திருச்சியில் கிடைத்த வரவேற்பு: 'ஸ்மார்ட் டாய்லெட்' முயற்சியில் சென்னை மாநகராட்சி!
பல்வேறு வசதிகளை ஏற்படுத்த திட்டம்!
சென்னையின் அழகை மேம்படுத்தும் வகையில் 'சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக திமுக தலைமையில் அரசு பதவியேற்ற உடன் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை மாநகராட்சி அறிவிப்பு வரவேற்கக் கூடியதாக அமைந்துள்ளது.
அந்த அறிவிப்பு சென்னை மாநகராட்சி முழுவதும் 'நம்ம டாய்லெட்' என்ற பெயரில் நவீன வசதிகள் கொணட் 'ஸ்மார்ட் டாய்லெட்'டுகளை உருவாக்க இருக்கும் திட்டம் தொடர்பானதாகும். மாநகரில் திறந்தவெளி கழிப்பிடத்தை குறைக்கும் விதமாகவும், மக்களை நோயில் இருந்து பாதுகாக்கும் விதமாகவும் STUF என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது.
முதல் கட்டமாக, சோதனை முயற்சியில் ஈசிஆர், ஓஎம்ஆர் மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் இந்த 'ஸ்மார்ட் டாய்லெட்' அமைக்க பேச்சுவார்ததை நடைபெற்று வருகிறது என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் பொது இடங்களில் சுமார் 1000 முதல் 1500 ஸ்மார்ட் டாய்லெட்டுகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் இந்தத் திட்டம் குறித்து இப்போது தான் ஆலோசிக்கப்பட்டாலும், ஏற்கனவே இந்த திட்டத்தை தமிழகத்தின் முக்கிய நகராட்சி ஒன்று வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியிருந்தது. அது திருச்சி மாநகராட்சி. சில மாதங்கள் முன்பே திருச்சி மாநகராட்சியில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு, பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது.
இதனை அடுத்தே சென்னையிலும் ஸ்மார்ட் டாய்லெட்டுகளை அமைக்கும் பணியில் மாநகராட்சி இறங்கியிருக்கிறது. சென்னை மாநகராட்சியின் இந்தத் திட்டத்தில் கூடுதல் அம்சங்களை சேர்க்கவும், திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது,
ஸ்மார்ட் டாய்லெட்டுகள் அமைந்திருக்கும் இடத்தில் கூடுதலாக சார்ஜிங் வசதிகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாற்றத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலும் ஸ்மார்ட் டாய்லெட்டுகள் வடிவமைக்கப்பட இருக்கின்றன.
UV லைட் முறையை பயன்படுத்தி, ஸ்மார்ட் டாய்லெட்டுகள் சுத்தம் செய்யப்பட இருக்கின்றன. அரசின் சார்பில் ஏற்படுத்தப்படும் பொதுக்கழிப்பிடம் என்றாலே சுகாதாரமற்ற முறையில் இருக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த ஸ்மார்ட் டாய்லெட்டுகள் உருவாக்க திட்டமிட்டு வருகிறது சென்னை மாநகராட்சி!