‘21 நாள் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை’– மத்திய அரசு விளக்கம்!
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று ஊடகங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தால் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜிவ் கௌபா மறுத்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் பணியகம் (PIB) ட்வீட் செய்துள்ளது.
"21 ஊரடங்கு காலம் முடிந்தபிறகு அரசாங்கம் அதை நீட்டிக்கும் என வதந்தி பரப்பப்படுகிறது. ஊடகங்களிலும் இந்தத் தகவல் வெளியிடப்படுகிறது. இந்தத் தகவல் ஆதாரமற்றது என்று அமைச்சரவைச் செயலர் மறுத்துள்ளார்,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை சோதனை செய்வதே 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் நோக்கம்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையை இழந்த காரணத்தால் பெருநகரங்களில் இருந்து தங்களது கிராமங்களுக்கு பெருந்திரளாக அணிவகுத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர். மளிகைப் பொருட்களுக்கும் தங்குமிடங்களுக்கும் செலவிட முடியாததால் பலர் நகரங்களில் இருந்து வெகு தொலைவில் தங்களது கிராமங்களில் உள்ள வீடுகளை நோக்கி செல்வதில் தீவிர முனைப்பு காட்டுகின்றனர்.
மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து உட்பட பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டதால் பலர் இத்தகைய நீண்ட நெடிய பயணத்தை நடந்தே கடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட 12 பேர் உத்தரகாண்டில் இருந்து உத்திர பிரதேசத்தில் உள்ள தங்களது கிராமமான சகாரான்பூர் பகுதிக்கு நடந்தே சென்றுள்ளனர். இந்த 200 கி.மீ தொலைவுப் பயணத்தை பிஸ்கெட் மற்றும் ஒருவேளை உணவு மட்டுமே உட்கொண்டு மிகுந்த சிரமத்துடன் நான்கு நாட்களில் கடந்துள்ளனர்.
ஊரடங்கு பிறப்பிக்கபட்டதால் ஏற்பட்ட பதட்டமான சூழல்களுக்கிடையில் தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளிகள் தங்களது குடும்பங்களுடன் நடந்தே செல்வதைப் பார்க்கமுடிகிறது. சென்னையில் மட்டும் சுமார் 4,500 தொழிலாளர்கள் வீடு திரும்ப முயற்சித்து ரயில் நிலையத்திலேயே சிக்கித் தவிக்கின்றனர்.
பல தொழிலாளர்கள் ஊரடங்கின் காரணமாக வேலைகளை இழந்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்படும் அபாயமும் அச்சமும் இந்தச் சூழலை மேலும் மோசமாக்குகிறது. இதனால் இவர்கள் தங்களது கிராமங்களுக்குத் திரும்புவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மார்ச் 26ம் தேதி புலம்பெயர்ந்த தொழிலாளார்கள் மற்றும் தினக்கூலிகளுக்கு உதவும் வகையில் ரூ.1.7 லட்சம் கோடிக்கு நலத்திட்ட உதவிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஏழை மக்கள் அடுத்த மூன்று மாதங்கள் இந்த நிலையை சமாளிக்கும் வகையில் உணவு ஏற்பாடும் ரொக்கப்பணம் வழங்கப்படும் நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
தகவல்: பிடிஐ