சரக்கு லாரி போக்குவரத்தில் ஓலா போல் செயல்படும் ‘RapidGo' தொடங்கிய கோவை இளைஞர்!
நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஓலா, ஊபர் போன்ற டாக்சி ஆட்டோ வசதிகளை பயன்படுத்துக்கின்றோம். ஆனால் அதுவே சரக்குகளை இடம் மாற்றம் செய்ய, போக்குவரத்து சீரமைப்பு இல்லை என்பதால் லாரி போக்குவரத்தை மையமாகக் கொண்டு ஸ்டார்ட்-அப் துவங்கியுள்ளார் கோவை இளைஞர்.
ராபிட்கோ (Rapidgo) நிறுவனர் விக்னேஷ், 2013ஆம் ஆண்டு தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சில வருடங்கள் பெருநிறுவனங்களில் பணிப்புரிந்து வேலை வாய்ப்புகள் வளர்ந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும், தான் சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணத்துக்கு திரும்பியுள்ளார்.
“பள்ளி கல்லூரி படிக்கும் பொழுதே சொந்த நிறுவனம் அமைக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது, ஆனால் அதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. படிப்பு முடிந்தவுடன் சுய தொழில் துவங்கி தோல்வியை தழுவ விருப்பமில்லை,” என்கிறார் விக்னேஷ்.
இதனால் சில வருடம் பணியில் இருந்து கொண்டே ஸ்டார்ட்-அப் பற்றிய தகவல்களை சேமிக்கத் துவங்கினார் இவர். முதல் பணியை பெங்களூரில் துவங்கிய விக்னேஷ், ஐஐம் பேகலூரில் நடப்பெற்ற ஸ்டார்ட்-அப் மாநாட்டில் ஒவ்வொரு வாரமும் கலந்துகொண்டு சுயதொழில் பற்றிய அறிவையும் திறமையும் வளர்த்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் நெட்வர்க்கிங் வளையத்தையும் அமைத்துக்கொண்டார்.
3 வருட பணிக்காலத்திற்கு பிறகு வெளிநாட்டு பயணம் அல்லது சுயதொழில் என இரண்டு வாய்ப்பு அவரிடமிருக்க, சுயதொழிலை தேர்ந்தெடுத்து பணியில் இருந்து விலகினார்.
கடந்த 30 வருடங்களாக வர்த்தகத் துறையில் இருக்கும் தன் தந்தைக்கு எப்பொழுதுமே சிக்கலாக அமைவது சரக்குகளை இடம் மாற்றுவது தான். இத்தனை வருடம் தொழில் செய்தும் இந்த சிக்கலுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தே, லாரி துறையை சீரமைக்க முடிவு செய்ததாக தெரிவிக்கிறார் விக்னேஷ். தன் தந்தைக்கு மட்டும் இன்றி பல வியாபாரிகளுக்கு இது பிரச்சனை என்பதை உணர்ந்து இதை துவங்கியுள்ளார்.
“வேலையை விட்டு 10 மாதம் நான் என் தொழிலை துவங்கவில்லை, லாரி மற்றும் டிரக் சேவைகளின் சூழலை புரிந்துக்கொள்ள நெடுஞ்சாலையில் நின்றுக்கொண்டு வேறு மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகளில் ஏறி பயணிப்பேன்,” என்கிறார்.
வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்ய குறைந்தது 3 நாட்கள் ஆகிறது, இதில் லாரி ஓட்டுனர்கள் எங்கு தங்குகிறார்கள், சரக்குகள் எப்படி ஏற்ற இறக்கம் செய்யப்படுகிறது என்பதை தெளிவாக ஆராய்ச்சி செய்துள்ளார் இவர். இந்த லாரி துறையில் தொழில்நுட்பத்தை இணைக்க வேண்டும் என்பதே இவரது நோக்கம், அதற்கு இத்துறையின் தன்மை முழுமையாக புரியவேண்டும் என தெரிவிக்கிறார் விக்னேஷ்.
10 மாதம் இதுப்போன்று லாரிகளில் பயணம் செய்து இன்னும் பல ஸ்டார்ட்-அப் பட்டறைகளுக்குச் சென்று தகவல்கள் சேமித்து 2017 ஏப்ரல் மாதமே ’RapidGo’ நிறுவனத்தை துவங்கினார்.
“பெரும்பாலான லாரி ஓட்டுனர்களிடம் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லை, நம் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வங்கிக்கும் இத்துறையில் தொழில்நுட்பத்தை புகுத்துவது அவசியம்,” என்கிறார்.
ராபிட்கோ நிறுவனத்தின் செயல்பாடு
ஊபர், ஓலா நிறுவனம் ஓட்டுனரையும் பயணிகளையும் இணைக்கும் செயலையே ராபிட்கோ லாரிகளுக்கு செய்கிறது. மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் லாரிகளுக்கு மாதத்தில் 15-20 நாட்கள் மட்டுமே சரக்குகளை எடுத்துச் செல்லும் வேலை கிடைக்கிறது. மீதம் நாட்களில் ஏஜென்ட் அலுவலகம் அல்லது ஷெட்டுகளில் வேலையில்லாமல் நிற்கிறது. இதற்கு போதிய தொடர்புகள் இல்லாததே காரணம் என தெரிவிக்கிறார் விக்னேஷ்.
“உதாரணமாக சென்னை தாம்பரத்தில் லாரி இருக்கிறது என்று மதுரவாயிலில் இருக்கும் சரக்கு நிறுவனர்களுக்கு தெரியாது. இவர்களுக்கான தொடர்பை உருவாக்குவதே ராபிட்கோ,” என்கிறார்.
பெரும்பாலான ஓட்டுநர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லாததால் செயலி தொழில்நுட்பத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. மாறாக ஜிபிஎஸ் டிராக்கரை லாரியில் பொருத்தி அதற்கான நேரலை டிராக்கிங் செயலியை வைத்து லாரியின் போக்குவரத்தை கண்காணிக்கின்றனர்.
மேலும் வலைத்தள சாட் வசதி மூலம் புக்கிங் செய்யும் வசதியையும் இந்நிறுவனம் இணைத்துள்ளது. இதன் மூலம் லாரி உரிமையாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புக் கிடைப்பதோடு சரக்குகளை இடம் மாற்ற கூலியும் குறையும் என்கிறார் இவர்.
தனியாக தொழில் துவங்கிய விக்னேஷ், லாரி உரிமையாளர்கள் பலரின் தொடர்புள்ள ஒரு நண்பர் கிடைக்க அவரை தன் நிறுவனத்திம் துணை நிருவனராக சேர்த்துக்கொண்டார் விக்னேஷ். சுய சேமிப்பில் துவங்கி, துணை நிறுவனரிடம் முதலீடுப் பெற்று அவரின் 100 டிரக்குகளையும் ராபிட்கோ உடன் இணைத்துள்ளார். அனைத்து லாரிகளிலும் ஜிபிஎஸ் வசதிகளை போருத்தியுள்ளது இந்நிறுவனம்.
இந்தியா முழுவதும் இவரது சேவை துவங்க, நேப்பாள், பங்களாதேஷ் பூட்டானையும் தொட்டுவிட்டது RapidGo. 1200க்கும் மேலான லாரிகள் இவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதோடு 1000 பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளுக்கும் ஜிபிஎஸ் சேவையை வழங்கி வருகிறது இந்நிறுவனம். இன்னும் சுலபமாக தொழில்நுட்பத்துடன் இணைக்க தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறுகிறார் விக்னேஷ்.