‘குழந்தைகள், வாயு & கொரோனா’: சண்டையில் வெல்லப் போவது யார்?
உங்கள் குழந்தைகளுக்கு கொரோனா பற்றி சொல்லித் தர வருகிறார் சூப்பர் ஹீரோ வாயு!
“குழந்தைகள், வாயு & கொரோனா: சண்டையில் வெல்லப்போவது யார்?”
இது கொவிட்-19 விழிப்புணர்வுக்கான ஒரு காமிக் புத்தகம். இதில் வரும் வாயு, சிறப்பான பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாடுபடும் ஒரு சூப்பர் ஹீரோ. கொரோனாவை அவர் வெல்வாரா? இந்த காமிக் புத்தகம் எதற்காக?
கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே கவலையும், அச்ச உணர்வும் வளர்ந்து வருவது நாம் அறிந்ததே. நாளிதழ்கள், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகத்தின் வாயிலாக மக்கள் இதுபற்றிய விழிப்புணர்வை பெற்று வருகின்றனர். வயது முதிர்ந்தவர்கள் முதல் குழந்தைகள் வரை, கொரோனா வைரஸ்தான் தற்போது அவர்களின் விவாதப்புள்ளியாக உள்ளது.
ஆனால், குழந்தைகளால், குறிப்பாக 12 வயதுக்கு கீழே உள்ளவர்களால் கொரோனா பற்றிய கவலையை உணர முடியவில்லை. இதைப் பற்றி அவர்களுக்கு புரியாததால் இனம்தெரியாத அச்சத்துடன் இருக்கிறார்கள். எனவே, பெற்றோர் குழந்தைகளிடம் கொரோனா வைரஸ் பற்றி பேச வேண்டும். அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து, தெளிவுபடுத்தினால் குழந்தைகள் பயப்பட மாட்டார்கள்.
பெற்றோர் வேறு வேலைகளில் ஈடுபட்டு இருக்கும்போது, அவர்களால் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடிவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுநிலை நிறுவனம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவை சேர்ந்து கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த காமிக் எனப்படும் சித்திரத்தொடரை உருவாக்கி உள்ளன.
கொரோனாவை தடுத்து முறியடிக்கும் ஹீரோ வாயுவின் வாயிலாக குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பற்றி சுவாரசியமான வகையில் கற்பிக்கவும், விழிப்புணர்வு செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் இந்த காமிக் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் வசிக்கும் வாயு மொத்த உலகத்திற்குமானவர். சிறந்த பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்காக உழைக்கும் சூப்பர் ஹீரோ அவர்.
திடீரென ஏற்படும் பீதி, அச்சத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக போரிடவும் அவர் அழைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு செல்லும் காமிக் கதை கொரோனாவைப் பற்றி குழந்தைகளுக்கு சுவாரசியமாக கதை சொல்கிறது.
விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காமிக் புத்தகத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து, குழந்தைகளை வாசிக்க செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் : https://www.mohfw.gov.in/pdf/Corona_comic_PGI.pdf