சென்னை குழந்தைகள் இசைக் குழுவுக்கு வாஷிங்டன் திருவிழாவில் பாட வாய்ப்பு!
ஜூலை மாதம் வாஷிங்டன் டிசி-ல் நடக்கவிருக்கும் ’செரனேட் கோரல் திருவிழா’வில் பாட வாய்ப்பு பெற்றுள்ள ’கமலா இசைப் பள்ளி’ மாணவர்கள் அதில் கலந்து கொள்ள நிதி உதவியை நாடியுள்ளனர்.
சென்னை மந்தைவெளியில் உள்ள இசைப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வாஷிங்டன் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ’கமலா இசைப் பள்ளி’ மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதம் வாஷிங்டன் டிசி-ல் நடக்கவிருக்கும் ’செரனேட் கோரல் திருவிழா’வில் கலந்துக்கொண்டு பாட அழைப்பு வந்துள்ளது. ஆனால் இக்குழந்தைகள் தங்கள் கனவுப் பயணத்தை மேற்கொள்ள உங்கள் உதவிக்கரங்களை நாடியுள்ளனர்.
இசை அமைப்பாளர் எம்.பி ஸ்ரீனிவாசன் அவர்களின் மாணவியான ராஜ ராஜேஸ்வரி நடத்தும் இந்த இசைப் பள்ளி கடந்த 6 மாதங்களாக பல சாதனைகளை புரிந்து வருகிறது. 15 வயதுக்கு உட்பட்ட 23 குழந்தைகளைக் கொண்ட கமலா இசைப் பள்ளி கடந்த வருடம் சிங்கப்பூர் சர்வதேச கோரல் திருவிழாவிலும் கலந்துக் கொண்டு வெற்றிப்பெற்றுள்ளது.
“என் பள்ளி குழந்தைகள் என் குடும்பம் போல, கோடை விடுமுறையிலும் கூட தொடர்ந்து எட்டு மணிநேரம் என்று கடினமாக பயிற்சிப்பெரும் மாணவர்கள் இவர்கள். இக்குழந்தைகள் மற்றும் இவர்களது பெற்றோர்கள் எந்த இசைப் போட்டி என்றாலும் பெரும் பொறுப்பு எடுத்துக்கொண்டு கலந்துகொள்வர்,”
என்கிறார் குரு ராஜ ராஜேஸ்வரி இந்து நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில்.
செரனேட் கோரல் திருவிழா, வாஷிங்டனுக்கு செல்ல வாய்ப்பு
அமெரிக்காவில் 'மனித வாழ்க்கை: இசை, இடம்பெயர்வு மற்றும் அடையாளம்' என்னும் தலைப்பில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் பாட அழைப்பு வந்ததை தொடர்ந்து தீவிரமாக பயிற்சிபெற்று வருகின்றனர் இப்பள்ளி மாணவர்கள். ஒரு வகை மட்டுமின்றி நாட்டுப்புற இசை, பக்திப் பாடல் என பல வகையான பாடல்களில் பயிற்சிப்பெற்றுள்ளனர். மேலும் ஜேர்மன், ஆங்கிலம் என பல மொழிகளிலும் பாடல்கள் கற்று வருகிறது இந்த இசைக்குழு.
“பல நாடுகளுக்குச் சென்று இக்குழந்தைகளின் திறைமைகளை வெளிப்படுத்த வேண்டும். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் விலங்குகள் மீது அனுதாபம் என பல கருவில் பாடல்களை கற்று வருகின்றனர்,” என்கிறார்.
மேலும் இந்த வருடம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் என்பதால் இந்த இசைத் திருவிழாவில் மனிதகுலத்திற்கு காந்தியின் அஹிம்சை பற்றிய செய்தியைப் பாடல்கள் மூலம் விளக்க, தீவரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர் இக்குழந்தைகள். சர்வதேச திருவிழாவில் நம் தேசத் தந்தையைப் பற்றி பாட கிடைத்த ஓர் சிறந்த வாய்ப்பு இது.
அமெரிக்கா சென்று இத்திருவிழாவில் கலந்து கொள்ள இந்த இசைக்குழிவினருக்கு சுமார் 30 லட்சம் வரை செலவு ஆகும் என்பதால், அப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆன்லைன் தளமான கெட்டோ மூலம் கூட்டு நிதித் திரட்டல் மூலம் நிதி திரட்டி வருகின்றனர்.
நம்மூரைச் சேர்ந்த குழந்தைகள் அயல்நாட்டில் நம் பெருமையை ஒலிக்கச் செய்ய உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள்.
கூட்டு நிதி உதவிகள் செய்ய: Send Kamala Music School kids to Washington DC
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்