சிறிய நிறுவனங்களுக்கு உதவ Zoho கட்டண தள்ளுபடி திட்டம் அறிவிப்பு!
சிறு நிறுவனங்கள், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஜோஹோ நிறுவனம், 3 மாதங்களுக்கு மென்பொருள் சேவையை இலவசமாக பயன்படுத்த வழி செய்யும் அவசரத் திட்டத்தை அறிவித்துள்ளது.
வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள் சேவைகளை வழங்கி வரும் ஜோஹோ கார்ப்பரேஷன், கொரோனா பாதிப்பை சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ள உதவும் வகையில், சிறு வணிக அவசரகால உதவி திட்டத்தை ( இ.எஸ்.ஏ.பி) அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, 25 ஊழியர்கள் அல்லது அதற்கும் குறைவாகக் கொண்ட கட்டணம் செலுத்தும் தகுதி வாய்ந்த 20,000 வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் தற்போது பயன்படுத்தி வரும் ஒவ்வொரு மென்பொருள் சேவைக்குமான, கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு தள்ளுபடி செய்வதாக ஜோஹோ தெரிவித்துள்ளது.
"வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் ஏற்கனவே வருவாய், ரொக்க புழக்கத்தின் பாதிப்பை உணர்ந்துள்ளன. நிலைமை எப்போது சீராகும் எனத்தெரியாதது சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது,” என்று ஜோஹோ இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
"சிறிய நிறுவனங்கள் தாக்குப்பிடித்து நிற்க, நாங்களும், மற்ற நிறுவனங்களும் செய்யும் ஒவ்வொரு உதவியும், இந்நிறுவனங்களுக்கு நிதி நோக்கிலும், உணர்வு நோக்கிலும் உதவியாக இருக்கும். இந்த நெருக்கடியில் நாம் ஒன்றாக இருக்கிறோம். ஒவ்வொரு நிறுவனத்தின் பங்களிப்பும், இந்த தொற்றுநோய் நெருக்கடியை நாம் எதிர்கொள்ள உதவும்,” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சொந்த நிதியில் துவங்கி, 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜோஹோ, 180 நாடுகளில், 50 மில்லியனுக்கு மேல் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. துவக்கம் முதல் ஜோஹோ வர்த்தக நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நெருக்கடியான சூழலில், சிறு நிறுவனங்கள் நிதிச்சுமையை எதிர்கொள்ள உதவும் வகையில் கட்டணம் தள்ளுபடி செய்யும் இ.எஸ்.ஏ.பி திட்டத்தை ஜோஹோ அறிவித்துள்ளது.
"ஒரு சில தொழில்கள் இந்த நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த தள்ளுபடித் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
“அதிக சிறு தொழில் வாடிக்கையாளர்களுக்கு உதவ விரும்பினாலும், மிகவும் தேவை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் ஜோஹோ, அனைத்து வகை நிறுவனங்களும் தொலைதூர பணியை மேற்கொள்ள உதவ 11 கூட்டுமுயற்சி சேவைகள் அடங்கிய ரிமோட்லி (Remotely) சேவையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சேவைக்கான பயனாளிகள் பெருகி வருவதோடு, நிறுவனத்தின் ஜோஹோ மீட்டிங் சேவையும், தினசரி 1,000 % புதிய பயனாளிகளைப் பெற்று வருவதாக ஜோஹோ தெரிவித்துள்ளது.
தொகுப்பு: சைபர்சிம்மன்