900 பேரை வீட்டிற்கு அனுப்பிய Byju's - மூத்த நிர்வாகிகளும் பணிநீக்கம்!
குழுக்கள் மற்றும் பணியாளர்களில் இருந்து 900 முதல் 1000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக யுவர் ஸ்டோரிக்கு நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பைஜூஸ் நிறுவனம் 2,500 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இது உடனடியாக நடக்காது என்றும், 6 மாத கால அளவிற்கு பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒரே வேலையை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்வதைக் குறைத்து தொழில்நுட்பத்தைச் சிறப்பாக மேம்படுத்துவது போன்ற காரணங்களுக்காக 50 ஆயிரம் ஊழியர்களில் இருந்து 5 சதவீதத்தினரைப் பணி நீக்கம் செய்யும் முடிவை பைஜூஸ் எடுத்திருந்தது.
அதன் படி எஜுடெக் யூனிகார்ன் நிறுவனமான பைஜூஸ் தனது பணி நீக்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன்படி குழுக்கள் மற்றும் பணியாளர்களில் இருந்து 900 முதல் 1000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக யுவர் ஸ்டோரிக்கு நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் சந்தைப்படுத்தல், வடிவமைப்பு, தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் சர்வதேச வணிகத்தில் தயாரிப்புக் குழுக்கள் ஆகிய துறைகளில் இருந்து பணி நீக்கம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல மூத்த நிர்வாக அதிகாரிகளும் ராஜினாமா செய்யுமாறு பைஜூஸ் நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பைஜூஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
“நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால் பெரும்பாலான உயர் அதிகாரிகள் வேறு நிறுவனங்களில் வேலை தேடி வருகின்றனர்,” எனக்கூறியுள்ளார்.
வழக்கமான நடைமுறைகளின் படி, மின்னஞ்சல் மூலம் அல்லாமல், வீடியோ கால் மூலமாக மூத்த இயக்குநர்கள் மற்றும் மனிதவளப் பணியாளர்களுக்கு பணிநீக்கம் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட துறைக்கு செலவு செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், வருமானம் ஈட்டுவதில் ஏற்படும் பற்றாக்குறை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பணிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் 24 மணி நேரத்தில் பணியை விட்டு விலக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வருவாய் இழப்பு காரணமாக தொடர்ந்து பைஜூஸ் நிறுவனம் நஷ்டத்தை பதிவு செய்து வருவது பணி நீக்கத்திற்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. கடைசியாக $22 பில்லியன் மதிப்பில் இருந்த ஸ்டார்ட்அப், FY21 இல் ரூ.4,564.38 கோடி இழப்பைப் பதிவு செய்தது, இது முந்தைய ஆண்டான FY20 ஏற்பட்ட 305.5 கோடி ரூபாயை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கனிமொழி
'இதுக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன்' - 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உருக்கம்!