‘ஃபோர்ப்ஸ் ஏசியா 100’ ஸ்டார்ட்-அப் பட்டியலில் இடம்பெற்ற சென்னை நிறுவனம்!
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட மீன், இறால் பண்ணை விவசாயிகளுக்கு லாபம் ஈட்ட உதவும் ஸ்டார்ட்-அப் Aqua Connect ஃபோர்ப்ஸ் ஏசியா 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் முன்னணி மீன்வளர்ப்பு ஸ்டார்ட் அப் ஆன சென்னையைச் சேர்ந்த 'Aqua Connect' நிறுவனம், ‘Forbes Asia 100 to watch’ அறிமுகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆசிய பசபிக் பகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியடைந்து வரும் சிறு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்’களை ஃபோர்ப்ஸ் பட்டியலிடுகிறது, அதில் தான் ‘அக்வா கனெக்ட்’ இடம்பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் மீன்வளர்ப்பு சார்ந்து செயல்படும் இரண்டு ஸ்டார்ட் அப்களுடன் 10 பிரிவுகளின்கீழ் மற்ற ஸ்டார்ட் அப்களும் இடம்பெற்றுள்ளன. ஆசிய பசபிக் பகுதிகளைச் சேர்ந்த 17 நாடுகளில் இருந்து நிறுவனங்கள் தேர்வுசெய்யப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
2017-ம் ஆண்டு, ராஜமனோகர், சோமசுந்தரம், சஞ்சய் குமார், சண்முகசுந்தரம் ஆகியோரால் சென்னையில் ’Aqua Connect நிறுவப்பட்டது. இது இந்தியாவில் விவசாயிகள் மீன் வளர்ப்பில்
ஈடுபட்டு லாபம் அடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகிறது.
இந்த ஸ்டார்ட் அப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயிரினங்களுக்கு ஏற்படும் நோயைக் கணித்து, தண்ணீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்து, விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க உதவுகிறது. FarmMOJO என்கிற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி குஜராத், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் மதிப்பைக் கூட்டியுள்ளது.
இதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் தொலை நுண்ணுணர்வு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் (Satellite Remote Sensing Technology) பயன்படுத்துகிறது.
விவசாயிகளிடையே மீன் மற்றும் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 35,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்துள்ளது.
சந்தை இணைப்பு, நிதி, காப்பீடு போன்ற அம்சங்களில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. Aquaconnect சிஇஓ மற்றும் இணை நிறுவனர் ராஜாமனோகர் சோமசுந்தரம் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றது பற்றி கூறும்போது,
”Forbes Asia 100 to watch பட்டியலில் உள்ள வெகுசில விவசாய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்’களில் நாங்களும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உலகளவில் மீன் வளர்ப்புப் பிரிவில் 20 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. இந்திய சந்தையில் மீன் வளர்ப்பு மதிப்புச் சங்கிலியுடன் தொடர்புடையவர்களிடையே வெளிப்படைத்தன்மை, கண்டறியக்கூடியத்தன்மை, ஊகிக்கும்தன்மை ஆகியவற்றைக் கொண்டு சேர்த்து இந்தப் பிரிவை மேம்படுத்துவதே Aquaconnect நோக்கம். ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை எங்கள் முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறோம்,” என்றார்.
அவர் மேலும் இது தொடர்ந்து கூறும்போது, தரவுகள் சார்ந்த அணுகுமுறையுடன் மீன்வளர்ப்புத் துறையை மேம்படுத்தவேண்டும் என்கிற இந்திய அரசின் நோக்கத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 35,000-க்கும் அதிகமான விவசாயிகள் தொழில்நுட்ப உதவுயுடன் வருவாயை அதிகரித்துக்கொள்ள உதவியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
Aqua Connect பின்னணி
இந்தியாவில் உள்ள பெரும்பாலான கடல்சார் பண்ணை விவசாயிகள் லாபகரமான சந்தைப்பகுதியை அணுகவும் மேம்பட்ட இறால் வளர்ப்பு நடைமுறைகளை அணுகவும் போராடி வருகின்றனர். எனவே இறால்களை இனப்பெருக்கம் செய்யும் குஞ்சு பொரிப்பகம், குளங்களில் அவற்றை வளர்த்தல், உற்பத்தியை விற்பனை செய்தல் என ஒட்டுமொத்த மதிப்பு சங்கிலியையும் ஒழுங்குப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக Aqua Connect
துவங்கப்பட்டது.
2017ல் ராஜ் மனோகர், சஞ்சை குமார் மற்றும் சண்முக சுந்தர ராஜ் ஆகியோரால் துவக்கப்பட்ட அக்வாகனெக்ட், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மேடை மூலம், கணிப்புத்திறன் கொண்ட எஸ்.ஏ.ஏ.எஸ் கருவிகள் மூலம் ஆசியாவில் உள்ள விவசாயிகளை இணைப்பதோடு, ஆம்னிசேனல் சந்தை வாய்ப்பையும் வழங்குகிறது.
சென்னையைச் சேர்ந்த ’அக்வாகனெக்ட்’, ஆரம்பத்தில் ப்ரீ சீட் நிதியின் ஒரு பகுதியாகவும் சேவை வாயிலாக ஈட்டப்பட்ட வருவாயையும் கொண்டு 2 கோடி ரூபாய் நிதி உயர்த்தியது. பின்னர், 2019ல் ஆம்னிவேர் மற்றும் HATCH உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 1.1. மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.