, ஸ்டார்ட் அப் துறைக்கு என்று தனி டிவி சேனல் துவக்கப்பட இருப்பதாக நிதி அமைச்சர் அறிவித்தார். தூர்தர்ஷன் கீழ் இந்த சேனல் இயங்கும் என்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களே இந்த சேனலை நிர்வகிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஸ்டார்ட் அப் துறை தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதோடு, முதலீட்டாளர்களை நிறுவனங்களுடன் இணைக்கும் பாலமாகவும் செயல்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வரி திட்டமிடல் தொடர்பான நிகழ்ச்சிகளையும் இந்த சேனல் வழங்கும். இந்த சேனல் மூலம் ஸ்டார்ட் அப்கள் தங்கள் கருத்துகளையும் அரசுக்கு தெரிவிக்கலாம்.
ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷன் கீழ், விவசாயிகளுக்கான தனி சேனலான ’டிடி கிசான்’ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேனல், விவசாயம், பாசனம், ஆர்கானின் விவசாயம் உள்ளிட்டவை குறித்து நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது, ஸ்டார்ட் அப்களுக்கான டிவி சேனல் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் பற்றி குறிப்பிட்டார். 2016 ல் துவக்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம், 2019 முதல் பாதியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.1,300 கோடி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஸ்டான்ட் அப் இந்தியா
’ஸ்டான்ட் அப் இந்தியா’ திட்டம், 2020 முதல் 2025ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சுய உதவிக் குழுக்கள் வட்டி சலுகை திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே ஸ்டார்ட் அப் சேனல் தொடர்பான அறிவிப்பை ஸ்டார்ட் அப் துறையினர் மற்றும் தொழில்முனைவோர் வரவேற்றுள்ளனர். உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழலாக இருக்கும் இந்தியாவில், இது ஸ்டார்ட் அப்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் சரியான வழியாக இருக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வரவேற்றுள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்டார்ட் அப்கள் சார்ந்த பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்தியாவில் ஸ்டார்ட் அப் டிவி சேனல் பாரட்டத்தக்க முயற்சி என கருதப்படுகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பங்கு பிரிமியம் மதிப்பை பொருத்தவரை எந்தவித விசாரணைக்கும் உட்படுத்தப்படாது என்றும் நிதி அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். இ-வெரிபிகேஷன் முறை அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஏஞ்சல் முதலீடுகள் பெறுவதற்கான ஏஞ்சல் டாக்ஸ் செலுத்துவதில் ஸ்டார்ட்-அப்’களுக்கு சில பிரச்சனைகள் இருந்து வந்தது. அது தொடர்பாக பல கோரிக்கைக்கள் அரசுக்கு வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுட்டிக் காட்டிப் பேசிய நிதி அமைச்சர்,
“இனி வருவமான வரித்துறையினர் ஏஞ்சல் முதலீடுகள் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளமாட்டார்கள் என்றும் ஏஞ்சல் வரி தொடர்பான செயல்பாடுகள் சுலபமாக்கப்பட்டுள்ளன,” என்றார்.
அரசு, 80 வாழ்வாதார வர்த்தக இன்குபேட்டர்களை அமைக்கும் என்றும், 20 தொழில்நுட்ப இன்குபேட்டர்களை அமைக்கும் என்றும் குறிப்பிட்டவர், விவசாயத் துறையில் 75,000 திறன் வாய்ந்த தொழில்முனைவோர்களை உருவாக்க பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நிதி நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில், டிஜிட்டல் பேமெண்ட் சார்ந்த அறிவிப்புகளும் பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ளது. திறன் வளர்ச்சி பயிற்சித் திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐ.ஓ.டி சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.